Monday, October 30, 2006

கடங்காரப் பய.

"Hello மிஸ்டர்! எப்படி இருக்கீங்க..?" கொஞ்சம் காட்டமாகவே கேட்டான் கதிரவன்.

"உங்க புண்ணியத்தில் நல்லாவே இருக்கேன்."

இப்போது கதிரவனுக்கு கோபம் வந்து விட்டது.

"என்னது..? என் புண்ணியத்திலயா..? சொல்லுவடா, சொல்லுவ. ஏன் சொல்ல மாட்டே? உனக்கு கடனும் குடுத்திட்டு, திருப்பி வாங்க முடியாம இருக்கேன் பாரு, இதுவும் சொல்லுவ. இன்னமும் சொல்லுவ.."

" நான் என்னங்க பண்ணறது..? உங்க கடனைத் திருப்பிக் குடுக்கிற நிலைமையில நான் இல்லையே..?"

"திருப்பிக் குடுக்க முடியாதவன் எல்லாம் ஏண்டா கடன் வாங்கறீங்க..? பொதுவா கடன் கொடுத்து திருப்பி வராட்டி, வயிறு தான் எரியும்னு சொல்லுவாங்க. எனக்கு உடம்பே எரியுதுடா.."

"அண்ணே.. கொஞ்சம் மெதுவா பேசுங்க. ஊரு, உலகத்துல எல்லாரும் தூங்கற நேரம்.."

"அவ்ளோ ரோஷம் இருக்கிற பய, வாங்கின கடனை வட்டியோட திருப்பித் தர வேண்டியது தான. யப்பா, எவ்ளோ வருஷமா கடன் வாங்கிட்டு இருக்க. ஏண்டா உங்க அண்ணன், தம்பி ய்யர்கிட்டயாவது வாங்கிக் குடுக்கலாம் இல்ல..?"

"எங்கண்ணே.. அவங்களும் உங்கள மாதிரி நல்லவங்க கிட்ட கடன் வாங்கித் தான் ஓட்டிட்டு இருக்கோம்.."

"அது சரி..! குடும்பமே இப்படித் தானா.! சரி, பகல்ல எல்லாம் கண்ணுலயே பட மாட்டேங்கற, இராத்திரி மட்டும் தான் வெளியவே வர்ற அப்படினு எல்லாம் ஊருல பேசிக்கறானுங்க.., நெசமாலுமா..?"

"அடப் போங்கண்ணே..! ஒண்ணுமே தெரியாத மாதிரி தான் கேப்பீங்க. அதெல்லாம் ஊருல இருக்கற பயலுகளுக்கண்ணே..! நான் உங்க கூட தான் இருக்கறேன் அண்ணே..!"

"சரி..! உன்ற அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பங்காளிங்களை எல்லாம் அடிக்கடி பாக்கறதுண்டா..?"

"எங்கண்ணே..! அடிக்கடி எல்லாம் பாத்துக்கறதில்ல. எப்பவாவது குடும்பத்தோட வழியில சந்திச்சுக்கிட்டா உண்டு. அவன் அவன் பொழப்ப பாத்து, ஊரு, உலகம் சுத்தறதுக்கே நேரம் சரியா இருக்கே. நீங்க எப்படிண்ணே..?"

" நீ சொல்றதும் சரி தாம்பா. நானும் ஒரு காலத்துல ஒண்ணா, மண்ணா ஒரே குடும்பமா இருந்தவங்க தான். நல்லா தான் போய்ட்டு இருந்துச்சு. நீயெல்லாம் அப்ப பொறந்திருக்கவே இல்ல. ஒரு நா, ஏதோ ஒரு கோபத்துல சண்டை போட்டு எல்லாரும் குடும்பத்துல இருந்து வெடிச்சு செதறினோம். அன்னிக்குப் பிரிஞ்சவுக தான். இன்னி வரைக்கும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கவே முடியல. என்னையும் ஓரமா ஒதுக்கி வெச்சிட்டாங்க. என்ன பண்றது..? குடும்பம் பெருத்துப் போச்சு. என்னை நம்பி ஒம்போது உருப்படிங்க வந்திடுச்சு. எதுக்கெடுத்தாலும், என்ன வேணும்னாலும் என்னையவே சுத்தி, சுத்தி வர்றானுங்க. அவனுங்களை உட்டுட்டுப் போகவும் மனசு வரல. இப்படியே காலம் வேகமா ஓடிட்டு இருக்கு. இப்ப என் கவலையெல்லாம் என் காலத்துக்கு அப்புறம் இவங்களை யார் பாத்துக்குவாங்கங்கறது தான்.. நான் செத்துப் போய், என் ஒடம்பு சூடெல்லாம் அடங்கிப் போனதுக்கு அப்புறம், இவங்க எல்லாம் என்ன பண்ணுவாங்கனு நெனச்சாலே, எனக்கு கஷ்டமா இருக்கு தம்பி.."

"சரி விடுங்கண்ணே..! அதுக்குத் தான் இன்னும் ரொம்ப காலம் இருக்குல்ல..?"

"அதெல்லாம் ஊர்ல பாக்குற பயலுகளுக்கு. எனக்குத் தான தெரியும். சரி நீ கெளம்பு..!"

"சரி பாக்கலாம்ணே.." கிளம்பியது சந்திரன்.

கதிரவன் தன் அருகில் உருண்டோடிக் கொண்டிருந்த கிரகங்களை வாஞ்சையோடுப் பார்த்தது.

No comments: