Saturday, July 19, 2008

நீல.பத்மநாபன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.



மிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரும், நாவல், சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் பல படைப்புகள் கொடுத்தவரும், சாகித்ய அகாதமி விருது வாங்கியவரும் ஆகிய திரு. நீல. பத்மநாபன் அவர்களை முதன்முதலில் இன்று சந்தித்தேன்.

ரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை காலை அவர் வீட்டைத் தொடர்பு கொண்டு 'சந்திக்க வரலாமா' என்று கேட்டேன். அவர் அன்றைய நாளில் அவர் ஒரு பயண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தாலும் ஒரு பத்து நிமிடம் பேசினார்.

எனது புத்தகங்கள் எதையாவாது படித்திருக்கிறீர்களா? என்று கேட்டார். என்னவென்று சொல்வது? உண்மையே சொல்லி விடலாம் என்று, 'இல்லை சார்' என்றேன். சென்னையில் வானதி பதிப்பகத்தில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கின்றது என்றார். 'சரி சார். கிடைக்கின்ற புத்தகங்களைப் படித்து விட்டு அடுத்த வாரம் வருகிறேன்' என்று விடை பெற்றேன்.

சென்ற வாரம் ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. இரண்டு புத்தகங்கள் வாங்கி வரச் செய்தேன். 'தலைமுறைகள்' மற்றும் 'இலையுதிர் காலம்'. இரண்டையும் சென்ற வாரம் முழுக்க நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்திருக்கிறேன்.

இன்று காலை மறுபடியும் ஃபோன் செய்து, டைம் கேட்டு ஒரு மாதிரி கால தாமதத்தோடு வீட்டைத் தேடி கண்டுபிடித்து ஒரு மாதிரி போய் விட்டேன்.

கோபப்பட்டார். அவரது சில வேலைகள் என் தாமதத்தால் தடைப்பட்டது. மன்னிப்பு கோரினேன். ஆனால் நன்றாகவே பேசினார். விளையாட்டு போல் நான் கேட்ட சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கும் விரிவாகவே விடையிறுத்தார்.

ஒரு மணி நேரம் பேசினார். பத்து செகண்டுகள் நான் பேசினேன்.

பிறகு அவரைப் பற்றிய சாகித்ய அகாதமியின் ஆவணப்படத்தையும், பரிசு பெற்ற போது எடுத்த டி.வி.டி. வேண்டுமா? கேட்டார். யாராவது விடுவார்களா? உடனே வாங்கிக் கொண்டேன். டி.வி.டி. ஷாப்புக்குச் செல்ல வழி சொன்னார். இவனுக்குச் சொன்னால் புரியாது என்று தெரிந்து கொண்டதனால், ஒரு படம் வரைந்தே கட்டினார். அதன் படி எடுத்து வருவதாகச் சொல்லி வெளி வந்தேன்.

இது வரைக்கும் பார்த்தது அவரது ஒரு முகம். அமைதியான, தம் கருத்துக்களைச் சொல்லி நான் புரிந்து கொண்டேனா என்று உறுதிப்படுத்திக் கொண்ட அக்கறையான முகம்.

டி.வி.டி. ஷாப்புக்குப் போய், காபி எடுக்கச் சொல்லிக் கொடுத்து, நல்ல ஹோட்டல் ஒன்றில் உணவு உண்டு, ஷாப்புக்கு ரிடர்ன் போய், 'இன்னும் ரெடியாகலை சார். வெய்ட் பண்ணுங்க', உட்கார்ந்தவாறே கொஞ்சம் கண்ணசந்து, திடுக்கென விழித்து, வாங்கி , சார் வீட்டுக்குப் போய் மாஸ்டர் காபியைக் கொடுக்க மணி மூன்று அரையைத் தாண்டி இருந்தது.

அவரை குட்டித்தூக்கத்தில் இருந்து தொந்தரவு செய்து இன்னும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த போது, அவரது கணிணி சில பிரச்னைகளைக் கொடுப்பதை சரி செய்ய உதவினேன். மகிழ்ந்தார். ஒரு குழந்தை போல் சந்தோஷப்பட்டார். இது அவருடைய மழலைத்தன முகத்தைக் காட்டியது.

அவருக்கென்று ஒரு வலைப்பக்கம் உருவாக்க உதவி செய்தேன். ஆனால் அதில் தொடர்ந்து எழுத நேரமின்மை ஒரு முக்கியமான காரணமாக இருக்கின்றது என்றார்.

கிளம்பும் போது அடுத்த முறை வரும் போது, கண்டிப்பாக உங்களது சில புத்தகங்களைப் படித்து விட்டு அதைப்பற்றி பேசலாம் என்றேன். வாசல் வரை வந்து, கணிணி பிரச்னை தீர உதவியதற்கு மறுபடியும் ஒரு முறை நன்றினார். எனக்கே கூச்சமாகிப் போனது.

எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருந்தால், வாசல் வரை வந்து கை கூப்பி விடை பெறும் போது மற்றுமொரு முறை பிரச்னை தீர உதவியதற்கு நன்றி சொல்வார்..?

பின் தம்பானூர் செல்வதற்கும் வழி சொன்னார். சரியாக அதை ஃபாலோ செய்து பஸ் ஸ்டேண்ட் வந்தேன்.

சில சின்னச் சின்ன நிகழ்வுகள் ::

*தம்பானூரில் இருந்து ஆட்டோவில் வந்து கல்யாண் ஹாஸ்பிடல் ரோடு தாண்டி வந்து விட்ட பின்பு. ஜங்ஷன் போய் நிறுத்தி இறங்கு என்றார். மீண்டும் திரும்பி கல்யாண் ஹாஸ்பிடல் ரோடு போக முடியுமா என்றால், அது வழியாகத் தான் வந்தோம். இனி முடியாது என்று சொல்ல, வேறு வழி இன்றி திரும்பி நடந்தேன்.

*ஒரு அரிசி மண்டிக்காரரைடம் கேட்க, அவர் எனக்காக் ரெண்டு கால் செய்து யார், யாரையோ கேட்க, அவர்களுக்கும் விலாசம் தெரியாமல் பிறகு நானே ஒரு வழியாக ஆட்டோமொபைல்ஸ் அருகில் இருந்த சாரின் வீட்டைக் கண்டறிந்தேன். வரும் போது மண்டிக்காரருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். மறந்தேன்.

*எனக்கு சாரைப் பார்க்க மகாசய ஸ்ரீஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி போல் இருக்கிறீர்கள் என்று சொல்ல நினைத்தேன். சொ.வில்லை.

* என்னுடன் தூய தமிழில் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஏதோ கால் வர டக்கென்று மலையாளத்தில் சம்ஸாரிக்கத் தொடங்கினார். எனக்கு ஆச்சரியமாகப் போய் விட்டது.

*நடு நாளில் போனதால், இங்கேயே சாப்பிடலாமே என்று பல முறைகள் கேட்டார். நான் தான் கூச்சப்பட்டு, வெளியேவே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று வெளியே வந்தேன்.

*இந்த நாட்களில் நான் சாப்பிட்ட ஒரு நல்ல கேரள உணவகம் ஒன்று கண்டுபிடித்தேன். சும்மா அல்வா போல் சாதம் நழுவியது. அதன் பலனோ என்னவோ, டி.வி.டி. ஷாப்பில் உட்கார்ந்தவாறே கொஞ்சம் கண் செருகினேன்.

*டி.வி.டி. ஷாப்பில் ஒரு மலையாளப் படம் ஓடிக் கொண்டிருந்தது. காவ்யாவும் திலீப்பும் கொஞ்சம் இளையவர்கள் போல் தோன்றியதால், 'ஈ ஃபிலிம் பழசு அல்லே' என்று கேட்க, 'அதே, காவ்யாவிண்ட ஆத்யம் மூவி' என்றார். நேரம், கொஞ்ச நேரத்தில் கேபிளில் ஏதோ ப்ராப்ளம் வந்து சிக்னலில் கறுப்பு வெள்ளை யுத்தம் நடக்க, கண்ணயர்ந்தேன்.

*பேச்சு வாக்கில் சாரின் வீட்டம்மா, காபி கொடுத்தார்கள். ப்ரமாதம். தண்ணீரிலும் கேரள மணம் இருந்தது.

*சாரின் வீட்டு லைப்ரரி காட்டினார். பிரமித்துப் போனேன். எத்தனை புத்தகங்கள்!!!

மிக்க நன்றி சார். அடுத்த முறை போகும் போது, அவரது சில புத்தகங்களையாவது படித்து விட்டுப் போக வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.

அவருடன் பேசிய போது என் செல் போனில் ரெக்கார்ட் செய்தேன். அது ரோட்டின் ஆட்டோ சத்தம், ஹாரன் இரைச்சல், மாட்டு வண்டிகளின் டக் டக், என் இடையூறுக் குரல் போன்ற இரைச்சல்களுடன் பதிவாகி இருக்கின்றது. .amr ஃபார்மட்டில் இருப்பதால், ஏதாவது செய்து கன்வர்ட் பண்ணி, வலையேற்றுகிறேன்.

மெதட் தெரிந்த மக்கள் டிப்ஸ் கொடுத்தால் நலம்...!

Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

வேளராசி said...

உள்ளேன் ஐயா

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி வேளராசி சார்....

Veera said...

நானும் இது வரையிலும் பத்மநாப சுவாமி கோவிலுக்கு போனதே இல்ல.. ஆனா, கோவிலுக்கு எடுத்தாப்ல இருக்கற பத்மநாபா தியேட்டருக்கு நிறைய தடவ போயிருக்கென். :)

இரா. வசந்த குமார். said...

அன்பு வீரசுந்தர்...

புரியுது. நான் கூட ஒரு தபா பீமபள்ளி போகும் போது, பத்மநாபா தியேட்டர் வெளியில கொஞ்சம் கூட்டத்தைப் பார்த்தேன். அப்ப தசாவதாரம் போட்டிருந்தாங்க.