Tuesday, September 19, 2017

அழைப்பாயா?


மோகன மதுபாலா..! மேக வர்ணா..! மோக யதுகிரிநாதா..! மதுரநாதப்ரபு..! வா வா..! எனை அழைக்க! பிரிவிலுழல்கிறேனே, காணவில்லையா? எரிநெய்யாய் எரிகிறேனே, சுடவிலையா? நீயும் நானுமென ஒரு பறவைக்கூட்டில் அமர்ந்து குழலிசைக்க மடிமேல் துயிலக் கூறாயா?

பண்டரிநாதா..! அழகே..! அமுதே..! குழல் குமுகா..! தழல் தழுவிப் புகைகிறேனே? எங்கே சென்றாய்? நீலத்திருமேனி தவழக் கைகளில் அள்ளி அணைத்திடவே ஆசை பெருகுதடா..! ஷ்யாமா! சாரதகுரு! குசேலநண்ப! குருகோவிந்தா! குன்றேறிக் குலம் காத்த கருமணியே! ரதிவிஹாரி..! ரதிபரோபகாரி..! ரதிசாரதி..! ரதிரதிரதி..! அன்னதாதா..! அமுதபாதா! மதுசூதனா! கிரிதரா..! கிருஷ்ணதேவரே...!

பாண்டுரங்கா! பாரதராஜா! மங்கை மணாளா! மீராப்ரேமா! ஆண்டாள் ஆனந்தா! மயில்பீலி மதுரா மன்னா! ப்ருந்தாவனப்ரபு! ராமா! ராதாநாதா..! அய்யா! அம்மா! அண்ணா..! நீயே எல்லாம்..! நீயே எங்கும்..! காணுமிடமெலாம் கண் காணும் கார்முகிலே! நீரும் நீயே! அனலும் நீயே! அங்கும் நீயே! இங்கும் நீயே! எங்கும் நீயே! நானும் நீயே..!

மலர் சொரிந்து நிறைக்கிறேன்! மரெங்கும் சந்தனம் பூசுகிறேன்! மாலே! மதுரையம்பதி அன்னை அண்ணா!  பாற்கடல் பரந்தாமா..! கோவிந்தா! ரங்கா! காவேரி மைந்தா! வா..! வா..! முதற்கரிச்சான் கூவும் முதற்சொல்லே! வானெங்கும் நிறைந்த ஓங்காரமே! முத்தமிட்டுக் கொஞ்சக் கூறாயா? அச்சுதா! தாமோதரா! நாராயணா! அனந்தா! பத்மநாபா! மோகினிரூபா!

தேனே! தென்னனலே! நூறாயிரம் ரூபம் காட்டும் மாயவா! துவாரகையே! பாஞ்சன்யமே! பாலே! கொழு நெய்யே! செழுநுரையே! நிறைமணமே! வல்லபா! தீராப் பெயர்களில் உனை அழைக்க அழைக்க நாவினிமை சொல்லினிமை தமிழினிமை கோடி மடங்கு!

யசோதபுத்ர! பலராம சோதரா! நந்த மைந்த! கோகுலப்ரிய! ஆயர்பாடி ஆவே! வில்லிபுத்தூர் மருகா! ஸ்ரீ ரங்கராஜா! திவ்யபுருஷா! மாலை சூடி அழகேற்றியவளைக் கொண்டு சென்ற ராஜமன்னாரே! போதை தெளியவிலையே! யாதும் தெளிவில்லையே! யாதவ கோவே! கோபாலா! கோபாலா! ஆலிலை அமர்ந்த அன்பே! வாமனா! வா! வா! கேடில் விழுச்செல்வமே! கரி காக்க கருடனேறி வந்த கருணையே!

காதலா! காதலா! கோபியர் கொஞ்சும் ரமணா! கொஞ்சம் வாராயா? கொஞ்ச வாராயா? தஞ்சம் தாராயா? துஞ்சப் பாராயா?

சுதாகரா! சுலோக்‌ஷணா! சுத்தப்ரம்மா! சகல்லோக சத்வமே! சத்யனே! சமுத்ரதேவ! சுகராகா! ஸ்ருதிபாவா! உனுள் எனை உள்ளிழுத்துக் கொள்ள மாட்டாயா? பரிதி மேலெழு கதிரே! பனியென உறிஞ்சிக் கொள்ளாயா? குயிலே! குறும்பே! 

Monday, September 18, 2017

நீலாம்பல் நெடுமலர்.20

காற்றில்
குளிர் கனத்திருக்கும்
உன் மாநகரில்
செம்பொளி
பொழிந்து
மௌனித்திருக்கும்
உன் வீதியில்
பனிசூடிய மலர்கள்சூழ்
உன் வீட்டில்
உன் மூச்சுக்காற்று
வட்டமிடும்
உன் அறையில்
வெண்ணுரை மெத்தை
இட்ட
உன் படுக்கை மேல்
கடல் நீலத்தில்
பூக்கள் வரைந்த
உன் போர்வைக்குள்
கதகதப்பாய்
உறங்குகிறாய்.

மேகங்கள்
விரைந்து நகரும்
இருள் விடிகாலை
வான் கீழ்
தனித்திருக்கிறேன்.
***

உன் வீடு
உன் இருப்பால்
உன் இன்மையால்
உன் சொற்களால்
உன் மௌனங்களால்
உன் சிரிப்புகளால்
உன் கண்ணீரால்
நிரம்பியுள்ளது.

நான்
உன்னால்
நிரப்பப்பட்டுள்ளேன்.
***

இம்மொழியிலா
நீ
வெளிப்பட்டாய்?

இச்சொற்களிலா
உனைப்
பேசினாய்?

உன்
இதழ்வழி
கசியும்
பேறுற்ற
மதுர பாவனைகள்
இவ்வார்த்தைகள் தாமா?

கனி மேலமர்ந்த
பழஈ போல்
நானும்
சுவைத்தினிக்கிறேன்.
***

Tuesday, September 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.19.

னக்கென ஒரு மொழியை உருவாக்கி நன்கு பயின்றும் வைத்திருக்கிறாய்.

மெல்லச் சிரித்தல், புருவங்களை நெரித்தல், கண்களைச் சுருக்கி உதடுகளைக் குறுக்கி வைத்துக் கொள்ளல், காது மடலூரும் சிறு முடிக் கற்றையைச் சுருட்டிப் பின் தள்ளல், இருபுறமும் விழியுருட்டித் திசை காட்டல், ஏதறியேன் எனல் போல் தோள் குலுக்கல், எழுத்துக்கள்.

தேறல் கள் மாந்திய செங்கரும்பு போன்ற இதழ்களைச் சுளித்தல், கணு கழிந்த மூங்கில் தோள்களை முறுக்கி மிரட்டல், நிலம் துளைத்த நெடுநெல் நாற்று விரல்களால் காற்றில் இசையெழுப்பும் சமிக்ஞைகளை இயற்றல், முழுதாய்த் திரும்பிச் சென்றபின்னும் முகம் காட்டிப் பழிப்பூட்டல், சொற்கள்.

நீலிரவு நீண்டெழ நில்லா உரையாடலில் வான் விரி மீனளவு உணர்வு முகங்கள், செலுமுன் விரைந்து மீண்டு முழுதாயிடும் ஈர முத்தம், சிறு பரு ஒன்றெழக் காரணம் வினவ கதிர்மறை மலைமுகட்டுச் செம்மை அடை சிரம் கவிழ்தல், யாரோ எனக் கண்டு பின் யானே எனக் கண்டு நானே என அணைத்தென் முதுகில் உன் மாரெழ இறுக்கும் இறுக்கம், வாக்கியங்கள்.

Sunday, September 10, 2017

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்.


அமெரிக்கக் கருப்பினக் கவிஞர். உலக வரலாற்றின் கொந்தளிப்பான காலகட்டத்தில் வாழ்ந்த கவிஞர். அவருடைய இருவழி தாத்தாக்களும் வெள்ளையர்களாகவும் இருவழி பாட்டிகளும்
கறுப்பினத்தவர்களாகவும் இருந்தபடியால் அடையாளக் குழப்பத்தில் வாழ்ந்தவர். 

ஆனாலும் தம்மை கறுப்பினத்தவராகவே சொல்பவர். கவிமனம் கொண்டவர் என்பதால் எவரையும் வெறுக்க இயலாதவர்.
நம்பிக்கையுடன் கறுப்பரின் நல்வாழ்வுக்கு கனவு கண்டவர்.
அவருடைய கவிதைகளிலிருந்து தெரிந்து கொள்ள முடிவன இவையே.


சில மொழிபெயர்ப்புகள்.


1. சந்திப்பு முனை.

என் வயதான மனிதன்
ஒரு வெள்ளையின வயதானவன்.
மற்றும் என் வயதான அம்மா
கறுப்பினத்தவள்.

ஒருவேளை என்றாவது
நான் என் வயதான
வெள்ளை மனிதனை
சபித்திருந்தால்,
அவற்றை
நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

ஒருவேளை என்றாவது
என் வயதான கறுப்பு அம்மாவை
சபித்திருந்தால்,
அவள்
நரகத்தில் இருக்க
விரும்பியிருந்தால்,
அத்தீய விருப்பத்திற்காக
வருந்துகிறேன்.
மற்றும் அவள் நலத்தை
விழைகிறேன்.

என் வயதான மனிதன்
இறந்தது
ஒரு நல்ல பெரிய வீட்டில்.
என் அம்மா
இறந்தது
ஒரு குடிசையில்.
நான் எங்கே இறக்கப் போகிறேன்
என்று வியக்கிறேன்,
கறுப்பனாகவோ வெள்ளையனாகவோ
நான் இல்லாதிருப்பதால்.


2. குடியரசு.

இன்று, இவ்வருடம்
குடியரசு வரப்போவதில்லை.
சமரசத்தாலோ, பயத்தாலோ
என்றுமே.

மற்றொருவன்
கொண்டிருப்பதைப் போல
நானும் உரிமை கொண்டுள்ளேன்.
இரண்டு பாதங்களால்
நிற்பதற்கு.
மற்றும்
நிலத்தை உரிமை கொள்வதற்கு.

ஒவ்வொன்றும் அதற்கான
காலத்தை
எடுத்துக் கொள்ளட்டும்
என்று சொல்லும்
மக்களால்
நான் சலிப்புற்றுள்ளேன்.
நாளை என்பது மற்றுமொரு நாளே.
நான் இறந்தபின் கிடைக்கும்
என் விடுதலையை
நான் விரும்பவில்லை.
நாளைய உணவின்
மீது
நான் இன்று வாழவியலாது.

சுதந்திரம் என்ற
ஒரு
வலுவான விதை
ஒரு
உன்னதத் தேவையின்
மீது
விதைக்கப்படுகின்றது.
நானும்
இங்குதான் வாழ்கிறேன்.
நானும்
சுதந்திரத்தை விழைகிறேன்,
உங்களைப் போல.


3. கனவுகள்

கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்

ஒருவேளை
கனவுகள் மரித்தால்,
வாழ்வு,
முறிந்த சிறகுகளையுடைய
பறவையாகி விடும்
பறக்கவியலாத ஒன்றாய்.
கனவுகளை
வேகமாகப்
பிடித்துக் கொள்ளுங்கள்.

கனவுகள்
போய் விட்டதெனில்,
வாழ்வு,
பனிமூடி உறைந்த
தரிசு நிலமாகி விடுகின்றது.


4. சலிப்பு

எப்போதும்
ஏழையாகவே
இருந்து கொண்டிருப்பது
சலிப்பாய் இருக்கின்றது.


5. இறுதி வளைவு

வளைவில் திரும்புகையில்
உங்கள் மீதே
நீங்கள்
மோதிக் கொண்டால்,
நீங்கள் அறிவீர்கள்
விடுபட்டிருந்த
அத்தனை வளைவுகளிலும்
நீங்கள்
திரும்பி விட்டிருந்தீர்கள்
என்று.

6. செல்மாவுக்காக..

செல்மா, அலபமா
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.
சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்...” என்று.
லண்டன், பாரீஸ்
போன்ற இடங்களில்
பிள்ளைகள் சொல்கிறார்கள்,
”சிகாகோ, ந்யூயார்க்
போன்ற இடங்களில்...” என்று.


7. நான் கனவு காண்பதைத் தொடர்வேன்

என் கனவுகளை எடுத்து
அவற்றை
ஒரு வெண்கலக் குடுவையாக்குவேன்
மையத்தில் அழகான ஒரு சிலையுடன்
வட்டமான நீரூற்றுடன்.
மற்றும் ஓர் உடைந்த மனதுடன்
ஒரு பாடல்.

உன்னைக் கேட்பேன்:
”என் கனவுகளைப்
புரிந்து கொண்டாயா..?”

சில சமயங்களில்
நீ சொல்கிறாய் ஆம் என,
மற்றும்
சில சமயங்களில்
நீ சொல்கிறாய் இல்லை என,
எப்படியாகிலும்
அது நான் பொருட்படுத்தத் தக்கதல்ல.

நான்
கனவு காண்பதைத் தொடர்வேன்.


8. என் மக்கள்.

இரவு அழகானது,
என் மக்களின் முகங்களைப் போல.
நட்சத்திரங்கள் அழகானவை,
என் மக்களின் கண்களைப் போல.
சூரியனும் கூட அழகானது,
என் மக்களின் ஆன்மாக்களும் அழகானவை.



Thursday, August 17, 2017

சோகமயமான கவிதை.


வ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.

எழுத, உதாரணமாக:
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது.
மற்றும் நட்சத்திரங்கள் நீலமாய்த் தொலைவில் நடுங்குகின்றன.

இரவில் காற்று ஆகாயத்தில்
பாடிக்கொண்டே சுழல்கின்றது.

(இத்தகைய) இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை விரும்பினேன்,
சிலசமயங்களில் அவளும் என்னை விரும்பினாள்.

இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளுக்குள் பொத்திக் கொண்டேன்.
முடிவேயில்லாத வானின் கீழே
நான் அவளைப் பலமுறை முத்தமிட்டுள்ளேன்.

அவள் என்னை விரும்பினாள்,
சிலசமயங்களில் நானும் அவளை விரும்பினேன்.
எப்படி அவளுடைய நீளமான நிலைத்த
விழிகளை
நான் விரும்பாமல் இருந்திருக்க முடியும்?

இவ்விரவில் சோகமயமான கவிதையை
நான் எழுத முடியும்.
நான் அவளை (என்னுடன்) வைத்துக் கொண்டிருக்காமல்
இருப்பதை நினைப்பதற்கு.
நான் அவளை இழந்து விட்டதை
உணர்வதற்கு.

மகத்தான இரவைக் கேட்பதற்கு, அவளில்லாமல்
மேலும் மகத்தானதாக ஆன இரவு.
மற்றும் கவிதை ஆத்மாவில் விழுகின்றது,
பனித்துளி புல் மேல் விழுவதைப் போல்.

அவளை என்னுடன் நிறுத்திக் கொள்ளாத என் காதலை
விட, வேறெது பொருட்படுத்தத் தக்கது?
இரவு நட்சத்திரங்களால் நிறைந்துள்ளது,
அவள் என்னுடன் இல்லை.

அவ்வளவு தான்.
தொலைவில் யாரோ பாடுகிறார்கள். வெகு தொலைவில்.
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.

அவளை என்னருகே கொண்டு வந்து விடுவதைப் போல,
என் கண்கள் அவளைத் தேடுகின்றன.
என் இதயம் அவளைத் தேடுகின்றது,
மற்றும்
அவள் என்னுடன் இல்லை.

அதே மரங்களை வெளிச்சப்படுத்துகின்ற
அதே இரவு.
நாங்கள்
யாராக இருந்தோமோ,
அவர்களாக இல்லாமல் போனோம்.

உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஆனால், அவளை நான் எவ்வளவு விரும்பினேன்...!
என் குரல்
அவள் செவிகளைத் தொடுவதற்காகக்
காற்றைத் தேடியது.

வேறு ஒருவருடையவள்.
அவள் வேறு ஒருவருடையவள் ஆவாள்.
ஒருசமயம் என் முத்தங்களுக்கு
உடையவளாய் இருந்தவள் போல்.
அவள் குரல்,
அவள் மெல்லுடல்,
அவளுடைய கரைகாணவியலாக் கண்கள்.

உண்மை,
நான் அவளை இப்போது விரும்பவில்லை தான்..
ஒருவேளை நான் அவளை விரும்புகிறேன்.
காதல் கொண்டது குறைவு மற்றும்
மறதியோ வெகு காலம்.

ஏனென்றால்,
இது போன்ற இரவுகளில்
நான் அவளை என் கைகளில்
கொண்டிருந்தேன்..
அவளில்லாமல் என் ஆத்மா தொலைந்து விட்டது.

இருப்பினும்,
இதுவே அவள் எனக்குத் தரும்
இறுதி வலியாக இருக்கலாம்.
மேலும்,
இதுவே நான் அவளுக்காக எழுதும்
கடைசிக் கவிதையாக இருக்கலாம்.

- பாப்லோ நெருதா.

பாப்லோ நெருதாவின் The Saddest Poem கவிதையை மொழிபெயர்த்தது.

https://www.poemhunter.com/poem/the-saddest-poem/

Save to PDF