Wednesday, January 23, 2008

இது ஒரு காதல் கதை...? - 4

"ன்ன மாம்ஸ், பீச் போய்ட்டியா..? சாரிடா. என்னால வர முடியல..." அருண்.

"சரி விடு. நானும் அடையார் வழியா போக முடியல. ஏதோ ஊர்வலமாம். அதனால் மயிலாப்பூர் வழியா போய் சாந்தோம் போற ப்ளான்ல இருந்தேன். இப்போ சிட்டி சென்டர் போய் கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டியது ஞாபகம் வந்திடுச்சு. அதனால் ராதாகிருஷ்ணன் ரோடுல போய்க்கிட்டு இருக்கேன். சரி, நான் அப்புறம் கால் பண்றேன். வெண் புறா போலிஸ் போன்ல பேசிட்டே வர்றதைப் பார்த்துட்டார்னு நினைக்கிறேன். நீ உன்னோட ரிலேஷனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடு." சஞ்சய்.

செல்போனை அணைத்து விட்டு யு-டர்ன் அடித்து உள்ளே நுழைந்தான். பார்க்கிங் ப்ளாக்கில் ஹோண்டாவை நிறுத்தி விட்டு, நடக்கும் போது தான் கவனித்தான்.

அந்த பெப். அதே எண்.

பரபரப்பானான் சஞ்சய். உடனே செல்லினான்.

"அருண், சீக்கிரம் உன்னோட ரிலேஷனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டு, உடனே சிட்டி சென்டர் வா. அந்த பெப் இங்க நிக்குதுடா..."

"என்னடா சொல்ற...? நான் இன்னும் வடபழனியே தாண்ட முடியல. Full Traffic. நீ ஒண்ணு பண்ணு. எப்படியாவது அந்த பெப் சென்டரை விட்டுப் போகாத மாதிரி பார்த்துக்கோ. நான் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ, வர்றேன்.." அருண்.

"நீ கவலைப்படாதே. நான் பார்த்துக்கறேன்." அணைத்தான்.

கொஞ்ச நேரம் யோசித்தபடியே நின்றவன், வெளியே வந்தான். சாலையோரமாய் இருந்த சாவி ரிப்பேர் செய்பவரைக் கேட்டு, சிறிய பூட்டு, சாவி, சின்ன சைஸ் செயின் வாங்கினான். பயந்து போய் பார்த்த அவரது பார்வையை அலட்சியத்து, உள்ளே நுழைந்து, பெப் அருகில் வந்தான்.

முன் சக்கரத்தின் பற்களுக்கு இடையே செயின் விட்டு, அதன் பிரேக் ஒயரோடு இழுத்துக் கட்டினான். பூட்டைச் சேர்த்து பூட்டி, சாவியைப் பத்திரப்படுத்தினான். எழுந்து நின்று திரும்ப, செக்யூரிட்டி அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து, செக்யூரிட்டியைப் பார்த்து சிரித்தான், தலையைக் குனிந்து அடிக்கண்ணால் பார்த்தான். வெருண்டு போன செக்யூரிட்டி வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

சிரித்துக் கொண்ட சஞ்சய், சென்டர் உள்ளே நுழைந்தான்.

சிட்டி சென்டர் பளபளத்துக் கொண்டிருந்தது.

ஐ-நாக்ஸ் பால்கனியில் நின்றவாறு டிஜிட்டல் டி.வி.யில் கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சந்தியா. செல்லடித்து அழைத்தாள்.

"ஹேய் மலர்.. CMBT போய்ட்டியா?.."

"இல்ல.. ரொம்ப நெரிசலா இருக்கு. ஊர்ந்து ஊர்ந்து போய்ட்டு இருக்கோம்.."

"நிகில்.. இப்படி போய் டிக்கெட் புக் பண்ணனுமா? ஆன்லைன்ல பண்ணலாம்னு சொன்னா கேக்கறியா...?"

ஸ்பீக்கரை ஆன் செய்து இருந்தாள் மலர்.

"அக்கா.. என்னைத் திட்டாதீங்க. நான் உண்மையைச் சொல்லிடறேன். இங்க மலரக்கா கிள்ளறாங்க. இருந்தாலும் சொல்லிடறேன். நான் ஆன்லைன்ல பண்ணிடலாம்னு தான் சொன்னேன். அக்கா தான் வெளியே போய் தான் புக் பண்ணனும்னு சொன்னாங்க.உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு சொன்னாங்க..."

"ஓ... அது தான் மேட்டரா..? எனக்குத் தானே தெரியும், ஏன் மலரக்கா இன்னிக்கு வெளியே போக ஆசைப்பட்டாங்கனு... இருக்கட்டும்..."

புன்னகைத்கவாறே செல்லை அணைத்து எலிவேட்டரில் நின்று கொண்டாள். மெல்ல , மெல்ல இறங்கத் தொடங்கியது. அடுத்த ஃப்ளோரை அடைந்து நடக்கத் தொடங்கினாள்.

"ஹலோ மேடம்.. நில்லுங்க.." குரல் கேட்டு திரும்பினாள்.

சஞ்சய் வந்து கொண்டிருந்தான்.

"யார் நீங்க..?"

"என்ன.. அதுக்குள்ள மறந்திட்டீங்க. நேத்து ஸ்பென்சர்ல சண்டை போட்டு கீழே விழப் போனீங்க.. நான் தான் காப்பாத்தி.. well, i am sanjay.." கை நீட்டினான்.

சட்டென்று ஞாபகம் வந்து விட்டது. ஆனாலும் இவனைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. இன்னும் நேரம் இருக்கிறது. கடவுள் இருக்கிறாரா பார்ப்போம்.

"சாரி.. தெரியல.."

"என்ன இப்படிச் சொல்லிட்டீங்க. சரி, என்னை விடுங்க. என் ஃபிரெண்ட் அருண். நல்ல பையன். உங்க கூட வந்தவங்க யாரு, என்னனு என்னைத் துளைச்சு எடுக்கிறான். அவங்க யாரு உங்க தங்கையா? இருக்கலாம். இருந்தாலும் உங்களைப் பார்த்தா அவ்ளோ வயசானவங்களா தெரியல. ஒரு 35 இருக்குமா, உங்க வயசு..?" அவள் தெரியவில்லை என்ற கடுப்பில் போட்டு வாரத் தொடங்கினான்.

சட்டென சூடாக ஆனாள்.

"பாருங்க மிஸ்டர், நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது. இப்படி பப்ளிக் ப்ளேஸ்ல InDecentடா behave பண்ணினீங்கனா உங்களைப் போலீஸ்ல பிடிச்சுக் குடுத்திட்டு, நான் பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன்.. நேத்தே மாட்டி விட்டிருக்கணும்.."

"ரொம்ப தேங்ஸ்ங்க. நீங்களே ஒத்துக்கிட்டீங்க. நீங்க அவ்ளோ சீக்கிரம் இங்கிருந்து போயிட முடியாது. ரொம்ப செக்யூரிட்டி போட்டிருக்கோம். உங்க friend பத்தி கேட்டு, அருண் என்னைத் தொந்தரவு பண்றான். சொல்லுங்க ப்ளீஸ்... ஹலோ.."

அவனைத் தவிர்த்து நடக்க ஆரம்பித்தாள்.

என்னடா, ஓவராப் பேசி நாமே காரியத்தைக் கெடுத்து விட்டோமோ?

குழம்பிப் போய் அவளைப் பின் தொடர்ந்து போனான் சஞ்சய்.

CMBT பரபரப்பாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையாதலால் கூட்டம் அள்ளிக் கொண்டு இருந்தது.

பார்க் செய்து விட்டு, சேலத்தில் இருந்து வர வேண்டிய வண்டிக்காக காத்திருக்கத் தொடங்கினான் அருண். ஒரு India Today வாங்கி விட்டு அதில் தலையை முழுக்கிக் கொண்டான்.

காரைப் பார்க் செய்து விட்டு, மலரும், நிகிலும் டிக்கெட் புக் செய்யும் கவுண்டரை நோக்கி நடக்கத் துவங்கினார்கள்.

- தொடரலாமா?

1 comment:

Anonymous said...

வசந்த் இன்றுதான் உன்னுடைய இது ஒரு காதல் கதை நான்கு வரை முழுவதும் படித்தேன். எப்படி இப்படி சரளமாக உனக்கு எழுத வருகிறது. simply superb .மீதி எப்பொழுது வரும். இப்படி கிளைமாக்ஸ் ல் கொண்டு வந்து நிறுத்தி விட்டாயே சீக்கிரமாக மீதியையும் எழுது