Monday, October 30, 2006

சென்னையில் இது ஒரு மழைக் காலம்.

தொடார்ந்து பெய்கின்ற கனமழையால், சென்னை புற நகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. போதாக்குறைக்கு புயல் அச்சுறுத்தல்களாலும் மா நகரெங்கும் பய மேகங்கள் சூழ்ந்துள்ளன. நான் தற்போது படூர் கிராமத்தில் இருந்து, வேளச்சேரி வந்து பணியாற்றுகிறேன். இடைப்பட்ட பகுதிகளான நாவலூர், சோழிங்க நல்லூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி ஆகிய அனைத்து பகுதிகளும் பெரு வெள்ளக் காடாய் காட்சியளிக்கின்றன.

இத்தனைக்கும் இந்த பழைய மகாபலிபுரம் சாலையை 'ஐ.டி. நெடுஞ்சாலை' என்று அரசு அறிவித்து உள்ளது. மேலும் நான்கு வழிச் சாலையாக இதனை மாற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மென்பொருள் நிறுவனப் பேருந்துகள் சாலையின் குழிகளில் விழுந்து எழுந்து சென்று கொண்டிருக்கின்றன.

அவை மட்டுமல்ல, நகரப் பேருந்துகள் தமது கச்சடா அமைப்பை வைத்துக் கொண்டு தடுமாறியபடி சென்று கொண்டிருக்கின்றன.

சென்ற வாரம் சைதை அருகில், ( வேளச்சேரி பிரிவு என்று நினைக்கிறேன்) ஏற்பட்ட கடும் வாகன நெரிசலில் மாட்டிக் கொண்ட பல நூறு சென்னைவாசிகளில் நானும் ஒருவன். அந்த தாமதத்தால் நான் படூர் சென்று சேர்வதற்குள் நள்ளிரவு 12:30 தாண்டி விட்டது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஊராட்சி/ நகராட்சி/ பெரு நகர உறுப்பினர்களுக்கான பணிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

No comments: