Tuesday, October 31, 2006

50..!

இதுவரை பதிவுகள் பல இட்டு என்ன சாதித்துள்ளேன் என்ற கேள்வி என்னைக் கேட்டுப் பார்க்கிறேன். வாழ்வில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் ஏதேனும் சாதிப்பதற்காக மட்டுமே என்று இருக்குமா? நாம் நடப்பது, சுவாசிப்பது போன்ற செயல்கள் 'சாதரணமா' இல்லை ஏதேனும் சாதனையா என்று எண்ணிப் பார்க்கின்றேன்.

இவை போல பதிவுகள் இடுவதையும் மிகச் சாதாரண நிகழ்வாக நான் நினைத்துக் கொண்டால், ஏதேனும் சாதித்துள்ளேனா என்று கேள்வி எழுப்பியிருக்க மாட்டேன்.

ஆனாலும் சில நன்மைகள், சில பிழை திருத்தல்கள் மற்றும் கருத்து மாற்றங்கள் என வாழ்வின் கூறுகளைப் பாதியளவிலாவது பாதிக்கக் கூடிய, இயக்கங்கள் நிகழ்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

வசனக் கவிதைகள் என்ற பெயரில், கட்டுரைகளைக் கிறுக்கிக் கொண்டிருந்தேன். அருமையான தோழி ஒருத்தி, 'இது போன்ற பெரிய வரிக்கு வரி, வர்ணிக்கின்ற கவிதைகளைப் படிக்க யாருக்கும் காலமில்லை. சுருக்கமாகவும், இனிமையாகவும் எளிமையாக எழுத முயற்சி செய்து பார்' என்றாள். முயன்றதில் குறுங்கவிதைகள் வரை குறுக்கி எழுத வந்தது. அந்தத் தோழிக்கு நன்றி. அது போல வெறும் கவிதைகளும், சோகப் புலம்பல்களுமாய் கிறுக்கிக் கொண்டிருந்த என்னாலும் சிறுகதைகள் எழுத முடியும் என்று எனக்கே உணர்த்திக் காட்டியது 'தேன்கூடு' போட்டிகள்.

சில நண்பர்கள் கிடைத்தார்கள். பல பதிவர்கள் அயல் நாடுகளில் இருந்து இயங்குவதைக் கண்டதும், நாமும் அயல் நாடு சென்று பணியாற்ற வேண்டும் என்று எண்ணம் தோன்றியுள்ளது. இப்படி ஊக்கிகளாய் பதிவர்களின் பதிவுகள் பயன்பட்டன.

அருமையான கருத்துக்கள், ஆரோக்கியமான விவாதங்கள், விதவிதமான மொழி நடைகள், சில்லென்ற சிறுவயதுக் குறும்புகள், இளம் வயதைக் கிளர்வுறும் பலதரப்பட்ட காதல்கள்....

இப்படிப் படிக்கப் படிக்க விழிகளுக்குத் தேனாய் இனிக்கின்ற பதிவுலகத்தை வாழ்த்தி வணங்குகிறேன்.

எனக்கும் 'ப்ளாக்' ஆர்வத்தை ஏற்படுத்திய மாய வரிகளுக்கு உரிமையாளர்களான
'கொங்கு ராசா' அவர்களுக்கும், அண்ணன் 'டுபுக்கு' அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அப்புறம் பல பேரைப் பார்த்தாச்சு.

எதற்கு இப்படி உருகி, உருகி நெஞ்சை நக்குகிறேன் என்று நினைக்கிறீர்களா...
ஏனென்றால்...

இது என்னுடைய 50வது பதிவு.

(50க்கெல்லாம் இவ்ளோ பந்தாவா என்று கேட்பவர்களுக்கு என் பதில்..
:-)............ :-)
)

No comments: