Friday, December 25, 2009

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!



"நாப்பது ரூபா ஆகும் சார்..!"என்றார் அந்த ஆட்டோக்காரர். பயணிகளின் சீட்டில் சரிந்து படுத்திருந்தார். மஃப்டியில் தான் இருந்தார்.

நான் சவிதாவில் நின்று கொண்டிருந்தேன். மதியம் மயங்கி வானம் மாலையைக் கவ்விக் கொண்டிருந்த 15:40. ஞாயிறு பிற்பகல் என்பதால், பிரஃப் ரோட்டில் மூன்று சைக்கிள்கள், ஓர் ஆட்டோ, பி.எஸ்.பார்க்குக்குத் திரும்பிய '5' தவிர ஐந்து ஈக்கள், எட்டு காக்கைகள் இருந்தன. ஷட்டர்கள் வளைந்த வாசல்களில் கடைகள் இறுக்க மூடியிருந்தன.

"கலெக்டரேட் போக அவ்வளவு ஆகுமா..?" இந்தா, இங்கிருந்து நாலு எட்டு வைத்தால், எம்.ஜி.ஆர். சிலை. அவர் முகம் பார்க்கும் பெருந்துறை ரோட்டில் ஒரு இருபது எட்டு வைத்தால், வந்து விடுகின்றது ஆட்சியர் அலுவலகம்.

திரும்பியே பார்க்காமல் நடக்கத் தொடங்கினேன்.

சாம்பாரில் தூள் போல் மேகங்கள் விரவியிருந்தன. சாலை மத்தியின் கம்பங்களில் சரடுகளில் தலைவர்கள் தொங்கினர். செங்கல் பத்திரங்களுக்குள் மரங்கள். கண்ணாடிக் கடைகள், சர்பத் ஸ்டால், மட்டன் ஷாப், மருந்துக் கடை, காலியாக இருந்த ஆட்டோ ஸ்டாண்ட். வெட்டிய பிரிவில் வளைந்து, சிவப்பு வட்டம் நிறுத்தியிருந்த டீசல் வாகனங்களுக்குள் புகுந்து பெருந்துறை ரோட்டைப் பிடித்தேன்.

மே.எம்.சி.ஹெச். கிளை போர்டு பெரிதாய்த் தெரிந்தது; இரவில் எரியும். சாலைத் தடுப்பின் கம்பிகளில் ஜூவல்லர்ஸ் விளம்பரங்கள். கீழே ஒதுக்கிய மணல் சிறு குன்றுகள். குப்பைகள். ஸ்கூட்டியில் 'U' அடித்த பெண்ணுக்கு வயது பத்தா..? எதிர்த்த ஆட்டோவில் கிரைண்டரை மனைவி போல் கட்டிக் கொண்டு ஒருவர் போனார். சைக்கிள் கேரியரில் பேட் செருகிப் பறந்த சிறுவன் சட்டையில் மூன்று பட்டன்கள் திறந்திருந்தன. டீ ஸ்டால் வாசலில் கண்ணாடிகள் ஏற்றிய ஸ்கார்பியோ நின்றிருந்தது. தூரத்தில் 'தீரன் சின்னமலை மாளிகை' பொடிமாஸ் எழுத்துக்களில் தெரிந்தது. பொதுப்பணித் துறை அலுவலகமான காலிங்கராயன் இல்லத்தில் 'அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது' போர்டின் கீழ் ஒரு சட்டை கிழிந்த பைத்தியக்காரன் படுத்திருந்தான். அவன் தாடி மேல் ஓர் பூச்சி ஊர்ந்தது. ஷேர் ஆட்டோ ஒன்று கடந்து லேசாகத் தயங்கிப் பின் விரைந்தது. கத்திரிப்பூ நிறத்தில் ஒரு மாருதியின் பின் கண்ணாடியில், 'Santhosh','Shalini' காமிக் சான்ஸ் முறையில் ஒட்டியிருக்க, ஜன்னலில் முன்னங்கால்களைத் தொங்க விட்டு புஸுபுஸு நாய்க்குட்டி எட்டிப் பார்த்தது.

ரண்டாவது வளைவு திரும்பியதும், லோட்டஸ் ஷாப்பிங் ஷோரூம் தெரிந்தது. மூடப்பட்டிருந்தது. ஒட்டி ஒரு சந்து போனது. அதன் நுழைவாயிலில் இருந்து பார்த்தால், கடைசி முனையில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் எம்ப்ளம் காற்றில் கலைய, நோக்கி நடந்தேன். அங்கிருந்து எவ்வித அம்புக்குறியோ, டேக் டைவர்ஷனோ இல்லாததால், ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஓர் எதிர் அரங்கத்தில் தான் சங்கமமாகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

நல்லவேளை, கொஞ்சம் பேர் நின்று கொண்டிருந்த மற்றொரு கட்டிடத்தில், 'The Builder Association of India' என்ற மெட்டல் போர்டு தெரிய அங்கு சென்றேன்.

மாடத்தில் நின்ற பதிவர்களுக்கு நிச்சயமாய் என்னைத் தெரிந்திருக்காது. 'யாரோ ஓர் ஆசாமி வெளியூரில் இருந்து வருகிறான் போலிருக்கிறது.' என்று ஒரு ஷார்ட் டெர்ம் விரோதப் பார்வை பார்த்தார்கள். நானும் நிகழ்வை முடித்து விட்டு அப்படியே அனந்தபுரம் ரயில் பிடிப்பதாக இருந்ததால், ஒரு துணி மூட்டை முதுகில் சுமந்திருந்தேன். நானும் அவர்களை பதிலுக்கு சந்தேகப் பார்வை பார்த்து விட்டே, மரக்கதவைத் திறந்து ஏ.ஸி. அறைக்குள் சென்றால், ஏ.ஸி.இல்லை.

வழக்கம் போல் கடைசி வரிசைக்கு போய் ஓர் ஓரமாய் ஒதுங்கி உட்கார்ந்து கொள்ளலாம்; கூப்பிடும் போது போய் எழுதிக்கொண்டு வந்ததை ஒப்பித்து விட்டு வந்து விடலாம் என்று கடை வரிசையில் மூட்டையைச் சாத்தினேன். உப்புசமாக இருந்தது. சும்மாவா, ஒன்றரை மைல் இதோ இந்த லேப்டாப்பையும், வீட்டுச் சாப்பாட்டு உடம்பையும் தூக்கிக் கொண்டு வந்ததில் வேர்த்தது. வெளியே சென்று காத்தாட நிற்க வெளிச் சென்றால், ஒரு வண்டி வந்தது.

புத்தகங்கள் இறக்கினார்கள். நானும் 'உபசரிப்புக் குழுவில்' இருக்கும் ஒருவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, ஒரு கட்டு புத்தகங்களை ஆம்னியிலிருந்து எடுத்து வைக்கும் போது, பெயர் பார்த்தால், 'ஈரோடு மாவட்ட வரலாறு' என்றிருந்தது. அட்டையில் தந்தை பெரியார், ம.செ. வரைந்த தீரன் சின்னமலை, பவானிசாகர் அணை மற்றும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயக்கோபுரம் (ஹைய்யா! நம்ம ஊரு!) கண்டதும் மகிழ்ச்சி வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவர்கள் வந்தனர். தெரிந்தவர்கள் கட்டிக் கொள்ள, சிரித்துப் பேசிக் கொள்ள, எப்போதும் போல் கூச்ச சுபாவியான நான், ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டு எப்போதும் போல் எல்லோரையும் கவனிக்கத் தொடங்கினேன்.

கதிர் வந்தார். கூட்டத்தில் கரைந்தார். சட்டையில் குத்திக் கொள்ள பெயர்ப் பேப்பர் தந்தார். தங்க பின்னூக்கு. குத்திக் கொண்டேன். நவீன மாட்டு மடி போல் திருகியதும், டேப்பில் டீ சுரந்தது. டிஸ்போஸ்பிள் தம்ளரில் பிடித்துக் குடித்தோம். புகைப்படக் கலைஞர் நந்து மாடத்தில் எல்லோரையும் தெலுங்கு வில்லன்கள் போல் கைதூக்கி நிற்க வைத்துப் படம் பிடித்தார். ஒரு போட்டோகிராபர் BAI போர்டைப் படம் பிடிக்க என்னை நகரச் சொல்ல, நான் என்னைத் தான் படம் பிடிக்க விரும்புகிறார் என்று இன்னும் கெத்தாய் அதை மறைக்க, அவர் தலையில் அடித்துக் கொண்டார். (யோவ்..! நகருய்யா அந்தாண்ட..!)

வேறொரு வேனில் திருப்பூர்ப் பதிவர்கள் வந்தார்கள். யாரிடமோ நான் கேட்க, 'ஆமாம்..! வால்பையன் மட்டையாகி விட்டார் தான்!' என்றார். நந்துவிடம் 'நிலா ஏன் வரவில்லை?' என்று கேட்டதற்கு, குழந்தைதனமான காரணம் சொன்னார். அவருடன் பேசும் போது, ஒரு பதிவர் வந்து, 'நீங்கள் கொங்கு வாசலில் எழுதும் வசந்தா..?' என்று கேட்டார். '..லிலும் எழுதுகிறேன்..' என்றேன். 'நீங்கள் எந்த வசந்த்..?' வினவினார் வேறொருவர். 'சாதா வசந்த் தான்..!' பதிலுறுத்தேன். டீ குடித்தேன்.

'தமிழ்மணம்' காசி ஆறுமுகம், லதானந்த் போன்ற பெரியவர்கள் வந்தனர். கை கொடுத்துத் திருப்பி வாங்கிக் கொண்டேன்.

பழமைபேசி தன் ப்ளாக்கர் ப்ரொஃபைலிலிருந்து நேரடியாக வந்திருந்தார்.

கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் எழுதிய புத்தகங்களை டேபிளில் அடுக்கும் போது, ஆரூரன் அவர்களிடம் 'வானம் கறுத்து கனமாய் எப்போது வேண்டுமானாலும் அழத் தயாராய் இருக்கிறது' என்று சொன்னதை மதித்து, வேறு பக்கமாய் வைத்துக் கொண்டார். ஆயிரம் ரூபாய் கொடுத்தது தவிர ஈரோடு வலைப்பதிவர் சங்கமத்திற்கு என்னுடைய மூன்றாவது பங்களிப்பு இது என்பதை, ஏ.ஸி. இருந்தும் இல்லாததுமான ஹாலுக்குள்ளே வெட்டிப் பேச்சு, அதாவது அனானிகள் பற்றிய சூடான பேச்சு நடந்து கொண்டிருந்த போது வெளியே மழை கொட்டியதே உறுதிப்படுத்தியது.

அனைவரும் டீ குடித்து முடித்ததும், சரியாக நான்கு மணிக்குத் துவங்குவதாக இருந்த சங்கமம் நிகழ்வு, சற்று அரைவட்டம் சரிந்து நான்கு இருபதுக்குத் துவங்கியது.

கதிர் மேடையில் அமர்பவர்களைக் கூப்பிட்ட போது, என்னையும் கூப்பிட்டு விட்டார். கொஞ்சம் பேர் சோகையாகக் கைதட்டினார்கள். பாக்கெட்டில் எழுதி வைத்த காகிதத்தைத் தொட்டுப் பார்த்து அதன் இருப்பை உறுதி செய்து கொண்டு, ஜிப் எல்லாம் சரியாகப் போட்டிருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டு (அதாவது தலை குனிந்து) முன் வரிசையில் ஒரு ஸீட் காலியாக இருந்தாலும், பின் வரிசைச் சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். பக்கத்தில் 'செந்திலின் பக்கங்கள்'.

அமீரகத்தில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் பூசியே குளிப்பார் போலிருந்தது. செவப்புன்னா செவப்பு அப்படி ஒரு செவப்பு. போதாக்குறைக்கு மஞ்சள் சட்டை வேறு அணிந்திருந்தார். கொஞ்சம் தள்ளியே உட்கார்ந்து கொண்டேன். இடது பக்கம் ஒரு சீட் காலி விட்டு, பதிவர் ரம்யா மற்றும் கடைசியாகப் பதிவர் சுமஜ்லா.

முன் வரிசையில் பதிவர் 'வலைச்சரம்' சீனா அவர்கள், கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள், பதிவர் ஆரூரன், தமிழ்மணம் காசி மற்றும் பழமைபேசி.

கதிர் எல்லோரையும் வரவேற்று விட்டு, ஆரூரன் தலைமையேற்று நடத்துவார் என்று சொல்லி விட்டு கீழேயே முன் குழுமத்தில் உட்கார்ந்து கொண்டார். அதை யாராவது முன் மொழிந்தால், நான் வழிமொழிவதற்குத் தயாராகத் தான் இருந்தேன். ஆனால் யாரும் முன் வராததால், நானும் வழி வரவில்லை.

அரூரன் எழுந்து முதலில் தமிழ் வாழ்த்துப் பாட அழைக்க, ஓர் அம்மணி வந்து மைக் பிடித்தார். 'நீராரும் கடலுடுக்க' நினைத்தால், அவர் வேறு ஒரு பாடலைப் பாடினார். கட்டுடைப்பு அப்போதே துவங்கி விட்டது. (பின் வால்பையன் தொடர்ந்தார்!) எல்லோரும் எழுந்து நின்று என்னவோ 'பாவம் போல்' தலை குனிந்து நின்றதைப் பார்த்தால், the so called தமிழன்னை மனம் வருந்தியிருப்பாள்.

நன்றாகவே பாடினார் அவர். முடிந்து எல்லோரும் அமர்ந்த பின், ஆரூரன் தலைமை உரை பேசினார். காலிங்கராயன் வாய்க்கால் பற்றியும், அந்த மன்னரைப் பற்றியும் பேசி விட்டு, அந்தக் காலத்தில் பதிவுகள் இல்லாததால், அவர் பெயர் Calling-கரையான் என்றாகி விட்டதால், எல்லோரும் அன்றாட வாழ்க்கையைப் பதிவு செய்வதன் மூலம் 'வரலாறு மிக முக்கியம் அமைச்சரே' என்று அறிவுறுத்தினார்.

பிறகு ஒவ்வொருவரையும் ஒரிஜினல் தலைப் பெயரையும், வலைப் பெயரையும், தத்தம் வலை முகவரியையும் சொன்னார்கள். தலைக்குத் தலை காமிரா காட்டி வீடியோவில் விழுங்கிக் கொண்டார்கள். நானும் அவசரமாக எழுந்து யாருக்கும் தெரிந்து விடக் கூடாதே என்பதே லட்சியம் போல், கடகடவெனச் சொல்லி விட்டு உட்கார்ந்தேன்.

பிறகு ஈரோடு பதிவர்களின் கருத்துக்களில் முதலாவதாக என்னைக் கூப்பிட்டு விட, மடித்து வைத்திருந்த சீட்டை எடுத்து, அத்தனை வோல்டேஜ் சாப்பிடும் ஃப்ளாஷ்ஷின் போட்டான்கள் மேலே பாய மைக் முகத்தில் 'வணக்கம்' சொன்னால், அது இருமியது. ஒருவர் பின்னால் ஆம்ப்ளிஃபயரைத் திருகி விட்டுத் தலையாட்ட, 'மற்றொரு வணக்கம்' என்றேன். இன்னும் சீராகவில்லை.திரும்பிப் பார்த்தேன். கொஞ்சம் குமிழ்களைச் சுற்றினார். சரி செய்து விட்ட நம்பிக்கையில், உற்சாகமாய் 'இன்னொரு முறை சொல்லுங்க' என்றார். 'கடைசியாய் ஒரு வணக்கம்' என்றேன். சக்ஸஸ்.

மேடைப் பயம் வருமோ என்ற கவலை இருந்தது. சுத்தமாக இல்லை. அவ்வப்போது எழுதி வைத்துப் படித்ததன் இடையில் உடனே தோன்றியதையும் சொன்னேன். பாரதியைப் பற்றிய ஆசிரியப்பாவைப் படித்து முடித்த போது எல்லோருக்கும் பிடித்திருந்தது போல் தெரிந்தது. நிறைய கைதட்டல்கள் கேட்டன. காரணம், அந்தக் கடைசி வரி அதிர்ச்சியில் இருக்கின்றது. இடையே வால் இரண்டு கேள்விகள் கேட்டார். அவரைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்த காரணத்தால், எனக்கு அவரது குறுக்கீடுகள் எவ்வித உணர்வையும் தரவில்லை. சிலர் பொது வெளியில் நடந்து கொள்ளும் முறையை மீறி விட்டார் என்கிறார்கள்; சிலர் நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார் என்றார்கள். அவை அவரவர் ஃபீலிங்; மொத்த அவையின் அல்ல.

கரெக்டாக நான் பேசி முடித்து அரை நிமிடத்தில் என் அம்மா வந்தார்கள். மகன் பேசியதை மிஸ் செய்து விட்டார்கள். வீடியோ இருக்கின்றது என்று சொல்லி இருக்கிறேன்.

பதிவர் சீனா அவர்கள் வாசகர்களின் எதிர்பார்ப்பையும், பதிவர்களின் எதிர்பார்ப்பையும் பற்றி அவர் வீட்டம்மா எழுதிக் கொடுத்தது என்று ஒப்புக் கொண்டு படித்துப் பேசினார்.

பதிவர் சுமஜ்லா, பதிவுகளை அழகாகவும், நிறைய விட்ஜெட்டுகளையும் இணைத்து பதிவின் பக்கங்களைச் செம்மைப்படுத்துவது எப்படி என்று நிறைய பேச நினைத்திருந்தாலும், காலம் ஐந்து நிமிடங்களே கொடுக்கப்பட்டதால், சுருக்கமாகச் சொல்வதாகச் சொன்னார்.

பழமைபேசி 'சுருக்'காகப் பேசி, நறுக்காக முடித்தார். அவர் பேச்சில் அயல்தேசப் பனி படர்ந்திருந்தது. கொஞ்சம் கொங்கும் மணந்தது.

உலகத் திரைப்படங்கள் பற்றிப் பேசிய வண்ணத்துப்பூச்சி சூர்யா, 'வேட்டைக்காரன்' ரிலீஸைப் புயல் என வர்ணித்தது வருத்தம் தந்தது. புயலாவது வருவதாகப் பயம் காட்டி, பிறகு ஆந்திராவுக்கோ, ஒரிஸாவுக்கோ திசை மாறி விடும்.

செந்தில்வேலன் விக்கியில் தமிழ்க் கட்டுரைகளின் போதாமையைப் பின்னிஷ் மொழிக் கட்டுரைகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு வருந்தினார். அமீரகத்தில் நடந்த கணிணிப் பயிலரங்கம் பற்றிச் சொன்னார்.

மதியமே ஈரோடு வந்து விட்ட சென்னைப் பதிவர்கள் சங்கம நிகழ்வுக்கு வந்த போது, மணி நாலரையைத் தாண்டி விட்டது.

பதிவர் ரம்யா அவர்கள் சமூகத்தில் நமக்கு என்ன பங்கு என்று பேசினார். நன்றாகவே இருந்தது. (இப்படிச் சொன்னால் இப்போது எதுவும் ஞாபகம் இல்லை என்று அர்த்தம்!)

கதவைத் திறந்து 'அகநாழிகை' வாசுதேவன் வந்த போது,அவர் பெயரைக் கூப்பிட்டு விட, வலைப்பதிவு எழுத்தாளர்கள் அச்சு ஊடகத்திற்கு வர வேண்டும் என்று வரவேற்றார்.

சிறப்பு உரையாற்றிய கல்வெட்டாளர் செ.இராசு அவர்கள் வலைப்பதிவு எழுதுவதால், இவற்றை எழுத வேண்டிய பேப்பர்கள் மிச்சமாகி மரங்கள் காப்பாற்றப்படுகின்றன என்றார். கோபன் ஹேகனில் 'அவர்கள்' அடித்துக் கொண்டதை விட, ஈரோடு சங்கமத்தில் இயற்கையைக் கொஞ்சம் காப்பாற்றி விட்டோம் என்று பெருமிதம் அடைந்தேன். அவரது 'ஈரோடு மாவட்ட வரலாறு' நூலை ஊருக்குப் போகும் போது படித்தேன். நிறைய தகவல்களோடும், கொஞ்சம் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

'தமிழ்மணம்' காசி, வலைப்பதிவின் அவசியத்தை ஆட்சியாளர்களும் கூட இப்போது உணரத் தலைப்பட்டு விட்டார்கள் என்பதால் உஷாராக இருக்கவும் என்றார். நாமக்கல்லில் அன்று காலையில் ஆட்சியருடன் சென்று கிராம மக்கள் வலைப்பதிவு மூலம் எப்படி அரசு நிர்வாகத்தைத் தொடர்பு கொள்வது என்பதைப் பற்றி விளக்கம் கொடுத்ததாகச் சொல்ல, ஒரிச்சேரிப் புதூர் கருப்புசாமி, கட்டற்ற சுதந்திரத்தின் இணையத்தைக் கையில் கொடுத்து, 'எதை வேண்டுமானாலும் தேடலாம்; கிடைக்கும்' என்று சொல்லி விட்டு ஒதுங்கினால், எதை முதலில் தேடுவான் என்று யோசித்துப் பார்த்தேன்.

பிறகு நிறைய பதிவர்கள், 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' என்று அச்சடித்த துணியின் காதுகளையும் கால்களையும் பிடித்துக் கொள்ள, 'க்ளிக்'குகள் சாட்சியாக, குழுமம் துவக்கப்பட்டு விட்டதை அறிவித்தார்கள்.

நான் சென்று வால்பையன் அருகில் அமர்ந்து கொள்ள,கலந்துரையாடல் துவங்கியது.

அனானி பற்றிய கேள்விகள் தாறுமாறாகப் பாய்ந்தன. ஓர் ஓரமாக உட்கார்ந்து அனானியும் கேட்டுக் கொண்டிருந்தால், மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்ற அளவில் அரை மணிக்கும் மேலாக அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்ததில், உண்மையில் 'பிரபல' பதிவர் அவராகத் தான் இருக்குமோ என்ற ஐயம் வந்தது.

கருத்துச் சுதந்திரம் பற்றிக் வருத்தப்பட்டோம்; உளவுத் துறையால் நாம் கவனிக்கப்படுகிறோம் என்று கிலியூட்டப்பட்டதும், 'ஏன் அவர்கள் கமெண்ட் போடுவதில்லை?' என்ற நியாயமான கவலைப்பட்டோம்; வலைப்பதிவு எழுதி மட்டுமே பிழைத்துக் கொண்டிருக்கும் சில அதிர்ஷ்டசாலிகளைப் பற்றிப் பேசி ரகசியப் பெருமூச்சு விட்டோம்; வலைப்பதிவுகளைப் ப்ராடெக்ட் அனலிசிஸ் பண்ணும் ஒரு கருவியாகப் பாவிப்பதாகச் சொல்லி, அதனால் ப்ளாக் படிப்பதே தமக்கு வேலை என்று ஒருவர் சொல்ல, அவரிடம் 'ஓபனிங் இருக்கா..?' என்று சிலர் கேட்டோம்;

வால்பையன் ஒவ்வொருவரின் பேச்சுக்கு நடுவிலும் இடையே புகுந்து தன் கருத்தைச் சொல்ல முயன்றார். பிறரால் அது ஒரு மாதிரிக் 'காசியில் பிராமணனை வெட்டிய பாவம்' போல் பார்க்கப்பட்டது. வலைப்பதிவில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வேட்டைக்காரனை வேட்டையாடுபவர்கள், நிஜ வெளிக்கு வந்தவுடன், சமூகம் எதிர்பார்க்கின்ற படி தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது :).

நன்றியுரையில் கதிர் எல்லோருக்கும் - வந்த பதிவர்கள், வராத நல்லவர்கள், கொஞ்ச வாசகர்கள், தொலைதூரத்தில் இருந்து வாழ்த்தியவர்கள், ..த்தியதுடன் பைசாவும் அனுப்பியவர்கள், தமிழ்மணம் முகப்பில் வைத்திருந்தது, ஹால் கொடுத்த கட்டிட சங்கத்தினர், வீடியோ பிடித்த பவானிக்காரர்கள் - எல்லோருக்கும் நன்றி சொன்னார்.

தேசிய கீதம் பாடும் எண்ணமே யாருக்கும் வராமல், உணவுக் கூடத்தை வெற்றி கொள்ள விரைந்தேன். அங்கங்கே முடிச்சு முடிச்சாய் நின்று பேசிக் கொள்ள ஆரம்பிக்க, நானும் அம்மாவும் சாப்பாட்டுக்குச் சென்று அசைவம் பகுதியில் உண்டோம். கே.எஸ்.ஆரில் பணிபுரியும் இருவர் பதிவர்களாய் அறிமுகம் செய்து கொண்டு பேசி விடை பெறும்போது நண்பர்களாகிப் போயினர். முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இளமையாய் இருந்து, அவர் மட்டும் முடிந்த அளவுக்குத் தூய தமிழ் பேச, அசைவத் தமிழ் பேசினேன். மதுரை ஸ்ரீ, கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரிடமும் பேசினேன். அஸ்ஸாம் ஆர்மிக்காரர் விட்டலன் அவரது கவிதைத் தொகுப்பைக் கொடுத்தார். சுவையான டிட்பிட்ஸ் அவற்றின் சில பக்கங்களில் கிடைத்தன. வாழ்த்துக்கள் இராணுவக் கவிஞரே!

உபசரிப்புக் குழுவின் அடிப்படையாகப் பைசா கொடுத்து விட்டு, கதிரிடமும், வால்பையனிடமும் விடை பெற்று விட்டுக் கிளம்பினோம்.

பஸ்ஸே வரவில்லை. இருபது நிமிடங்கள் கழித்து வந்த ஓர் ஆட்டோவில் முப்பத்தைந்து ரூபாய்க்கு ஈரோடு ஜங்ஷன் சென்றால், கூட்டமே இல்லாத, ஆச்சரிய ஞாயிறு இரவு அது. பதிலுக்குச் சென்னையிலிருந்தே மாலை போட்ட அன்பர்களை நிரப்பி அனந்தபுரம் வாரச் சிறப்பு ரயில் வந்தது. அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டார்கள்.

ரயிலின் முன்பு மூன்று ஜெனரல் கோச்சுகளைச் சேர்த்தவர்கள், கடைசியில் வைத்திருந்தது ஒன்றே ஒன்று தான். வழக்கம் போல் அடித்துப் பிடித்து ஏறி, சிங்கிள் விண்டோ சீட்டில் கிடைத்த தக்கிணியூண்டு இடத்தில் உட்கார்ந்து 'ஈரோடு மாவட்ட வரலாற்றை'ப் பிரித்தால், எதிரில் தொங்கியவாறு உட்கார்ந்திருந்தவர் 'நிங்ஙள் வஸந்த்குமார் தன்னே..?' என்றார்.

'அதே' என்றேன். மலையாளிகள் வரை என் எழுத்துப் பரவியிருப்பது பெருமகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் கொடுத்தது.

'நிங்ஙள் எங்ஙனம் எண்ட பேர் அறிஞ்சது..?' என்று சோதித்தேன்.

'ஒண்ணுமில்லா..! நிங்ஙள் பாக்கெட் சீட் பறஞ்சுது..! எனிக்கு கொறச்சு தமிழ் படிக்கான் அறியும்' என்று காட்டினார்.

அப்போது தான் கவனித்தேன். டீ-ஷர்ட் பாக்கெட்டில் தங்கப் பின்னூக்கில் குத்தியிருந்த 'ஈரோடு தமிழ்ப் பதிவர்கள் சங்கமம் - உபசரிப்புக் குழு' கார்டை கழட்டாமல் வைத்திருந்தேன்.

'ஆரானு க்ரூப் அது..?' என்று கேட்டார்.

'எண்ட க்ரூப்பாக்கும்..!' என்று சொன்னேன். அதில் ஏதோ ஒரு சந்தோஷம் இருந்தது.

ரயில் வேகம் எடுத்துப் பாய்ந்தது.

26 comments:

Unknown said...

வசந்த் நல்லாத்தான் கூர்ந்து கவனிக்கறீங்க(பைத்தியகாரன் தாடி ஈ யைக் கூட). அன்று நீங்கள் பேசியதைக் கேட்டு நாம கூட கதை எழுதலாமுன்னு
தோனுச்சு.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சந்துரு

பின்னோக்கி said...

வாவ்...
என்ன வர்ணனைகள்
இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். மிகவும் பிடித்தது. நன்று.

க.பாலாசி said...

//நவீன மாட்டு மடி போல் திருகியதும், டேப்பில் டீ சுரந்தது. //

நல்ல ரசனைங்க. பதிவ படிக்கும்போதே அந்த நிகழ்வெல்லாம் கண்முன்னாடி நிறுத்திறீங்க...பதிவர் சந்திப்புல இவ்வளவு விசயங்களை உத்து கவனிச்சிருக்கீங்க...நல்ல பதிவு தலைவரே...

ஆயில்யன் said...

//ஆட்டோவில் கிரைண்டரை மனைவி போல் கட்டிக் கொண்டு ஒருவர் போனார். //

:)))
அவரே கேட்டாக்கூட டக்குன்னு சிரிச்சுடுவாரு :) கலக்கல்!

ஆயில்யன் said...

//பொதுப்பணித் துறை அலுவலகமான காலிங்கராயன் இல்லத்தில் 'அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது' போர்டின் கீழ் ஒரு சட்டை கிழிந்த பைத்தியக்காரன் படுத்திருந்தான்.//

அனுமதி இல்லாமல் யாரும் வரக் கூடாது @ பொதுப்பணித்துறை அலுவலகம் ? ஆஹா ஆபிசருங்க நல்லாவே வேலைப்பாக்குறாங்க!

ஆயில்யன் said...

பதிவர் சந்திப்பு பற்றிய முழுமையான, அனேக இடங்களில் சற்று நீட்டி சிரிக்கவைத்த வரிகளோடு வர்ண்னைகள் வழக்கம்போல அருமை!

நன்றி பாஸ் :)

ஸ்வாமி ஓம்கார் said...

திரு வசந்த குமார்,

உங்கள் ஈரோடு சங்கமம் பேச்சும், இந்த பதிவில் உள்ள வர்ணனைகளும் ரசித்தேன்.

சுவாரசியம்.

ஜெ.மோவின் வாசனை கொஞ்சம் உண்டு. இருந்தாலும் நன்றே.

கிரி said...

உங்க வர்ணனை ரொம்ப நல்லா இருக்கு.. கடைசி "சேட்டன் சம்சாரிச்சது" உட்பட :-)

வெண்பூ said...

உங்களின் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று வசந்த். பதிவு முழுவதும் விரவியிருக்கும் சின்ன சின்ன உங்கள் ஸ்டைல் டச்களை விட கடைசியாக நீங்கள் முடித்த விதம் அருமை. பாராட்டுகள்..

ஆரூரன் விசுவநாதன் said...

//தமிழ் வாழ்த்துப் பாட அழைக்க, ஓர் அம்மணி வந்து மைக் பிடித்தார். 'நீராரும் கடலுடுக்க' நினைத்தால், அவர் வேறு ஒரு பாடலைப் பாடினார். கட்டுடைப்பு அப்போதே துவங்கி விட்டது.//


அன்பின் வசந்த்,
நீராரும் கடலொடுத்த....என்ற பாடல் தமிழ்த்தாயிற்கான வாழ்த்துப் பாடலாக இல்லை என்பது இலக்கிய உலகில் பரவலான கருத்து. அதொடு மட்டுமன்றி,
" தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்"
என்ற வரிகள் விமர்சிக்கப்பட்ட வரிகள்... திராவிடம் என்பது ஒரு கற்பிதம் என்பது பலரின் வாதம்.

"வடவேங்கடம், தென்குமரியாயிடை தமிழ் கூறும் நல்லுலகம்" என்றுதான் தொல்காப்பியம் முதல் சொல்கிறதே தவிர, திராவிடம் என்று எதிலும் சொல்லப்படுவதில்லை.





தமிழக அரசால் தமிழ்த்தாய் வாழ்த்து என்று அறிவிக்கப்பட்டதால் அது தொடர்கிறது. நிகழ்வன்று நாங்களும் அதை தமிழ் வணக்கம் என்று அறிவித்தோமே தவிர, தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொல்லவில்லை.

புதிய பாடல் பாடப்பட்டதான் காரணத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். இதற்காக கட்டுடைப்பு தொடங்கியது என்றெல்லாம் எழுதியிருக்க வேண்டியதில்லை.

http://groups.google.com/group/minTamil/msg/00a8e68d43af2e87?pli=1

அந்த பாடலின் வரிகளின் லிங்க் இத்துடன் கொடுத்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்.....இதைவிட தமிழை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாடல் இருக்காது என்பது என் போன்ற பலரின் நம்பிக்கை.

http://ilankavi.blogspot.com/2009/12/blog-post_6244.html

அன்புடன்
ஆரூரன்

ஆரூரன் விசுவநாதன் said...

சந்திப்பு குறித்த உங்கள் ஆய்விற்கும், வினாக்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றேன்.

என் மின் அஞ்சலுக்கோ, அல்லது அலைபேசியிலோ தொடர்புகொள்ளுங்கள்

அன்புடன்
ஆரூரன்

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் பயனத்தின் பிம்பங்களை இடுகை நன்கு பிரதிபலித்துள்ளது நண்பரே..

கூட்டத்தில் தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியாகவுள்ளது நண்பரே..

கூட்டத்தில் சிறுகதைக்கான தங்கள் விளக்கங்கள் நன்றாக இருந்தன..

PPattian said...

Great observation and neat narration.. I saw ur photo also in one of the links..

//கடைசியாக நீங்கள் முடித்த விதம் அருமை//

Repeattuuu....

இரா. வசந்த குமார். said...

அன்பு தாமோதர் சந்துரு...

நன்றிகள். 'இவனே எழுதறான்..! நாமும் எழுதலாம் போலிருக்கே!'ன்னு தோன்ற வைத்திருந்தால் அந்தப் பேச்சு பலன் தந்திருக்கிறது என்று மகிழ்கிறேன்..! வாழ்த்துக்கள். கலக்குங்க..!

***

அன்பு பின்னோக்கி...

நன்றிகள். ஊர் சுற்றின பதிவு போட்டாத் தான் வந்து பின்னூட்டம் போடுவீங்க போல..! இல்லாட்டி ஆளையே இந்தப் பக்கம் பார்க்க முடியறதில்ல..!! :)

***

அன்பு க.பாலாசி...

நன்றிகள்.

//இவ்வளவு விசயங்களை உத்து கவனிச்சிருக்கீங்க...

இது ரொம்ப சுலபமுங்க..! மெய்ன் ஈவண்ட்ல இண்ட்ரெஸ்ட் போயிடுச்சுன்னா, இந்த மாதிரி துளித்துளி விஷயங்களையும் நோட் பண்ணத் தோணுமுங்க..! :)

பாருங்களேன், இதிலயும் காமெடியை விட்டுட்டு ஆரூரன்ஜி வந்து மொத்தப் போறாரு..!! :)

***

அன்பு ஆயில்யன்...

நன்றிகள். கொஞ்சம் ஓவராத் தான் காமெடி போயிட்டு இருக்கோ...!!

***

அன்பு ஸ்வாமி ஓம்கார்...

நன்றிகள்.

//ஜெ.மோவின் வாசனை கொஞ்சம் உண்டு. இருந்தாலும் நன்றே.

இது ஒரு மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய வியாதி. எப்படியாவது சரி செய்து விட முயல்கிறேன்..! :)

***

அன்பு கிரி...

நன்றிகள். சேட்டன் சம்சாரிச்சதெல்லாம் நம்ம இங்க இருக்கற பழக்கத்தால தாங்க..! :)

***

அன்பு வெண்பூ...

வாங்க..! எவ்ளோ நாளாச்சு உங்களைப் பார்த்து...! நன்றிகள்..!!

***

அன்பு ஆரூரன்...

வாங்க..!

தலைப்பிலேயே சொல்லி விட்டேன். இது ஒரு காமெடி பதிவு என்று. முடிந்தளவுக்கு யாரையும் புண்படுத்தாத அளவுக்கு எழுத வேண்டும் என்று தான் எழுதினேன். நீங்கள் சொல்லும் அரசாங்க அப்ரூவ்ட் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தான் இதுவரை நான் கேட்டிருந்தேன். எனவே தான் இது புதிதாக இருந்ததைச் சொல்லி இருக்கிறேன்.

/*புதிய பாடல் பாடப்பட்டதான் காரணத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். இதற்காக கட்டுடைப்பு தொடங்கியது என்றெல்லாம் எழுதியிருக்க வேண்டியதில்லை.)*/

அந்தக் காரணம் எனக்கு வேண்டாம். எந்தத் தமிழ்ப் பாடலும் எனக்கு உகந்ததே! தமிழைப் போற்றிப் பாடும் பாடலை நீங்கள் ஹிந்தியில் எழுதிப் பாடினாலும் எனக்குப் பிடிக்கும், அதையும் நான் தமிழ் வணக்கம் என்றோ, தமிழ்த்தாய் வாழ்த்து என்றோ ஒப்புக் கொள்வதில் தயங்க மாட்டேன். எனினும் நீங்கள் கூறியுள்ள தொல்காப்பியத்தில் இருந்தே 'திராவிடம்' என்ற சொல் எந்த இலக்கியத்திலும் சொல்லப்படவில்லை என்பதில் சந்தேகம் வருகின்றது. பிறகு எங்கிருந்து தே.மு.தி.க. வரை அது வருகின்றது..?

கட்டுடைப்பு என்பதை நீங்கள் எந்தப் பொருளில் புரிந்து கொண்டீர்கள் என்று தெரியவில்லை. வழக்கமான பதிவர் சந்திப்புகளில் இருந்து நம் சங்கமம் ஒரு ப்ரொஃபஷனல் தனம் கொண்டிருந்தது என்பதையும் அது சொல்லலாம் அல்லவா..?

/*சந்திப்பு குறித்த உங்கள் ஆய்விற்கும், வினாக்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கின்றேன்.*/

என்னிடம் எந்த ஆய்வு செய்யும் உத்தேசமும், கேள்விகளும் இல்லை. எனினும் உங்களுடைய, கதிருடைய மற்றும் களத்தில் இறங்கி வேலை செய்த அனைத்து ஈரோடு தமிழ்ப் பதிவர்களையும் வணங்குகிறேன். ஒன்றுமே செய்யாமல் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை போல் வந்திறங்கி 'உபசரிப்புக் குழு' என்று பேட்ச் குத்திக் கொண்டதில் கொஞ்சம் சங்கடம் இருந்தது என்னவோ உண்மை.

நன்றிகள்.

***

அன்பு முனைவர்.இரா.குணசீலன்...

நன்றிகள். தங்களைச் சந்தித்தும் மகிழ்வைக் கொடுத்தது.

இரா. வசந்த குமார். said...

அன்பு புபட்டியன்...

நன்றிகள். ஃபோட்டோவை வேற பாத்துட்டீங்களா..? அதெல்லாம் அப்படியே மறந்திடுங்க..! முகத்தையெல்லாம் ஞாபகம் வெச்ச நைட் கனவுல வந்து பயமுறுத்தலாம். :)

geethappriyan said...

வெரிகுட்

வெண்பூ said...

ஆரூரன்,

கட்டுடைப்பு என்பது அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா என்ன? சொல்லப்போனால் சென்னைப்பதிவர்கள் எல்லோரும் பதிவர் சந்திப்பு என்றாலே மெரினா பீச் காந்திசிலை, மழை வந்தால் (கண்டிப்பாக வரும்) மரத்தடி, கொஞ்ச நேர மொக்கைக்குப் பின் டீக்கட்டை அங்கும் மொக்கை, என்பதாகவே செய்துகொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு முறை மரத்தடியில் மழைக்கு ஒதுங்கும்போதும் எதாவது ஹால்ல வெக்கணும்பா என்று சொல்வது தவறாமல் நடக்கும் ஒன்று.

அந்த விதத்தில் பதிவர் சந்திப்பு நடக்கும் முறையையே ப்ரொஃபஷனலாக மாற்றியமைத்து நிஜமாகவே கட்டுடைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.

மெனக்கெட்டு said...

ஈரோடு சங்கமம் - அனைத்தையும் நன்றாக கவர் செய்து எழுதியுள்ளீர்கள்.

வர்ணனைகள் அருமை.

நேரில் பார்த்தது போல் இருக்கிறது.

thamizhparavai said...

பதிவர் சந்திப்பு பற்றிய தாமதமான ஆனால் தரமான பதிவு...(ரொம்ப ஓவராப் போறேனோ...?)
நல்லா இருந்தது வசந்த்...ஜெயமோகன் எப்பருந்து ஒட்டினாரு?

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். ஜெயமோகன் ஸ்டைல் இருக்கா என்ன..? எனக்குத் தெரியவேயில்லை. ஸ்வாமி எப்படி சொல்றார்னு புரியலை.

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்த்திகேயன்...

நன்றிகள்.

***

அன்பு மெனக்கெட்டு...

நன்றிகள்.

வால்பையன் said...

பனியன் வண்ணம், அட நம்பர் கூட கரிகட்டா இருக்குதே!

இருங்க படிச்சிட்டு வந்து கும்முறேன்!

வால்பையன் said...

//சிலர் பொது வெளியில் நடந்து கொள்ளும் முறையை மீறி விட்டார் என்கிறார்கள்; சிலர் நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கினார் என்றார்கள். அவை அவரவர் ஃபீலிங்;//

டச் பண்ணிட்டிங்க தல!

நேர்ல நின்னு பார்த்தா மாதிரி இருக்கு வர்ணனை!

வால்பையன் said...

//வலைப்பதிவில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் வேட்டைக்காரனை வேட்டையாடுபவர்கள், நிஜ வெளிக்கு வந்தவுடன், சமூகம் எதிர்பார்க்கின்ற படி தான் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது :).//

மறுபடியும் ஒருக்கா!

உமா said...

//பாரதியைப் பற்றிய ஆசிரியப்பாவைப் படித்து முடித்த போது எல்லோருக்கும் பிடித்திருந்தது போல் தெரிந்தது.//
வாழ்த்துக்கள்.
பதிவிலும் இடலாமே!

இரா. வசந்த குமார். said...

அன்பு உமா...

நன்றிகள். பதிவிலே குறிப்பிட்டிருக்கிறேனே! காண்க.