Sunday, February 18, 2018

திருமண வாழ்த்துப் பா.

ண்பர் தமிழ்ப்பறவையின் திருமண நாள் வாழ்த்தாக எழுதியது, வெகு ஆண்டுகளுக்கு  முன். பதிவுக்காக இங்கேயும்.


காலைக் கதிரவன் நாளைத் துவக்கிடும்
வேளை நதிக்கரை நீர்நுரை - காலை
நனைகுளிர் போலும் வரும்தினம் யாவும்
மனையுடன் வாழிய நீர்.

வானில் நகர்மதி நோக்கும் மலர்ந்திடும்
ஊனில் வளர்மதி ஊக்கிடும் - தேனில்
கரையாச் சுவையுறு காதலைக் கண்டு
உரையா அடைந்திடும் நாண்.

கீழ்வான் உதித்தொளி கீறிய செவ்வரி
மேல்வான் உதிரொளி தீட்டுதல் - போல்வான்
தருநிழல் தாங்கும் தவப்பெண் அவளின்
வருங்கழல் வாங்கினன் வாழ்வு.
 

(வேறு)

வாயில் இருபுறம் வாழைப் பசுமரம்
வாழ்த்த வரும்பல வாலிபர் நங்கையர்
தாயின் கரம்பிடி தம்பியர் தங்கையர்
தந்தையின் தோளது தாங்கும் மழலையர்
பாயில் சுருட்டிய பஞ்சணைப் போர்வைகள்
பால்நிறைப் பாத்திரம் பச்சைக் கறிகாய்
 வேயின் குழலொளி வேனில் நிழலென
வீதியில் எங்கும் விளங்கும் திருநாள்.

குங்குமம் பன்னீர் குழைத்திட சந்தனம்
மங்களம் பூச மணந்திடும் மஞ்சளும்
திங்களைப் பூட்டிய தேங்காய் இருகனி
தீராப் புகைசூழ் திகழ்மண பத்திகள்
அங்கம் முழுதும் அணிந்தது புன்னகை
அன்பின் அழகின் அரும்புகள் கைகளை
தங்கும் வணங்கும் தவறா தனைவரும்
தானும் இணங்கித் தலையை அசைப்பர்.

வேதமுரை ஞானியரும் வேள்வியிலே தீவளர்ப்பர்
வேண்டியவர் சூழநின்று வாழ்த்திநலம் கூறிடுவர்
நாதமுரை நாயனமும் நல்லிசையின் மேளவொலி
நாற்றிசையும் கேட்டிடவே நல்லவரும் வாழ்த்திடுவர்
பாதம்வரைத் தேடுவரின் பால்நிலவை நாடுவரின்
பாதியுடல் தேவிகொண்ட பைரவரின் ஆசியுடன்
ஏதுகுறை யாதுமின்றி எல்லாநல் செல்வங்கள்
ஏந்திநின்று லட்சுமியும் ராஜனும் வாழியவே!

No comments: