Thursday, January 22, 2009

இரு மலர்கள் - முன்ஷி பிரேம்சந்த்.

சென்னையில் இருந்த ஒரு காலகட்டத்தில் ஒருமுறை எழும்பூர் சென்றிருந்தேன். எம்.எம்.சி.யின் பெண்கள் விடுதி அங்கே இருக்கின்றது. அங்கே தங்கி படித்துக் கொண்டிருந்த ஒரு தோழியைக் காணச் சென்றிருந்தேன். அவள் இன்னும் வரவில்லை; தாமதமாகும் என்று தெரிய வந்ததில், அப்படியே கால் போன போக்கில் நடந்து பாந்தியன் சாலைக்கு வந்து, மேம்பாலம் மறைக்கும் ம்யூசியத்துக்குள் நுழைந்தேன். பலமுறை பார்த்து இருந்ததால், இம்முறை அருகில் இருந்த செங்கல் கட்டிடமான கன்னிமரா பொது நூலகத்திற்குச் சென்று விட்டேன்.

பல பிரிவுகளில் எத்தனையோ புத்தகங்களில் தலை நுழைத்து, பலர் இருக்க, அட்மினிஸ்ட்ரேஷன் பதவிகளுக்குத் தயார் செய்யும் தனிப்பிரிவின் எதிரில் இருக்கும் ஒரு பகுதியில் கைக்கு கிடைத்த ஒரு ஒல்லி புத்தகத்தை எடுத்து, மூட்டைப்பூச்சி ராஜ்யமான ஒரு நாற்காலியில் அமர்ந்து, புரட்டினால் அது ப்ரேம்சந்தின் ஒரு சிறுகதைத் தொகுப்பு.

அப்போது தான் முதன்முறையாக இப்படி ஒரு ஆளைக் கேள்விப்படுகிறேன். அவரது சில இந்தி கதைகள், சில உருது கதைகளின் தமிழாக்கங்கள். யார் செய்தது என்று மறந்து விட்டது. அதில் ஒரே ஒரு கதை, தீபாவளி சம்பந்தமாக, ஒரு சிறுவனைப் பற்றிய கதை. நினைவில் இருக்கின்றது.

மென்மையான நடை. ஒரு டெர்மினல் பாய்ண்ட்டை வைத்துக் கொண்டு, அதை நோக்கி நம்மை இழுத்துச் செல்லும் வரிகள். மூல இந்தியிலேயே படித்தால் இன்னும் சுகமாக இருக்கும் என்று தோன்றியது.

ந்தியில் இருந்து கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள் மொழிபெயர்த்து, 2006-ல் அல்லயன்ஸ் வெளியீடாக வந்த இருமலர்கள் என்ற அவரது இரண்டு சிறுகதைகள் என்று சொல்லலாமா, அல்லது குறுநாவல்..? சின்ன சின்னதாக பத்து சேப்டர்கள் கொண்ட இரு கதைகள். ஆனால் உண்மை சம்பவங்கள் போல் தெரிகின்றது.

ஒளரங்கசீப் காலத்துக் கதை ஒன்று. சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் துவங்கிய காலகட்டத்தில், பல தென்னிந்திய அரசுகள் சுதந்திரப் போர் நடத்திய போது, 'ராணி ஸாரந்தா' நடத்திய ஒரு தேச மானப் போராட்டம் முதல் கதை.

கொடூரனாக வரலாறெங்கும் வர்ணிக்கப்பட்டிருக்கும் தைமூரின் மனதிலும் அன்பை ஊறச் செய்து, கொன்று குவிப்பதல்ல இஸ்லாம் காட்டும் வழி என்று தைரியமாகச் சொல்லி அவன் படையெடுப்புகளை மென்மைப்படுத்திய, ஆண் வேடமிட்ட உமத்துல் ஹபீப் என்ற பெண்ணின் கதை 'தைமூரின் உள்ளம்'. பின் அவள் அவனது உள்ளத்திற்கும் இராணி ஆகின்றாள்.

இரு குறுங்கதைகளும் எளிமையாகப் பாய்கின்றன. அரை மணி நேரத்தில் முடிந்து விட்டன. எனினும் தெளிவான நடை நம்மை மேலும் அவரது எழுத்துக்களைத் தேடச் செய்கின்றது.

புத்தகம் : இரு மலர்கள்.

புத்தக வகை : குறுங்கதைகள்.

ஆசிரியர் : முன்ஷி பிரேம்சந்த் (தமிழில் : கா.ஸ்ரீ.ஸ்ரீ.)

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : அல்லயன்ஸ் பதிப்பகம் (srinivasan@alliancebook.com)

விலை : 20 ரூ.

2 comments:

Karthik said...

நல்ல அறிமுகம்.
:)

//விலை : 20 ரூ.

தமிழ் புக்ஸ்லாம் அநியாயத்துக்கு சீப்புங்க.

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திக்...

இது போன்ற பழைய புத்தகங்கள் தான் பைசா கம்மி! பல ஜாஸ்தியான விலை. ரொம்ப யோசிக்க வைத்து விட்டன. :)