Sunday, February 18, 2018

ஆண்டவர் வெண்பாக்கள்.

ணிணியைச் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் கடவுள்களைப் பற்றி எழுதிய சில வெண்பாக்கள் கிடைத்தன. ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதியவை. தொலைந்து விடாமல் இருக்க, இங்கே பதிந்து விடுகிறேன்.

பிள்ளையார் பா:

தொந்தி பெருத்தவனே தின்றுகி டக்கமுச்
சந்தியில் சாய்ந்து சரிந்தென - குந்தியுடல்
உந்தியிலே பானை உளமுகமோ ஆனைநீ
எந்திரிக்க ஆகும் யுகம்.

முந்திவரும் மூத்தோனே! முன்னிற்கும் முற்றருளே!
தொந்திபெரும் தோழமையே! தொல்லெழிலே! - தந்திடுவாய்க்
கந்தனுக்குக் காதலிபோல் காவியமாய்ச் சொல்லாட
வந்தருளை வாரித்தா நீ.

கந்தன் பா:

வள்ளியோ பக்கத்தில் வெண்களிறு இந்திரன்
பிள்ளையோ வெட்கத்தில் பின்பிறந்த - கிள்ளையே,
கோலமயில் கொண்டுமா கோரிபூ சுற்றிய
பாலமுரு கன்பே ருனது.

அனுமன் பா:

வாலொடு வந்தனை வானப்பூ நாடினை
மாலொடு மங்கையும் மாரிலே - நாலொடு
ஒன்றினை நம்பியின் நாமமதை நாவிலே
என்றுமே சொல்லுவா ராம்.

சிவன் பா:

நீறணிந்த நெற்றியே நீரறிந்த உச்சியே
தாரணிந்த தோளினாய்த் தாங்காழிச் - சாரறுந்திக்
கண்டநிறம் கார்நீலம் கொண்டுயர் கோனேமுன்
தண்டமிடத் தாரும் அருள்.

No comments: