Monday, August 27, 2018

வேனில்தரை மழை.

ண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற 'கீத கோவிந்தம்' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'இன்கேம்..' என்ற பாடலுக்குத் தமிழ் வரிகள் கோர்த்த போது.



ததிகின தகஜனு
ததிகின தகஜனு
தரிகிட ததரின
ததம் தீமத ஆனந்தம்

வந்தான் இங்கே
கண்டான் உன்னை
தந்தேன் என்னை
என்றே சொன்னான்
பெண்ணே உன்னுள்
பொங்கும் இன்பம்
இன்றும் என்றும் பேரின்பம்


உன்னை அன்றி கண்கள் பார்க்காதே
மயிலே... இள வெயிலே...
உன்னை விட்டு எங்கும் போகாதே
ஒயிலே... எழில் குயிலே...


மின்னல் வெட்டும் வேகம் ஆளாச்சே..உன்
மின்னுமிரு கண்கள் வேலாச்சே...
பக்கம் நின்றால் வெக்கம் வேறாச்சே.. நீ
பார்த்துச் சொல்லும் சொற்கள் கேட்க
பாலும் தேனும் போலாச்சே... (உன்னை)

மாலைவரும் நிலவென அழகா
மருண்டுவரும் மானென உருவா
வேளையிது விழும்பனி கனவா
விடைதர விரும்பி வா...

மீனுமது விரும்பிடும் விழியா
மீட்டுவது கரும்பெனும் மொழியா
மீறுவதில் மகிழ்வது வருமா
மிளிரொளி பரவி வா...


நான் நடக்கும் நிலமதைத் தொடருமுன் பார்வை...
நான் முகிழ்க்கும் சிரிப்பதில் மலர்வாள் பாவை... (உன்னை)

காதலினில் கலந்திடும் பொழுதா
காத்திருக்கும் கணங்களும் பழுதா
காலைவரை அணைத்திடு முழுதாய்
கடும்குளிர் கரைக்க வா..


கோபமென எழுவதும் உனதா
கோதைமனம் விழைவதும் எனதா
கோலமிடும் விரலிடை மனதா
கொழுமலர் கனிந்து வா...

வேண்டுமென விரைந்துனைத் தழுவிடும் போது...
வேனில்தரை மழையெனக் கரைவாள் மாது... (உன்னை)

Tuesday, August 21, 2018

உடைந்த மூக்கு.

ணையதளத்தில் துளித்துளியாய் ஆடை விலக்கி பரிநிர்வாணம் அடைபவள், அன்று உடைந்த மூக்குடன் தோன்றினாள். ‘ஜென்னி, என்ன ஆயிற்று உன் மூக்கிற்கு?’ என்று வந்த 7713 பேரும் கேட்டார்கள். ‘உடற்பயிற்சிக்கூடத்தில் தவறி விழுந்து விட்டேன்’ என்று அனைவருக்கும் சொன்னாள். ‘மூக்கைத் துணியால் மறைத்துக் கொள். என் கற்பனைக்கு அது இடைஞ்சல் செய்கிறது’ என்றான் ஒருவன். ‘மூக்கு சரியாகும் வரை பின்புற போஸ் மட்டும் காட்டு’ என்றான் மற்றொருவன். ‘கேமிராவைக் உதட்டுக்கு மேல் கொண்டு போய் விடாதே’ என்றான் இன்னொருவன். பார்வையாளர்கள் எண்ணிக்கை சட்டென 5320 ஆனது. ‘ஜென்னி, இப்போது தான் நீ இன்னும் அழகாய் இருக்கிறாய். மேகங்களில் மிதந்து கொண்டிருந்த பொன்புறா, மரக்கிளைமேல் வந்தமர்ந்தது போல். கைக்கெட்டும் அளவான அழகில்.’ என்றான் 4517-ல் மிஞ்சிய ஒரு கவிஞன். அவனுக்கு மட்டும் இரு முத்த எமோஜிகளும் ஒற்றைத் துளி கண்ணீர் எமோஜியும் அனுப்பினாள். யாரும் ‘டேக் கேர்’ சொல்லவில்லை.

ஒரு கோப்பை தேநீர்.

வா...
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டே
நாம் பேசலாம்..’
என்று அழைக்கிறாய்.

ஒரு கோப்பை தேநீர்
தீர்வதற்குள்
அதன் நுரை அடங்குவதற்குள்
அதன் வெம்மை அணைவதற்குள்
அதன் ஒவ்வொரு துளியையும் விழுங்குவதற்குள்
அதன் அடியாழத்துக் கசடைத் தவிர்ப்பதற்குள்
பேசி முடிப்பவை தானா
நம் சிக்கல்களும்
நம் கருத்து வேறுபாடுகளும்
நம் கோபங்களும்
நம் வெறுப்புகளும்?

எனினும்
என்னை அலங்கரித்துக் கொண்டு
என் கைப்பையை நிரப்பி விட்டு
சென்ற பனியுருண்டை விழாவில்,
என் உடனிருப்புக்கு
நீ
பரிசளித்த
பழுப்பு நிற தணப்பு ஷூ அணிந்து கொண்டு
உன்னுடன்
கைகளைக் கோர்த்துக் கொண்டு
புன்னகை சூடிக் கொண்டு
எதிர்ப்படுவோரின் ‘நல்ல மாலை’க்கு
மெல்லத் தலையசைத்து
நடந்து வருகிறேன்.

தேநீர் கடை
இன்னும்
எவ்வளவு தூரம்?

Friday, August 17, 2018

முல்லை.

ங்கிப் பெருந்திசைகளை அளக்கும் விருட்சங்கள் நிறைந்த இப்பெருங்காட்டில், குகை முகடுகளில் தேன் நிறைந்து ஓயாமல் சொட்டிக் கொண்டிருக்கும் தேன் கூடுகள் அடர்ந்த இவ்விருள் பொழுதில், இடிகளும் மின்னல்களும் வான் நிறைக்கும் இப்பின் மாலை நேரத்தில், உன் காலடித்தடம் பதியும் எனச் சேற்றுக்குழைசல் கலங்கி வழியும் ஒற்றையடிப் பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மதியத்தில் துவங்கிய தூறல் பின் விரைவுற்று, பெருந்துளிகளாகி, சரங்களாகி, ஊற்றி இன்னும் நில்லாமல் பெய்து கொண்டிருக்கிறது. ஒரு சாக்கு மூட்டையைக் கவிழ்த்துக் கொண்டோ, இறுகப் பின்னிய கூடைக்குள் ஒளிந்து கொண்டோ நீ வருவாய் என, ஈரம் மறைக்கும் வெளியைக் காத்திருக்கிறேன்.

முல்லை மணம் மட்டுமே கிளர்ந்திருந்த ஒரு நாளில் நாம் இருவரும் உச்சிக்குச் செல்லலானோம். அப்பாதை, பசித்து வரையாட்டை விழுங்கிப் பின் களைத்துத் தளர்ந்து படுத்திருக்கும் ஒரு மலைப்பாம்பைப் போல் வளைந்து சுருண்டு சென்று கொண்டிருந்தது. விட்டு விட்டு தூறல்கள் விழுந்து கொண்டேயிருந்தன. ஓரங்களில் எல்லாம் துளிகள் சுமக்கின்ற பசும்புற்கள். விளிம்புகளில் புதர்களும், கொத்துகளுமாய் பச்சையின் பல ரகங்கள். பெயரறியாப் பறவைக் குரல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. பாதை சற்று வழுக்கலாக இருந்தது. விரல்கள் பின்னிக் கொண்டபடி நடந்தோம்.

விரைந்து செல்லும் மேகங்கள் முகட்டு நுனியைத் தொட்டுத் தொட்டுச் சென்றன. சட்டென ஒரு கொத்து மழையைச் சிந்தி விட்டு அகன்றன. அங்கும் சில சில் மரங்கள் முளைத்துக் காடாகியிருந்தன. அவற்றை நோக்கிச் செல்கையில், பாதையில் கொஞ்சம் குழைந்திருந்த சேறு வழுக்கிச் சரியப் பார்த்தாய். பின்னிய விரல்கள் இன்னும் இறுக்கமாகி, இடை வளைத்து நிறுத்தினேன். கொஞ்சம் மூச்சைச் சரி செய்து கொண்டு, நிதானித்து, விழ வாய்ப்பிருந்த அடிபாதாளத்தை ஒரு கணம் கண்ணுற்று, கண்களைப் பார்த்து மென் புன்னகை செய்தாய். தொடர்ந்தோம்.

கோடானு கோடி தவளைகள் ‘கொரக்..’, ‘கொரக்...’ என்று சொல்லிக் கொண்டிருப்பதை சற்று நேரம் கழித்தே கேட்டேன். எங்கோ பாறை ஒன்று முழுதருவி ஒன்றுக்குள் யுகயுகமாய் நனைந்து கொண்டிருந்தது; எனினும், முழுதும் கரைந்து விடவில்லை. தடாலென ஒரு பேரிடி. எங்கோ அருகில் மின்னல் இறங்கியிருக்க வேண்டும். வேகமாய் ஒரு மழை வந்து நம்மை முழுதணைத்து முழுதாய் நனைத்தது. தடவி விட்டுப் போகும் ஒற்றை மயில் தோகைப் பிசிறு போல் இம்மழை விலகவில்லை; மாறாக, கொத்துக் கொத்தாய்ச் சின்ன ஊசிகளால் தைத்து தைத்து எடுப்பது போல், கூர் நுனித் துளிகள் குத்திக் குத்திச் சென்றன.

நடுக்கம் மிகை கொள்ள, என்ன செய்தலென்று யோசித்தோம். மீண்டும் வழுக்கல் செறிந்த இறங்கு முகம் வழி சென்று, நாம் பத்திரமாய் அடைந்து கொள்ள அக்குடில் அறைக்குள் விட்டு வந்த கலைந்த படுக்கை போர்வைக்குள் புகுந்து கொள்ளலாம். அன்றேல், இன்னும் கொஞ்ச தூரமே என நெடுநேரம் போக்கு காட்டும் அம்முடியை அடைந்து, நம் பாதங்களுக்கு அடியில் விரியும் பசுங்கிராமங்களையும் விட்டு வந்த தொலை நகரத்தையும் ஒரு கடவுள் பார்வை பார்க்கலாம். இரண்டில் ஒன்று என்றேன்.

நீள் கரும் கூந்தல் திரித்திரிகளாய் நனைந்து ஒட்டி ஒட்டி சொட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒரு மச்சம் மட்டும் பதிந்த முகத்தில் மழை மச்சங்கள் சொட்டிக் கோடாகி விழுந்து கொண்டிருக்க, ஒற்றை மெல்லிய பொன் செயின், நிறைந்த இரு மார்புத் திரள்களுக்கிடையில் தத்தளித்துக் கொண்டிருக்க, உடலொட்டிய உடைகளோடு, உரசுகையில் சப்தித்து எச்சரிக்கும் வளையல்கள் வளைத்த அவ்விரு கைகளையும் முன் நீட்டி, ‘இனியும் நனையாதது எது?’ என்று கேட்டாய். நா நுனி வரை வந்த சொல்லைத் தவிர்த்து, ‘எதுவும் இல்லை’ என்றேன். ‘நீ நினைத்ததை அறிவேன்’ என்பது போல் ஒரு விஷமப் புன்னகை செய்து, முகட்டைச் சுட்டிக் காட்டினாய். மேல் நோக்கி நடந்தோம்.

மரங்களும் சிறு செடிகளும் ஒட்டுண்ணிகளாய்க் கொழுகொம்பை வளைத்து வளர்ந்திருந்த கொடிகளும் தரைப்புற்களும் அடர்பச்சை நிறக் காய்களுமாக, காடு தன் பசும் அரசுக்குள் பல்லாயிரம் பறவைகளும் பல்லாயிரம் விலங்குகளும் பலகோடி பூச்சிகளுக்குமாய் மழைப்பால் அருந்தியது.  பின்மதியம் என்று ஒரு பேச்சுக்குச் சொல்லலாம் எனினும் கதிரின் ஒரு கரம் கூட உள் இல்லை. விரிந்த அகன்ற இலைகள் சுமந்த கொத்துப்புதர்கள் விளைந்த ஓரங்களில், மழைத்தண்ணீர் சிறு ஓடைகளாகிச் சலசலத்துச் சென்றது. அதன் தூய்மையும் செம்மண் நிறமும் வடிந்த குளுமைக்குள் கரைந்திருந்தன. பருத்த அடிமரங்களின் மேலே விரிந்த பேரிலைகள், சேகரித்த துளிகளை இன்னும் சேர்த்து ஊற்றிக் கொண்டிருந்தன.

ஒரு வளைவுக்குப் பின் வலப்பக்கம் திரும்பினோம். ஆம், உச்சியை அடைந்தோம்.  நிறைய கால் படாத புற்களும் கைபடாத பூக்களுமாக மழை வசந்தத்தின் கீழே நாமிருவர் தனித்துக் கிடந்தோம், ஒரு பெரு நாழிகை நேரம். குளிர் மேகங்கள் வந்து வந்து தீண்டிக் குளிரூட்டின. ஈரம் கசகசக்கும் ஆடைகள் சென்றடைந்தன ஓர் ஓரம். மீண்டும் பிள்ளைகள் போல் யாரும் காணவியலா அந்நெடுங்காட்டின் அந்த உயரமான முனையில், பசுந்தரை மண் சேறுகள் உடலொட்ட, மழைக் குளியலுக்கு உள்ளே மெல்ல கரைந்து கொண்டோம்.

Friday, July 20, 2018

நீலாம்பல் நெடுமலர்.39.



ரு மலரின் மலர்மை என்பது தான் என்ன? சூழ் இதழ் மெல்லப் பிரிந்து வளைந்து உள் மகரந்தம் காட்டுமே அதுவா? நறு சுகந்தம் காற்று வெளியில் தூவிப் பரப்புமே அதுவா? ஒற்றைக் காம்பில் மண் ஊன்றி மொட்டவிழ்ந்து சூரியப்பொழிவை அள்ளி அள்ளி அருந்துமே அதுவா? மலர்மையின் உச்சம் என்பதென்ன? அதன் ஒரு நாள் வாழ்க்கையில் அதன் ஆனந்தத் திளைப்பின் பெருங்கணம் என்பது தான் எது? அதை அடையத்தான் சிற்றணுவிலிருந்து முளைத்து வந்ததா அது? அதை அடைந்த பின் உடனே கீழிறங்கத் தொடங்குமா? இனி மீண்டும் அது அடையவே முடியாத அந்த களிப்புத்துளி நீண்டு நீண்டு வாழ்வெல்லாம் திகட்டாதா? உச்சத்தின் பீடத்திலேயே வீற்றிருக்கும் அம்மலர் தான் எது?

எழும் அனலின் அனல்மை என்பது தான் என்ன? சூழ் அனைத்தையும் எரித்துத் தன்னுள் கரைத்து தானாகிச் சுடர்ந்தெழும் கரைதலா? தீண்டும் இன்பம் திகட்டும் இனிமை கொதிக்கக் கொதிக்கக் கட்டியணைத்து உடன் எரிதலின் பதற்றமா? பொற்கட்டி உருகி வானோக்கிச் சுழலும் மஞ்சள் நிலவு தானா? தீச்சுடரின் நுனி நா சொட்டும் நாக நஞ்சின் குளுமை கொண்டிருக்குமா? நீலத்தணல், நெடும் உயரத்தில் நிலை கொண்டலையும் செழும்பிழம்பு தன்னைச் சுற்றிப் பரப்பியிருக்கும் ஒளிர்மை தான் என்ன? செம்பருந்து விழிக்கூர், வனம் விழுங்கும் பூந்தணல், புதுமுளை துளிர்க்கும் காட்டெரி, பொசுக்கிச் சாம்பல் உதிரும் மென்னுடல், நடுக்குறப் பாயு வெம்மை நதியின் வெள்ளம் விழுங்கும் பசி தான் என்ன? அந்நெருப்பின் வழிகுழம்பு பரவி வழிய இப்பூமிப்பரப்பு போதாமல், வானெங்கும் நிறை கதிர்கள் தான் எத்தனை எத்தனை?

மலர்மையும் அனல்மையும் பிணைந்து எடுத்த உருவென்று ஒன்றிருப்பின் அதன் இலக்கணம் தான் என்ன? கதிருண்ட மலரின் அனலும் நீரணைத்த நெருப்பின் குளிரும் வீசும் இரு விழிகள் கொண்ட செம்முகம் அது என்றமையுமா?  முகிலுறைக் குளிர் துளிகளாய்ப் பொழிந்து தெறித்தல் போல் பார்வை மலர் விழிகளென மலர்ந்திருக்குமா? சதைகிழி வாளின் கூர் முனை சுழலும் நாசி என சரிந்திருக்குமா? முற்காலையின் பனித்துளி ஈரம் சுமக்கும் மலரிதழ்களென முத்தியெடுக்க சிவந்திருக்குமா?  தீ அணைக்கும் மென் பஞ்சுக் குழுமமென கன்னம் எழுந்திருக்குமா? சொல்லென முளைக்கும் செந்தேன் துளிகளை ஏந்திச் சுவைக்கும் மடலிரு செவிகளென கிளைத்திருக்குமா? அமுது நிறை இரு குவலயங்கள் துளிர்த்து முகிழ்த்து மெல்ல கனிந்தமைந்த எழிலென நிலை கொள்ளுமா?  செந்தாமரையும் அக்கமலத்தின் மடி தவழ ஒரு குழவியும் தாங்க வழியுங் கொப்பூழென விழுந்தெழுமா? அருளும் அணைக்கும் அணையும் அன்புறும் நெடுங்கரங்கள் அன்னையென அழல் தணிக்குமா? ஊறும் கேணி இறைக்க இறைக்க நிரம்பா தொல்நிலம் முற்றா இளம்புல் மேய் மூதாதைக்கென முளைத்திருக்குமா? தாங்கும் வாங்கும் துயர்க் கரைக்கும் செழுந்துடை வலுவென நின்று உடல் தாங்கியிருக்குமா? பத்துச் சிமிழ் விளக்குகளின் அசையாச் சுடரென இரு தாள் முனைகளில் எழுந்தருளுமா?

தேவி, அனலெழுந்தோனும் நீரரவில் துயில்வோனும் முகத்திற்கொரு சொல் உதிர்ப்போனும் உன் பேரெழில் முன் நிலை மறப்பின், மானுடனென உள இவ்வுயிர் குனிந்து பாதத்துளிகளை முத்தமிடுகையில் பிழையென ஏதுமுண்டா? மலர் கனிதலும் அனல் குளிர்தலும் தளிர் மணத்தலும் தணல் அடங்கலுமாய் இப்பொழுதுகளில் நகரட்டும் இவ்வாழ்வு.