Tuesday, June 05, 2007

நானென்பது நீயல்லவா..


வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. ஈரமான ஜன்னல் கண்ணாடிகளின் மீது துளிகள் நேர்க்கோடுகளாய் வழிந்து கொண்டிருந்தன. லேசாக வீசிக் கொண்டிருந்த காற்றில் திரை ஆடிக் கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாமல் போய்விட்ட இந்த மாலை வேளையில் ஏதோவொன்று நடக்கப் போகின்றது என்று உள்ளுணர்வு மட்டும் கூறியது.

மெல்லச் சுழலும் மின்னாடி, ஏகாந்தமாய் விழுங்குகின்ற இரவின் சகதியில் புதையும் போது தன்னை மறந்து சூரியன் வெளிப் படுத்தும் ஆரஞ்சுக் கதிர்கள், அறையின் கண்ணாடியின் மீது பட்டுத் தெறிக்கின்றன.

மெல்ல உள்ளே எட்டிப் பார்க்கின்றேன்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள், அவள்.

நானும் சிறு வயதில் இப்படித் தான் இருந்தேன்.

கழுத்துவரை போர்த்தியிருக்கும் குளிருக்குக் கதகதப்பான போர்வை, ஜன்னல் வழியாக வழிந்து வரும் ஈரக்காற்றில் மெல்ல மெல்ல ஆடிக் கொண்டிருக்கின்ற முன் நெற்றி முடி, கட்டிக் கொண்டு தூங்க புசு புசு டெடி பியர்கள்...

என் இனிமையான குழந்தைப் பருவத்தில் நானும் இவள் போலவே இருந்தேன்.

உள்ளே சென்று அருகில் பார்க்கலாமா?

கதவை மெல்ல திறந்து உள்ளே சென்றேன். கதவின் சத்தங்கள் அவளது உறக்கத்தைக் க்லைத்து விடுமோ என்று பயப்பட்டேன். அதற்கு அவசியமில்லை. மழைக் காற்றில் கதவு ஆடிக் கொண்டு தான் இருக்கிறது.

அவளை எழுப்பலாமா? வேண்டாம். இன்னும் பள்ளி செல்லாத சிறு இளம் வயது. இப்பருவத்தை விட்டுவிட்டால், பின் நிம்மதியான மாலை உறக்கத்தை எந்த வயதில் மீண்டும் அடைய முடியும்?

எனது இந்தப் பருவத்தில் நான் என்ன நினைத்துக் கொண்டிருப்பேன்?

இதே போன்ற ஒரு மழை நாளின் மாலையில், இதே போன்று இறுக்கிப் போர்த்திக் கொண்டு படுத்திருக்கையில், துளித்துளியாகப் போகின்ற நீர்த் தடங்களால், தோட்டத்தை மறைக்கின்ற ஜன்னல் கண்ணாடியைப் பார்த்து என்ன நினைப்பேன்?

என் மூன்றாவது பிறந்த நாளன்று என்னை விட்டுப் பிரிந்து, மலையைத் தாண்டி சென்று விட்ட தந்தையைப் பற்றியா..?

பின்னல் கூடைகள் செய்தும், கிறிஸ்துமஸ் மெழுகுகள், கேக்குகள் செய்தும் என்னை வளர்க்கும் அம்மாவைப் பற்றியா..?

ஆ...! அதே புத்தகங்கள். நான் பார்த்து வளர்ந்த கதைகள். இது போன்ற பழைய நாற்காலிகளில் அமர்ந்து எவ்வளவு காலமாயிற்று? சுகமாய் இருக்கிறது.

ஒவ்வொன்றாய் நினைத்துப் பார்க்கையில், கண்கள் வழி கசிந்து செல்லும் கண்ணீரால் நனைகின்றன புத்தகத்தின் பக்கங்கள். மற்றுமொரு முறை இதே போன்ற வாழ்வு கிடைக்குமா..?

எட்டிப் பார்க்கின்ற நிகழ்ச்சிகளை கைகளில் ஏந்திக் கொண்டு மீண்டும் வாழ முடியுமா..?

முடியாது. ஏதோ, அறிவியலின் புண்ணியத்தில் மற்றுமொரு முறை இங்கு வந்து செல்ல முடிகின்றது. மிக்க நன்றி சொல்கிறேன்.

அவள் விழித்துக் கொண்டாள் போல் இருக்கிறது. புத்தகத்தை வைத்து விட்டு கிளம்ப வேண்டியது தான்.

நேரமாகி விட்டது. எனக்கான பணிகள் காத்திருக்கின்றன. செல்ல வேண்டும்.

மீண்டும் முடிந்தால் வருவோம்.

க்ளைமேட் சும்மா சில்லுனு இருக்கு. வெளிய மழை பெய்ஞ்சுட்டு இருக்கு. மழை எனக்கு ரொம்ப பிடிக்கும். மழையில் நனைய, பக்கத்து விட்டு ரோஸி கூட விளையாட, அப்புறம் மழை நின்னப்புறம் மரக்கிளைகளைப் பிடிச்சு உலுக்கி விளையாடறது, ஈரமா இருக்கற புல் மேல எல்லாம் படுத்துக்கறது...

எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆனா அம்மா இதெல்லாம் வேண்டாம்னு சொல்லுவா. அம்மாவுக்கு என்னைப் பத்தி ரொம்ப கவலை. ஆமா என்னைப் பத்திக் கவலைப்பட யாரு இருக்கா, அம்மாவைத் தவிர? அப்பா என்னோட மூணாவது பர்த்டேயப்போ, அதோ அங்க தெரியுதில்ல, பச்சை கலர்ல மலை, அதுக்கு அந்தப் பக்கம் போய்ட்டாரு.

'அப்பா எப்பம்மா வருவாரு'னு நான் அப்போ அம்மாவை அடிக்கடி கேட்பேனாம். ' அப்பா மலைக்கு அந்தப் பக்கம், சாக்லேட் வாங்கிட்டு வரப் போயிருக்கார்'னு அம்மா சொல்வாங்க. அதையெல்லாம் நம்பிட்டு இருந்தேன்.

நீங்க போய் அந்த ஜன்னல் கண்ணாடியெல்லாம் கொஞ்சம் நல்லா தொடச்சு விடறீங்களா? எனக்கு சரியா மலை தெரியல. அப்பப்போ அப்பா ஞாபகம் வரும் போதெல்லாம், அந்த மலையைத் தான் பாத்துப்பேன்.

இன்னிக்கு என்னமோ நல்ல மழை பெய்யுது. இந்த ஜன்னல், கதவெல்லாம் இந்த மாதிரி ஆடி நான் பார்த்ததில்ல. இந்தக் கதவு ஆடறதைப் பார்த்தா, யாரு வேணா உள்ள வரலாம் போல.

அம்மா எங்க போயிருக்கானு தெரியல. இந்த மழையில எதுக்கு வெளிய போகணும்? ஒரு வேளை அவ வெளிய போகும் போது, மழை பெய்யாம இருந்திருக்கலாம்.

அப்பா போனதுக்கப்புறம், அம்மா ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இப்போ தான் கிறிஸ்துமஸ் கேக்கெல்லாம் செஞ்சு நெறய இடத்துக்குக் கொடுத்து கொஞ்சம் ஏர்ன் பண்றாங்க. எனக்கு கேக் ரொம்பப் பிடிக்கும். அம்மா செய்யும் போது எனக்கும் கொஞ்சம் குடுப்பாங்க. நல்லா இருக்கும், தெரியுமா?

கேக் செய்யும் போது ,அம்மா நெறைய கதை சொல்லுவாங்க. அப்ப மட்டுமில்ல, டைம் கிடைக்கும் போதெல்லாம் கதை சொல்லுவாங்க. அந்தக் கதையெல்லாம்... ஆங்..இந்த புக்கைப் படிச்சு தான் சொலுவாங்க. நான் இன்னும் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிக்காததுனால, அம்மாவே இந்தக் கதையெல்லம் படிச்சு சொல்லுவாங்க.

என்ன.. இந்த புக் நனைஞ்சிருக்கு..? ச்சீ.. மழை பெஞ்சாலே, இது வரைக்கும் நனைஞ்சிடுது. அம்மாகிட்ட சொல்லி, ஜன்னல் எல்லாம் சரி பண்ணச் சொல்லணும்.

அதுல ஒரு கதை எனக்கு ரொம்ப பிடிக்கும். 'டைம் ட்ராவல்'னு சொன்னாங்க. அதாவது நாமே ஃப்யூச்சருக்குப் போனதுக்கப்புறம்,மறுபடியும் நெனச்ச நேரத்துக்குப் போய்ட்டு வர முடியும். இன்னமும் அது வரலை. ஒருவேளை என்னோட ஃப்யூச்சர்ல வந்தா எங்க எல்லாம் போவனு அம்மா கேட்டாங்க.

நான் சொன்னேன், இப்ப இருக்கற சின்ன வயசுக்கு மறுபடியும் வந்து பார்ப்பேன்னு..!

படம் நன்றி : http://content.answers.com/main/content/wp/en/7/7e/Bedtime.jpg

4 comments:

அன்புடன் அருணா said...

மழை நேரத்து நினைவுகள் அருமை.
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

//என்னைப் புதிய உயிராக்கி -எனக் கேதுங் கவலையறச் செய்து -மதி தன்னைமிகத் தெளிவு செய்து -என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.//

ஐ!என் பதிவில் கூட இதே வரிகள்தான் முகப்பில்...
அன்புடன் அருணா

thamizhparavai said...

இதமான நடையில் கதை. தங்களிடம் பார்த்திராத ஒன்று இக்கதையில் விரவியுள்ளது.
கடினமான ஒன்று சிறுவ,சிறுமியர்களின் எண்ண ஓட்டங்களை எழுத்தில் பிடிப்பது என எண்ணுகிறேன்.
குறைந்தால் கதைக்கு வலுவூட்டாமலும், கூடினால் மணிரத்னம் படக் குழந்தைகள் வசனம் போலவும் ஆகிவிட அதிகச் சாத்தியக்கூறுகள் உள்ளன.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். இக்கதையில் படத்தில் இருக்கும் பெண்ணுக்கும், குழந்தைக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறிந்தீர்களா..? தொட்டுப் பார்த்தால், இது எனது முதல் அறிவியல் புனை கதை எனலாம் என்று நினைக்கிறேன்.