Friday, January 23, 2009

சாயாவனம் - சா.கந்தசாமி.

ரில் எங்களது பழைய வீட்டில் கொஞ்சமாய் ஒரு வெற்றிடம் இருந்தது. மூன்று தறிகள் போட்டிருந்தோம். காஞ்சிபுரத்தில் நெய்வது போல் கைகளால் செய்யப்படுவது இல்லை. கால்களால் கட்டைகளை மாறி மாறி அடித்து, கோர்த்த நூலை பாவின் வழியாக ஒவ்வொரு முறையும் எதிரெதிர் திசைகளில் செலுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக ஜமுக்காளங்கள் வடிவம் பெறும்.

வீட்டிற்கும் தறிகளுக்கும் இடையில் இருந்த பிரதேசத்தில் நாங்கள் ஒரு காய்கறித் தோட்டம் அமைத்திருந்தோம். கிணற்றில் இருந்து சகடை போட்டு சேந்திச் சேந்தி நீர் எடுத்து வார்த்து ஒரு மாதிரி குட்டித் தோட்டம் அது.

பழுத்த தக்காளியைப் பிழிந்து போட்டு, தண்ணீர் ஊற்றினால், இரண்டு நாட்களில் பூனை முடிகளோடு தக்காளிச் செடிகள் பிறக்கும். நான்கு குச்சிகளை நட்டு வைத்து அவரைக் கொடி போட்டது இன்னும் நினைவிருக்கிறது. வெங்காயச் செடிகள். கீரைகள். பாம்பே கொத்தினாலும் ஒன்றும் ஆகாமல் 'சூ..சூ..' என்று உதறி விட்டுச் செல்லும் வலு தரும் கீழாநெல்லிச் செடி. இலைகள் நூறு வேப்ப இலைகளுக்குச் சமம். அத்தனை கசப்பு. இன்னும் முட்டைத் தோல்களைக் கவிழ்த்துப் போட்டு, மாட்டுச் சாணிகளை மருதாணி போல் மொட்டை முனைகளில் பிடித்து வைக்க, ஐந்து இலைகளா, ஏழு இலைகளா என்று எண்ணிப் பார்த்து, முதல் பூ மொட்டை ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டதும் பையைக் கழட்டி எறிந்து விட்டு, அருகில் போய் 'பூத்து விட்டதா...பூத்து விட்டதா' என்று ஆவலாய் எட்டிப் பார்த்து, ரோஸ் நிறத்தில் பூத்திருந்த ரோஜாப் பூவை ஆசையாய்த் தடவும் போது முள் குத்தி துளி இரத்தம் பூத்தது.

இன்று அந்த இடங்களில் பெட் ரூமோ, பூஜை ரூமோ இருக்கும். சகடைகளும், ஓர் இரவு முழுதும் கத்திக் கொண்டே இருந்த பூனைக்குட்டியை வெளியே எடுத்துப் போட உதவிய பாதாளக் கரண்டியும் ரிட்டையராகிப் போய், மோட்டார் செருகிக் கொண்டு, கிணறு இழுத்து மூடப்பட்டுள்ளது.

அந்த வீட்டிற்குப் பிறகு, உள்ளூரிலேயே சில பத்துக்குப் பத்து ஜோசியக் கூண்டுகள் மாறி, சென்னை ஹாஸ்டலில் நான்காண்டுகள் வாழ்ந்து, கோட்டூர்புரம், கோடிஹள்ளி, வேளச்சேரி, கேளம்பாக்கம், லால்பாக், இந்திராநகர், கழக்குட்டம், ஸ்ரீகார்யம் என்று வசித்தாலும் இன்றும் மூச்சு வாங்கி வேர்த்து திடுக்கிட்டெழும் கனவுகளின் களனாக இருப்பது, தோட்டமும், கிணறும், பச்சை நிற வெயில் ஊடுறுவும் தண்ணீர்த் தொட்டியும், ஓட்டுப் பட்டாசலையும், ஓரங்களில் பூ பொறித்த சிவப்புத் திண்ணையும் கொண்ட பாட்டி வீடு தான்!

இன்று பாட்டியும் இல்லை..! வீடும் இல்லை..!

ஆசையாய் வளர்த்த தோட்டம் அழிக்கப்பட்ட வலி இன்னும் அடியாழத்தில் இருக்கின்றது.

காலச்சுவடின் க்ளாஸிக் வரிசையில் வெளியிடப்பட்டிருக்கும் சா.கந்தசாமியின் சாயாவனம் நூல், காவிரிக் கரையில் ஒரு காடு அழிக்கப்பட்டு சர்க்கரை ஆலை கட்டப்படுவதின் நிகழ்வுகளைச் சொல்கிறது.

சிதம்பரம், சிவனாண்டிப் பிள்ளை, குஞ்சம்மா, பாப்பா, பஞ்சவர்ணம், ஊர்ப்பெரியவர்கள், பழனியாண்டி, கலியபெருமாள் மற்றும் பலர் கதாபாத்திரங்கள் வழியாக ஒரு திருமணச் சடங்கு, காடு அழிப்பு, இலேசான சாதி நிலவரம் என்று வ.உ.சி. காலகட்டத்தை எடுத்துக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் நாவல் இது! மெல்ல மெல்ல பண்டமாற்று மாறி பண வியாபாரம் சிதம்பரத்தால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. சாயாவனத்தில் இருந்த புளியந்தோப்பில் இருந்து வருடாவருடம் எல்லோரும் பறித்துக் கொண்டிருந்த நிலை மாறி வில்லியனூரில் இருந்தும் மேலூரில் இருந்தும் புளியங்காய்கள் கொண்டு வரப்படும் நிலை வருகின்றது. ஆற்றங்கரைப் பிள்ளையார் கோயிலில் கிழவி புளியின் சுவை மாறியதைச் சொல்லி சலித்துக் கொண்டு போவதோடு கதை முடிகின்றது.

முன்னுரை பாவண்ணனால் எழுதப்பட்டிருக்கின்றது. காலங்காலமாக நின்றிருக்கும் காட்டின் அழிவும், அங்கு ஆலை கொண்டு வரப்பட்டு இயந்திரங்கள் மூலம் மனித சக்திக்கு வலுவான மாற்று அறிமுகம் செய்யப்படும் காலகட்டம் வெறும் கதை அல்லை; தேசத்தின் நிலை மாறி வருவதின் குறியீடாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறார்.

மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன. நம் கண் முன்னும் தெளிவாகத் தெரிகின்றது.

ஒவ்வொரு முறை ஊருக்குச் சென்று வரும் போதும், பால்யத்தில் கண்ட அடையாளங்கள் திருத்தப்பட்டிருக்கின்றன. ஊருக்கே சின்னங்கள் என்று நான் நினைத்திருந்த கடைகள் காணாமல் போய் அங்கே பேக்கரியும், எஸ்.டி.டி. பூத் இணைந்த பொரி கடலைக் கடையும் வந்திருக்கின்றன. சாலையை அகலப்படுத்தும் முயற்சிகளில் ஒல்லியான கட்டிடங்கள் உயரமாக மாறி இருக்கின்றன. டவுசர் போட்டு பின் குத்தியிருந்த பையன் இன்று பெருவயிறும் லுங்கியுமாக டி.வி.எஸ்ஸில் வந்து இறங்கி, நான் கண்டிராத காளான் சூப் கடையில் இரண்டு ப்ளேட் வாங்குகிறான். ட்யூப் லைட்கள் மினுக்கின கம்பங்களில் மஞ்சள் பூசப்பட்ட சோடியம் வேப்பர் குளிர்க்கின்றது. ஆகாயத் தாமரைகள் மிதக்கும் பவானியாறும், பாறைகள் இடுக்கில் பாயும் காவிரி நீரும், கூடல் புள்ளியில் அமைதியில் உறைந்திருக்கும் கோயிலும், சரிந்திருக்கும் இலந்தை மரமும், மதில்கள் உயர்த்தப்பட்ட ஸ்கூல் காம்பவுண்ட்டும், தவிர்த்து ஊர் மாறிக் கொண்டே தான் வருகின்றது.

மாற்றங்களை ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டி இருக்கின்றது, பிடித்தாலும், இல்லா விட்டாலும்!

புத்தகம் : சாயாவனம்.

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : சா.கந்தசாமி.

கிடைக்குமிடம் : காலச்சுவடு பதிப்பகம்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 150 ரூ.

3 comments:

தேவன் மாயம் said...

இன்று பாட்டியும் இல்லை..! வீடும் இல்லை..!

ஆசையாய் வளர்த்த தோட்டம் அழிக்கப்பட்ட வலி இன்னும் அடியாழத்தில் இருக்கின்றது.
///
எல்லோர் மனதிலும் இப்படி ஒரு வலி உள்ளது...

தேவா.....

Anonymous said...

அது கீழாநெல்லி செடி இல்லை... வேறு என்னவோ...

இரா. வசந்த குமார். said...

அன்பு தேவன்மயம்...

ஹூம்..! வலிகள் கரையட்டும்...!!!