Tuesday, December 09, 2008

நான்கு இரவுகளும், நடுவில் இருந்த பகல்களும்!

மாலை நான்கு மணிக்குத் தான் (05.DEC.2008) அலுவலகத்தில் இருந்து கிளம்ப முடிந்தது. திருவனந்தபுரம் - சென்னை டி.வி.சி. எக்ஸ்ப்ரஸ் தி.புரம் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து 17:25க்குக் கூர்மையாக கிளம்பி விடும். அதைப் பிடித்தாக வேண்டும்.

டெக்னோபார்க்கில் இருந்து ஆட்டோவில் கழக்குட்டம் பஸ் ஸ்டாப்பிற்கு (15 ரூ.) வந்து, கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்ஸைப் பிடித்து, ஸ்ரீகார்யத்தில் இறங்கி, அவசர நடையாக நடந்து அறைக்கு வந்து பார்த்தால்... இன்னும் துணிகள் எடுத்து வைக்கவில்லை' சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் ஒருபக்கம் கலைந்து...! புரிந்து விட்டது. ட்ரெய்னைப் பிடிக்க முடியாது.

கரண்ட் வேறு இல்லை. பயங்கரமாக வேர்க்க ஆரம்பித்து விட்டது. அவசரமாக எல்லாவற்றையும் பேக் உருட்டி பேகின் உள்ளே தள்ளி, சர்டிபிகேட்ஸை அள்ளி, திணித்து, ஒருமாதிரி ரெடியாகினேன்.

இனி ஆட்டொ பிடித்து, ஸ்டேஷன் போய், டிக்கெட் வால்களில் நின்று, ட்ரெய்னைப் பிடிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாத ஒன்று.

எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என்று, ஆபிஸில் இருந்த மிதுனைக் கேட்க, அவன் செக் செய்து, கொல்லத்தை ஆறரை மணிக்குச் சேரும் என்று தெரிந்து, இங்கிருந்து இப்போதே கிளம்பினால் கூட, அதே ஆறரைக்குத் தான் பஸ்ஸும் கொல்லம் அடையும் என்பதால், அந்த ஸ்டேஷனில் இருக்கும் குட்டி வாலில் இணைந்து, டிக்கெட் எடுத்து, ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டை நோக்கி ஓடி உள்ளே ஏறுவதற்குச் சாத்தியங்கள் மின்மினி ஒளி அளவு மட்டுமே என்பதால்...

"எந்தா..?"

"எர்ணாகுளம் ஒந்நு..!"

பஸ்ஸிலேயே ஏறி விட்டேன்.

எதிர்பார்த்தது போலவே, 18:28க்கு கொல்லம் ஸ்டேஷனை பஸ் அடைந்தது. வழியில் கனியாபுரம் அருகே, சாலையில் யானைகள் மேல் கடாம் அமைத்து, ஐயப்பன் சிலைகள் ஊர்வலம் வந்தன. இரு வரிசைகளாக மஞ்சள் சேலை மங்கைகள் விளக்குகள் பிடித்துக் கொண்டு, மஞ்சள் ஒளி சிந்த வந்தது, அந்த மஞ்சள் மாலையில் மனம் நிறைந்த காட்சி.

பஸ்ஸில் பெண்கள் அமரும் சீட் தான் கிடைத்தது. பக்கத்து சீட்டில் பாட்டி உட்கார்ந்திருக்க, டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டு பயணித்தேன். இந்தப் பயணத்திற்காக எடுத்து வைத்திருந்த துணைகள் இரண்டு.

ஓஷோவின் தம்மபதம் (புத்தரின் வழி) பாகம் ஐந்து, கண்ணதாசன் பதிப்பகம் மற்றும் b.guttman முதலான நான்கு பேர் எழுதிய Genetics - a beginner's guide.

இந்தப் புத்தகத்திலும் அத்தனை பிம்பங்களையும் போட்டு உடைக்கிறார் ஓஷோ. வெண் பொங்கல் மிளகாக நான்கு பக்கங்களுக்கு ஒரு முறை தெளிக்கின்ற 'ச்சீ' கதைகளை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, கருத்துக்களைத் தவற விட்டால், அது முட்டாள்தனம். 2 கதைகளை மட்டும் இங்கே இணைக்கிறேன். அவற்றைப் படித்து விட்டால், ஓஷோவைத் தேட உங்களுக்குப் பிடிக்கும். ஆனால் அதற்கான காரணங்கள்..?

வீட்டு வேலைக்காரி ஒருத்தி. அவளுக்குத் தன் வேலை பிடித்தமானது. திடீரென ஒரு நாள் வேலைக்கு வருவதில்லை என்று சொன்னாள்.

எசமானி கேட்கிறாள். "எங்கே போகணும்கிறே? ஏதாவது சரியில்லாமப் போச்சா?"

"இந்த வீட்டுலே இந்த சஸ்பென்ஸைப் பொறுத்துக்க முடியல்லே."

"சஸ்பென்ஸ்? அதென்ன?"

"என் கட்டிலுக்கு மேலே ஒட்டி வெச்சிருக்கீங்களே. கவனமா இரு. எசமான் எப்போது வருவார் என்பது உனக்குத் தெரியாது."

கிறித்துவ வார்த்தைக்கு அவர் சொல்லும் கதை.

யூதர்களின் நகைச்சுவை உணர்வை வெகுவாகச் சிலாகிக்கிறார் ஓஷோ. கான்சன்ட்ரேஷன் கேம்ப்களிலும் கூட அவர்கள் சிரித்து தான் பயத்தை தவிர்க்க முயன்றார்கள் என்கிறார். யூதர்கள் தங்களது யூத பாதிரிமார்களையும் வெகுவாகக் கவிழ்ப்பார்களாம். ஒரு யூதக் கதை.

ஒரு யூதச் சமூகத்தில் ஒரு விழா. தங்கள் கோயிலுக்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார்கள். கோயில் கொஞ்சம் மோசமாகத் தான் இருந்தது. பழுது பார்க்க வேண்டியிருந்தது. லாட்டரி டிக்கெட்டுகள் அடித்து விற்றார்கள். முதல் மூன்று பரிசுகள் தர வேண்டிய நாளும் வந்தது.

ஒருவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். அவனுக்குத் தான் மூன்றாம் பரிசு. அருமையான கார். மேடையில் இருந்தது. அதுதான் மூன்றாவது பரிசு.

பிறகு இன்னொருவனைக் கூப்பிட்டார்கள். இரண்டாவது பரிசு. ஒரு பெரிய கேக் கொடுத்தார்கள். மூன்றாம் பரிசு கார் என்றால் தனக்கு விமானமே கிடைக்கும் என்று நினைத்திருந்தான் பாவம். மூன்றாவது பரிசு அருமையான கார். இரண்டாவது பரிசு கேக்தானா? பரிசுகளைக் கொடுத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, "உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?" என்று கேட்டான்.

அவனோ,"உனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த கேக் நம்ம ராபியின் மனைவியே தயாரித்தது."

கேட்டவனுக்குக் கோபம் வந்து விட்டது."ஃபக் தி ராபீஸ் வைஃப்" என்றான்.

"அட, அது முதல் பரிசப்பா..!"

அடக்க முடியாமல் சிரித்து விட்ட போது, பக்கத்தில் இருந்த மலையாள பாட்டி, "எந்தா..?" என்று கேட்டார். "ஒந்நும் குழப்பம் இல்லா.." என்றேன் சிரித்தவாறே..!

லப்புழை வந்து விட்ட பிறகு ஓர் ஐந்து, பத்து நிமிடம் சாப்பிடச் சென்று விட்டார்கள், ட்ரைவரும், நடத்துனரும். கடலை மிட்டாயை கவர் செய்து விற்றார்கள். கொஞ்சம் தூரத்திலேயே, பேக் வாட்டர் வழி ஒன்று, ஒளி சிந்தும் மின் விளக்குகளின் பிம்பங்களைச் சுமந்து அசைந்து கொண்டிருந்தது.

எர்ணாகுளத்திற்கு பத்து மணி அளவில் வந்து சேர்ந்தது. இறங்கி அவசரமாகப் பார்த்த போது, சேலம் பஸ் ஒன்று நின்று கொண்டிருந்தது. விசாரித்து ("பத்து நிமிஷம் ஆகும்..!") ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். பயணத்தில் தமிழ்ப் பத்திரிக்கைகள் கிடைக்கும் முதல் ஸ்தலமான இங்கே, சில புத்தகங்கள் வாங்கினேன். சில ஸ்நாக்ஸ். பழங்கள்.

ஏர் பஸ்ஸில் சுகமாகப் படுத்துக் கொண்டு, தூங்கி, விழித்து, இரவின் மெளன வானத்தை ஜன்னல் வழி எட்டிப் பார்த்து, கொஞ்சமாய்க் குளிரை அனுபவித்து, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், பெருந்துறை, ஈரோடு என்று வந்து சேர, சனிக்கிழமை காலை ஆறு மணி ஆகியிருந்தது.

உடனடியாக அந்தியூர் பஸ் ஒன்றுக்கு எகிறி சீட் பிடித்துப் பார்த்தால், அது அக்ரஹாரம் வழி இல்லையாம்; சித்தோடு போய்ச் செல்லும் என்று சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் லேட் ஆகும். எனினும் இழுத்து உட்கார வைத்து விட்டன, அந்த அதிகாலை விடியல் பயணத்தில் டி.டி.எஸ். எஃபெக்ட்டில் கேட்டுப் பார்த்து வந்த ராமராஜன் பாடல்கள்.

கண்களுக்கு கருப்பும், உதடுகளுக்கு சிவப்பும் அடிக்கின்ற கலரில் ஆடைகளுமாய், கிராமத்து வயல் வரப்பில் கெளதமியையோ, சீதாவையோ, ராணியையோ, ரேகாவையோ துரத்திப் பாடும் போது, பஸ் கடக்கின்ற கிராம வயல்களுக்குச் சட்டென அவர்களது பிம்பங்கள் இடம் மாறுகின்றன.

டவுசர் மட்டும் போட்டுக் கொண்டு, செந்தாமரை சலித்து, துண்டை உதறி மறுதோளில் போட்டுக் கொண்டு உள்ளே செல்ல, 'பட்டுப் பட்டுப் பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்..' என்று பாட ஆரம்பிக்க, நிஷாந்தி அப்படியே காண்ட்ராஸ்ட்டாக ஃபுல் மேக்கப் தாவணியில் ஊஞ்சலாடும் போது, பவானி புது பஸ் ஸ்டாண்ட்டில் இறங்கினேன்.

வீட்டிற்குப் போய் உண்டு, களைத்துறங்கி, குளித்து சில வேலைகள் முடித்து விட்டு, மீண்டும் வீடு வரும் போது, குமாரைக் கால் பண்ணிக் கேட்டுக் கொண்டேன். "வந்தா தங்க முடியும்லடா..? நீயும் எங்கயும் போயிட மாட்டியே..?"

அடுத்த நாளுக்குப் போட்டுக் கொள்ள வேண்டிய செட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, சில போட்டோக்கள், ஸ்டடி மெட்டீரியல்ஸ் (என்னமோ அந்த ஒரு நாள்ல மட்டும் படித்து முடித்து விடுவது போல்!), ரெண்டு பென்சில், ஷார்ப்னர், எரேசர் எடுத்துக் கொண்டு, புது பஸ் ஸ்டேண்ட் வந்தேன்.

சேலம் செல்லும் ஜே.கே.பி.எஸ்.ஸில் ஏறிக் கொண்டேன். குமாரபாளையத்திற்குத் திரும்பாமல், நேராக பைபாஸ் வழியாகச் சென்று, சேலம் சென்றடையும் போது மாலை ஆறு.

இங்கும் கொஞ்சம் பழங்கள், ப்ரிட்டானியா பட்டர் க்ரீம் பிஸ்கெட் பாக்கெட் (அநியாயம்! இதைக் கடைசி வரை சாப்பிடவே இல்லை.), ஹனி கேக் நான்கு வாங்கிக் கொண்டு, பஸ் ஏறிக் கொண்டேன்.

பஸ் டி.வி.யில் 'காலபைரவன்' ஓடிக் கொண்டிருந்தது. தீப்பிடித்து எரியும் எலும்புக்கூடு 'நிக்கோலஸ் கேஜ்' எல்லோரையும் மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த டி.வி. ரிப்போர்ட்டினி அழகாய் இருந்தாள்.

பிறகு முடிந்தவுடன், கீனு ரீவஸின் 'கான்ஸ்டன்டைன்'. தாங்க முடியவில்லை. பொறுக்க முடியாமல், மாற்றி, 'போக்கிரி'(தமிழ்) போட்டார்கள். சற்று நேரத்திலேயே, ஒரு குரல் கேட்டது, "ட்ரைவர் சார், காலபைரவனையே மறுபடியும் ஒரு தடவ போட்டுருங்க. இல்லைனா ஆஃப் பண்ணிடுங்க. தூங்கலாம்.."

சொல்ல மறந்து விட்டேன்.

கண்டக்டர் ஒவ்வொருவரிடமாக டிக்கெட் பின் அடித்துக் கொடுத்து, என்னிடம் வந்த போது, நூறு ரூபாயைக் கொடுத்து, அவரது கேள்விப் பார்வைக்குப் பதிலாய், "பேங்ளூர்.." என்றேன்.

JLPT என்று ஜப்பான் ஃபவுண்டேஷன் ஒரு தேர்வு வைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் முதலாம் ஞாயிறு உலகெங்கும் நடத்தப்படுகின்றது. ஜப்பானிய மொழியறிதலுகான பரீட்சை. நான்கு வருடங்கள் எழுத வேண்டும். மொத்தம் நான்கு நிலைகள். லெவல் நான்கு தான் அடித்தளம். அங்கிருந்து மெதுவாக ஊர்ந்து, முதல் நிலையை எட்டிப் பிடித்துப் பாஸ் செய்தால், நாமும் ஜப்பானியரோடு 'வாங்க பழகலாம்.' அடுத்த வருடத்தில் இருந்து, வருடம் இரண்டு முறை. ஜூலை மற்றும் டிசம்பர்.

ஆனால் ஒவ்வொரு நிலையும் கடினமாகவே இருக்கும். மூன்று வகையான எழுத்து முறைகள். அதில் சீனாவிடமிருந்து வந்து கலந்து போன 'கஞ்சி' என்ற எழுத்து முறையில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வாக்கியங்களுக்கேற்ப உச்சரிப்பிலும், அர்த்தங்களிலும் பல அவதாரங்கள் எடுக்கும்.

இம்மொழியை நிஹாங்கோ என்கிறார்கள். நிஹோன் என்றால் ஜப்பான். கோ என்றால் மொழி. ஜப்பானிய மொழி. இது போன்ற காரணப் பெயர்கள் கொஞ்சம் நிறைய!

இலக்கணத்தைப் பொறுத்தவரை நமக்கு, இன்னும் சொல்லப் போனால் இந்தியர்களுக்கு பெரிய பிரச்னையே இருக்காது. மேற்கத்தியவர்களுக்குத் தான் ஆதியிலிருந்தே தடுமாறும். முக்கிய காரணம், வாக்கிய அமைப்பு.

நாமும் ஜப்பானியர்களும் Subject Object Verb.

அவர்கள் Subject Verb Object.

எனவே நாம் சுலபமாக "நான் ஜப்பானுக்குப் பேனேன்" என்பதை நம் தாய்மொழியிலேயே உருவாக்கி, அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ட்ரான்ஸ்லேட் செய்து, "வதாஷி வ நிஹோன் எ இகிமாஷித" என்று சொல்லி விடலாம்.

ஓசூர் ரோட்டில் உள்ள க்றைஸ்ட் காலேஜில் 2008 டிசம்பர் 7 காலை 8:30க்கு எக்ஸாம். அதற்காகச் சென்றேன்.

ஆட்டோவில் சென்று இறங்கிய போது, க்றைஸ்ட் காலேஜ் மாறி, க்றைஸ்ட் யூனிவர்சிட்டி ஆகி இருந்தது. சின்ன வாசல் வழியகப் பலரும் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். மறித்து ஜப்பான் லேர்னிங் ஸ்கூல் சார்பாக வாழ்த்தி, ஒரு பேனா கொடுத்தார்கள்.

ஒவ்வொரு லெவலுக்கும் தனித்தனியாக எக்ஸாம் ஹால் பிரித்து வைத்திருக்க, நான் எழுதச் சென்ற நான்காம் நிலைக்கு, மெய்ன் பில்டிங். அருகில் லைப்ரரி.

ஒருவரிடம் சென்று விசாரிக்க, "ஸ்ட்ரெய்ட் கோ. தென் லெஃப்ட்" என்றார். ஆங்காங்கே நோட்டீஸ் போர்ட்களில் ஷெட்யூலும், ஹால் விபரங்களும் தெளிவாகக் கூறப்பட்டிருக்க... அதிர்ச்சி!

ஹால் டிக்கெட்டில் 08.30 ம்தல் 10.00 மணி என்று குறிப்பிட்டிருந்ததால், தேர்வு முடித்து விட்டு டிபன் கொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். மாற்றி விட்டிருந்தார்கள். 09.00 முதல் 11.20 வரை.

மொத்தம் மூன்று தேர்வுகள். இரண்டு இடைவெளிகள், இருபது நிமிட அளவில்.

ஏன் லேட் என்று ஆளுக்காள் கேட்டுக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் 'இன்னும் பொட்டி வரலையாம்' என்று தகவல் பரப்பினார்கள். ஆங்கில, இந்தி, தமிழ், கன்னட மொழிகளில் அதே வசனம். அவர்களுக்கு யாராவது நிஹோங்கோவில் சொல்லி இருப்பார்கள்!

உடனே ஃபோன் செய்து ப்ளான்கள் எல்லாம் மாற்றி விட்டேன்.

மெய்ன் பில்டிங் வரப்பின் திட்டுக்களில் ஒன்றில் வெயில் படாத நிழல் பிரதேசத்தில் சென்று அமர்ந்து, சுற்றிப்புறத்தை நோட்டமிட... குளுமை..!

பலவித வயதுகளில், பலவித மனிதர்கள். ஜீன்ஸ் அணிந்த வெண்ணிற பெண்கள், சுடிதார் அழகிகள், அங்கிள்கள், ஆண்ட்டிகள், கைக்குழந்தையைத் தட்டிக் கொடுத்த கணவனிடம் தேர்வுக் கவலையுடன் உரையாடும் பெண்கள், 'யோ' பையன்கள், சீரியஸாக லெவன்ந்த் ஹவர் ப்ரிப்பரேஷன் அவசரர்கள்... இடையில் சரேலென குறுக்கே பாய்ந்து ஓடிய ட்ராக் ஷுட் கல்லூரி மாணவர்கள்.

8.50 அளவில் உள்ளே அனுமதித்தார்கள். எனது தேர்வெண்ணிற்கு, 217-ம் அறையைத் தேடி, இரண்டாம் மாடிக்குச் சென்று பார்த்து, 'காலபைரவராக' நின்று கொண்டிருந்த எக்ஸாம் சூபர்வைசரிடம் ஹால் டிக்கெட் காட்டி விட்டு, சீட்டை நோட் செய்து விட்டு, வெளியே வந்து நிற்க.. ஆச்சர்யம்.

எதிர்பாராத விதமாகப் பழைய கம்பெனி ஒன்றின் நண்பர். அவரிடம் கொஞ்ச நேரம் 'அந்த நாள் ஞாபகம்' பேசி விட்டு, ஆரம்ப மணியடிக்க உள்ளே சென்றேன்.

சுற்றிலும் இளம் பெண்கள். எனக்கு அருகில் பெஞ்சின் அந்த எண்டில் மட்டும் ஒரு மகா ஆண்ட்டி.'உனக்கு மட்டும் ஏன்டா எப்பவுமே இதே மாதிரி நடக்குது?' என்று மனதிற்குள் நொந்து கொண்டேன்.

டெஸ்க்கைப் பார்த்தேன். காம்பஸ் கீறல்கள். ஆங்கிலப் பெயர்கள், அம்பு துளைக்கும் ஹார்ட்டின், பக்கவாட்டுப் பெண் முகம், ஏதேதோ கன்னடக் கிறுக்கல்கள். மனம் பள்ளி நினைவுகளுக்கு ஜம்ப் அடிக்க முயன்ற போது, அருகிலேயே தேர்வெண் ஒட்டி வைத்த சின்ன துண்டுப் பேப்பர். ஓ..! எக்ஸாம்..!

ஒவ்வொரு தேர்வையும் பற்றி விளக்கமாகக் கூறி, உங்களைக் கடுப்படிக்க விரும்பவில்லை.

முடித்து விட்டு, வெளியே வந்து விட்டேன். நெடு நாள் கழித்துக் கண்ட நண்பருடனே வெளியே வரத் துவங்கிய போது, மாறு வேடப் போட்டி நடந்த ஹாலைப் பார்த்துக் கொண்டே கடந்தோம். சிறு குழந்தைகள் பல வேடங்களில்! மற்றொரு ஹாலில் டான்ஸ் காம்படீஷன்.

பைக்கில் ஏறி, ஃபாரமில் இறங்கிக் கொண்டேன். அவரிடம் பேசிக் கொண்டே, எலிக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.

இப்போது, நாம் கொஞ்சம் அரை நாள் முன் போவோமா?

சேலம் - பெங்களூரு விரைவுப் பேருந்தின் ஜன்னல் இடுக்குகள் வழியாக குளிர் காற்று ஜிலீரென வீசிக் கொண்டிருந்ததில் இருந்து, எல்லையைக் கடந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது.

காற்றில் இருக்கும் அந்த மதுரமான வாசம் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அழைத்துச் சென்றது. 2006 அக்டோபர்க்குப் பின் இப்போது தான் அடுத்த விசிட். கொஞ்சமாய் எட்டிப் பார்த்தேன்.

மஞ்சள் சொரியும் விளக்குகள். அந்தரத்தில் மிதக்கின்ற மேம்பாலங்கள். மேம்பாலத் தூணை நனைக்கும் மனிதன். நல்ல முகூர்த்த நாட்கள் என்பதால், சீரியல் செட்களால் மினுக்கும் மண்டபங்கள். பூ அலங்கார மும் வளைவுகள். வடக்கு நோக்கிச் செல்லும் நீண்ட உடல் கண்டெய்னர்கள். லாரிகள். ட்ராவல் பஸ்கள். குளிர். மேலும் குளிர். பான் வாசம்.

நள்ளிரவுக்குக் கொஞ்சம் முன்னே, பதினோரு மணி அளவில், மடிவாலாவில் நடுங்கிக் கொண்டே இறங்கினேன். ஆட்டொ பிடித்து திப்பசந்த்ராவுக்குச் செல்லச் சொன்னேன். 200 ரூபாய் வாங்கி விட்டார்கள். கடக்கும் போது மடிவாலா ஆஞ்சநேயருக்கு பல வருடங்கள் கழித்த வணக்கம். 'இப்போதைக்கு நம்ம ஊர்' சாமியான ஐயப்பா கோயிலுக்கும் ஒரு வணக்கம். எக்ஸாம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றது..?

ரைட் டர்ன் அடித்து, இன்னர் ரிங் ரோடை அடைந்து, கடந்து, தொம்லூர் சிக்னல் ஃப்ளை ஓவரில் ஏறி இறங்கி, இந்திரா நகரில் நுழைந்து, குமார் கொடுத்திருந்த அட்ரஸ் வீதிக்குள் சென்று விட்டு, அவனை call செய்து வரச் செய்து, அவன் வந்து கை காட்ட, நான் ஆட்டோவில் இருந்து இறங்கி, பைசா கொடுத்து, ஆட்டோவை ரிட்டர்ன் அனுப்பி விட்டுப் பார்க்க, 200 அடி தூரத்தில் நின்று கை காட்டிக் கொண்டிருந்த குமாருக்கும் எனக்கும் இடையில் உறக்கம் கலைந்த வெறிக் கண்களோடு ஐந்தாறு புஷ்டியான தெரு நாய்கள்.

'யார்ரா இவன் பேட்டைக்கு புச்சா இருக்கறது..?'

கொஞ்சம் பயமாக இருந்தாலும், துணிந்து நடந்து சென்றேன். பெங்களூரு தெரு நாய்களின் திருவிளையாடல்கள் லோகப் பிரசித்தம். காலபைரவன் படத்தைப் பார்த்த வாசம் அடித்ததோ என்னவோ, அவை என்னைச் சுற்றிச் சுற்றி வந்து, கால்களை மோப்பம் பிடித்து விட்டு நகர்ந்து சென்று விட்டன.

சனிக்கிழமை முடிந்து கொண்டிருந்தது. அவசர அவசரமாக, இந்தப் பதிவை எழுதி, குமாரின் வீட்டில் இருந்து தான் போஸ்ட் செய்தேன்.

இரவு முழுதும் உறங்காமல் படித்து விட்டு (கடைசி நேரத்தில் படிக்கிறவராம்!) அப்படியே அந்த சூட்டோடு சூடாகக் களத்தில் குதித்து விடலாமா என்று யோசித்து, இரண்டு மணி நேரங்கள் படித்தேன். சென்ற இரவும், இந்த இரவும் தூக்கம் இல்லாமல் போனதால், கண்கள் எரியத் தொடங்கின. எல்லாவற்றையும் மூடி வைத்து விட்டு, ஃபேன் போடத் தேவை இல்லாத, டிசம்பர் மாத பெங்களூரு குளிரை அனுபவித்துக் கொண்டே, 5 மணிக்கு அலாரம் வைத்து விட்டு, முழுதாகப் போர்த்திக் கொண்டு, தூங்கி விட்டேன்.

காதுக்குள் கிணிகிணித்த 5 மணி அலாரத்தை அணைத்து விட்டு, கஷ்டப்பட்டு எழுந்தே விட்டேன். 6.30க்குள் தயாராகி, குமாரிடம் விடைபெற்று, (பத்து மணிக்கு எக்ஸாம் முடிஞ்சிரும். காலேஜுக்கு வந்திடு. கொஞ்ச நேரம் ஊர் சுத்திட்டு, மதியமா நான் கிளம்பிடறேன்) வெளியே வந்து விட்டேன்.

இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பை நோக்கிச் செல்ல, அதிகாலை ஜாகிங் மனிதர்கள். ஒருவர் தன் செல்ல நாய்க்கும் கூட கழுத்தில் ஸ்கார்ஃப் கட்டி இருந்தார். ஒரு பூங்காவைக் கிழவர்களும், பேரிளம் பெண்களும் வேண்டுதல் போல சுற்றிக் கொண்டிருந்தார்கள். பேப்பர்கள் விசிறியடிக்கப்பட்டன. நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடி ஜன்னல்கள் பனிப் போர்வை பூண்டிருந்தன. ஒரு கேவ்ரலெட்டின் மேல் விரல்களால் கையெழுத்திட்டேன்.

201கள் சில தொம்லூர் சிக்னலில் புதுப்பெண் போல் ஒதுங்கிக் கொள்ள, சில மடிவாலா செல்வதாக அறிவித்தன. ஒன்றில் ஏறிக் கொண்டேன். மஞ்சள் கம்பிகள். நீல முகங்கள். மடிவாலா ஒந்து வாங்கிக் கொண்டேன். இன்னும் கொஞ்சம் பேர் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் கைகளில் ஜப்பானிய எழுத்துக்கள். படித்துக் கொண்டே வந்தார்கள்.

ஒழுங்காக மார்க்கெட் தாண்டி லெஃப்ட் டர்ன் அடிக்கும் போதே இறங்கியிருக்கலாம். அழகாக ரோட்டைக் கடந்து, மார்க்கெட் அல்லது மெஜஸ்டிக் பஸ்ஸில் ஏறி, டயரி சர்க்கிளை அடைந்திருக்கலாம். ஏதோ நினைப்பில் அங்கு இறங்காமல் விட்டு விட்டு, சில்க் போர்டில் குதித்தேன்.

தலையைச் சுற்றி விட்டது. எந்தப் பக்கம் போக வேண்டும் என்று!

அந்த ஞாயிறு அதிகாலை (7 மணி) பான் பெட்டிக் கடைக்காரர்களையும், பஸ் காத்திருப்பவர்களையும் கேட்டால் 'கொத்தில்லா' என்றார்கள். எல்லாத் திசைகளிலும் பேருந்துகள் ஓடிக் கொண்டேயிருக்க, கடைசி வழியாக 'அட்ரஸ் இல்லா தெருவும் அறிந்தவரான' ஆட்டோக்காரரைச் சரணடைந்தேன். நாற்பது ரூபாயில் காலேஜ் வாசலுக்கு கொண்டு வந்து இறக்கி விட்டார்.

லி என்று நட்புடனும், சரோ என்று பாசத்துடனும் அழைக்க்கப்படுகின்ற சீனியர் அனலாக் டிசைன் எஞ்சினியரான கே.சரவணன் ஏற்கனவே ஃபாரமில் தான் இருப்பதாக கால் பண்ணி சொல்லி விட, ஃபாரம் வரிசையில் நின்றேன். சமீப குண்டு வெடிப்புகளில் இருந்து ஃபாரமில் மெட்டல் டிடெக்டர் வரவேற்பு தான். உடலைத் தடவிப் பார்க்கிறார்கள். கையில் ஏதேனும் பேக் கொண்டு போயிருந்தால், பிரித்துப் பார்க்கிறார்கள். ஆனால் இந்த பாதுகாப்பு போதாது என்றே தோன்றியது.

என் பேக்கில் அடைத்திருந்த ஸ்டடி புத்தகங்களையும், ஒரு செட் அழுக்கு துணியையும் நுனி விரல்களால் தொட்டுப் பார்த்து விட்டு, உள்ளே அலோவினார்கள்.

ஃபாரமில் நான் வழக்கமாகச் செல்லும் ஒரே இடமான விருப்ப லேண்ட் மார்க்கில் சந்தித்தோம். பெங்களூருவில் வசிக்கின்ற காக்கா, பண்டானந்த் மற்றும் பலர் வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த மண்டையின் திருமணத்திற்குச் சென்று விட்டிருந்தபடியால, மிஞ்சியிருந்த எலியுடன் மட்டுமே சந்திப்பு.

எப்போதும் போல் முதலில் புக் செக்ஷனை அலசி ஆராய்ந்து, இரண்டே இரண்டு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். ரஸ்கின் பாண்ட் தொகுத்த ரூபா பப்ளிகேஷன்ஸ்ஸின் The Rupa Book of Great Suspense Stories. விலை :: 95 ரூ. ஆங்கில எழுத்துக்களைப் படிப்பது அரியது என்பதால், எலி சஜஸ்ட் செய்த The Adventures of Sherlock Holmes.80 ரூ.

அரவிந்த அடிகாவின் வெள்ளைப் புலியைத் தேடினால், கொஞ்சம் விலை அதிகம். ப்ளாட்பாரக் கடைகளில் புலி வேட்டை ஆடலாம் என்று விட்டு விட்டேன்.

வழக்கமாக ஞாயிறு இப்படி இருக்காது. ரிசஸன் டைம் என்பதால், எல்லோரும் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள் என்றான் எலி. உண்மை தான். கொஞ்சம் கூட்டம் குறைவாகத் தான் இருந்தது. அதற்காக காலியாக இருந்தது என்று சொல்ல முடியாது. காசு இருக்கிறவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள், எல்.சி.டி. ஸ்க்ரீன் டி.வி.யையோ, செரித்துக் காணாமல் போகும் கேக்குகளையோ, டெரிலீன் துணிகளையோ, தேவையோ, தேவை இல்லையோ...!

மதியம் சரோ அக்கா வீட்டிற்குச் சென்று சூப்பராக மீன் குழம்பும், மீன் வறுவலும்..! ஆஹா..! என்ன தான் கேரளாவில் ஃபிஷ் ஃப்ரையும், மீன் குழம்பும் சாப்பிட்டாலும் வீட்டு சாப்பாடு போல் வருமா? அதுவும் அங்கே கடல் மீன்கள். பெங்களூருவில் நன்னீர் (காவிரி?) மீன்கள். முந்தின இரவிலும், காலையிலும் வேறு சாப்பிடவில்லை அல்லவா..? ஒரு ஃபுல் கட்டு கட்டி விட்டு, கையோடு இந்தப் பதிவை அங்கேயே எழுதி முடித்து, போஸ்ட் செய்து விட்டேன்.

மீண்டும் ஆறு மணிக்கு சில்க் போர்டிலேயே சேலம் செல்லும் ஏர் பஸ்ஸைப் பிடித்து, பதினோரு மணியளவில் சேலம் 'பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவு சேலம் மத்திய பேருந்து நிலையம்' வந்தடைந்து, உடனடியாக 11.20க்கு பவானி கிளம்பும் கடைசி பேருந்தைக் கேட்ச் செய்து, பின்னிரவு, அதாவது திங்கட்கிழமை வெகு அதிகாலை 1 மணி 10 நிமிடங்களுக்கு ஊரை அடைந்தேன்.

இந்த இரவும் தூக்கம் போனது.

கேரளாவில் பக்ரீத் திங்கள். எனக்குத் தெரிந்து தமிழகத்திலும், கர்நாடகத்திலும் செவ்வாயில்! திங்கட்கிழமை வீட்டு வேலைகளை கவனித்து விட்டு, திருவனந்தபுரம் கிளம்பினேன். அம்மா கட்டிக் கொடுத்த பொருட்கள் லிஸ்ட் இது : மாஸ் பாதாம் பவுடர் 200 கி (அட, கிலோ இல்லைங்க, கிராம் தான்!), ஸ்ரீ ஆஞ்சநேயா சத்துமாவு 500 கி, லயன் சீட்லெஸ் டேட்ஸ் 200 கி, மன்னா யொயிட் ஓட்ஸ் அரை கிலோ, ஜோஸப் ஸ்பைசஸ் தயாரிப்பான fenugreek (வெந்தயங்க!) 50 கிராம் மூன்று பாக்கெட்டுகள், வறுத்த கோதுமை மற்றும் தால் பருப்பு ரெண்டு மூட்டைகள்..!

21:40க்கு ஈரோடு ஜங்ஷன் இரண்டாவது தடத்திற்கு வந்த சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலின் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில், மாடியில் இடம் கிடைத்தது. கம்பிகளின் மேல் அமர்ந்து கொண்டேன்.

கையில் கிடைத்த ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே, திருப்பூரில் ஏறி, திருச்சூரில் இறங்கிய ஓர் அழகான பெண்ணை அவ்வப்போது கவனித்துக் கொண்டு, தூங்கி விழுந்த ஒரு குட்டிப் பெண்ணைத் தன் மடியில் இழுத்துப் போட்டுக் கொண்ட ஜன்னலோரம் அமர்ந்திருந்த சிறுவனின் தாயுள்ளத்தை வியந்து கொண்டு, திருச்சூரில் காலியான எதிர் கம்பிக் கட்டுகளைப் படுக்கையாக்கிப் படுத்துக் கொண்டு அவ்வப்போது உறங்கிக் கொண்டு, கொல்லத்தில் கிட்டத்தட்ட காலியாகி இருந்த பெட்டியை புத்துணர்ச்சியான பூவாசத்தோடும், குளித்த சுக தெளிவான முகத்தோடும் கல்லூரி மாணவ/மாணவிகள் ஆக்ரமித்துக் கொண்டு சத்தமாகப் பேசிக் கொண்டே வருவதைக் கண்டு, எழுந்து, முகம் கழுவி, வாசலில் எதிர் வந்து பெருவேகத்தில் முகம் மோதும் கேரளக் குளிர்க் காற்றை அனுபவித்து, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில்வே ஸ்டேஷனில் பேக்கைச் சுமந்து இறங்கும் போது செவ்வாய்க்கிழமை காலை 07:40 ஆகி இருந்தது.

ஆபீஸுக்குப் போக வேண்டும்.

7 comments:

ஆயில்யன் said...

இரு மாநிலங்கள் கடந்து ஒரு தேசம் காணச்செல்லும் தேர்வு தொடர்பான நிகழ்வுகள்!

ஐயப்பன் சிலை ஊர்வலமும்

ராமராஜன் பாடல்களும் பகிர்ந்த விதம்

அழகு!

அப்புறம் அடுத்த வருஷம் ஜப்பான் போய் பழக ஆரம்பிச்சிடுவீங்க தானே!

வாழ்த்துக்கள் :))

Karthik said...

ரொம்ப அழகா இருந்ததுங்க...

//அந்த அதிகாலை விடியல் பயணத்தில் டி.டி.எஸ். எஃபெக்ட்டில் கேட்டுப் பார்த்து வந்த ராமராஜன் பாடல்கள்.

நம்ம ஊர் பஸ்களின் கொடுமைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

//எக்ஸாம் தான் ஒரு மனிதனை எப்படி எல்லாம் மாற்றி விடுகின்றது..?

ஹா..ஹா.
:)

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
ஜப்பான் மொழித் தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...தும்முவதைக் கூட ஒரு சுவாரஸ்யமான பதிவாக்கி விடுவீர்கள் போல...நன்றாக இருந்தது...
ஓஷோவின் ஜோக்ஸ் சூப்பர்.(நானும் ' படிப்படியாக தியானம்' புத்தகம் படித்தேன். தனியா இருக்கச் சொன்னாரு. அது பிடிக்கலை. விட்டுட்டேன்)...
//ஒவ்வொரு தேர்வையும் பற்றி விளக்கமாகக் கூறி, உங்களைக் கடுப்படிக்க விரும்பவில்லை.//
நீங்கள் பதிவிட்டால் அதுவும் நன்றாகத்தானிருக்கும்.
வசந்த் சில நாட்களுக்குமுன் உங்கள் பக்கத்தில் கோட்டொவியங்கள் பற்றிய உங்கள் பதிவு கண்டேன். பிறகு படிக்கலாமென விட்டுவிட்டேன். இப்போது மறந்துவிட்டேன். தேடிப்பார்த்தேன். இவ்வளவு பதிவுகளுக்கு மத்தியில் கண்டுபிடிப்பது கொல்லன் பட்டறையில் ஊசிதேடும் கதையாகிவிடுமென்பதால் உங்களிடமே கேட்கிறேன். அப்பதிவின் முகவரி அளிப்பீர்களா...?

Anonymous said...

அந்த நாய்கள் என்ன ஆனது

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். நீங்கள் சொன்ன கோணம் நன்றாக இருந்தது. அடுத்த வருடமே ஜப்பான் போய்ப் பழகுவது கடினம் தான். எனினும் முயன்று கொண்டே இருப்போம்.

***

அன்பு கார்த்திக்...

நன்றிகள். இன்னும் சில பஸ்களில் கொடுமையான பழைய பாடல்களைப் போடுவார்கள், பாருங்கள். உட்காரவே முடியாது. வேறு வழியில்லை... எழுந்து நின்று கொண்டே செல்வேன். :)

எக்ஸாம் மனநிலைகள் உங்களால் தான் இன்னும் நன்றாகச் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். :)

***

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். நீங்கள் சொல்லும் 'கோட்டோவியப் பதிவு' எது என்று எனக்கு புரியவில்லை. இன்னும் கொஞ்சம் க்ளூ தர முடியுமா..?

***

அன்பு அனானி...

நன்றிகள். இப்போது எழுதி விட்டேன்.

thamizhparavai said...

சில ஓவியங்கள் ,'தாய் தன் குழந்தையுடன்' இது இரு வேறு கோணங்களில் வரையப் பட்டிருந்தது. 'தாய்,குழந்தை, தகப்பன்' இன்னொரு ஓவியம் என நினைக்கிறேன். சரியாக நினைவிலில்லை. மேற்கண்ட குறிப்புகளில் கண்டுபிடிக்க முடியாவிடில் விட்டு விடுங்கள். நான் தேடிக் கொள்கிறேன். சிரமத்திற்கு மன்னிக்க....

அடுத்த வருடம் ஜப்பான் செல்கிறீர்களா... வாழ்த்துக்கள்..

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

இதோ நீங்கள் தேடியது இங்கே!!!