Monday, October 30, 2006

இலக்கு.

நான் தற்போது படித்து வரும் பலதரப்பட்ட புத்தகங்களில் ஒன்று 'தி கோல்' எனும் ஆங்கிலப் புத்தகம். இலியாகூ எம்.கோல்ட்ராட் மற்றும் ஜெப் காக்ஸ் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.


நிறுவன மேலாண்மை தொடர்பான பல புத்தகங்கள் வந்துள்ளன. தற்போதும் வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் வெறும் கருத்துக்கள், யோசனைகள் ஆகியவற்றால் அவை நிரப்பப் பட்டிருக்கும். தற்போது இந்தியாவில் முது நிலை மேலாண்மை பட்டதாரிகளுக்கான தேவை பல மடங்கு பெருகி இருப்பதால், நம் நாட்டுப் புத்தகச் சந்தையையும் பல மேலாண்மை புத்தகங்கள் எட்டியுள்ளன.


இப் புத்தகமும் மேலாண்மை தொடர்பாக இருந்தாலும், வெறும் கருத்துக் கூட்டங்களாகவோ, அறிவுரை அருவியாகவோ இல்லை. மாறாக ஒரு நிறுவனப் பிரிவின் தலைவர் 'தம்-மொழிதல்' முறையில் கூறுவது போல் எழுதப்பட்டுள்ளது.


அவரும் அவர்தம் பிரிவின் துணைத் தலைவர்களும் சேர்ந்து எவ்வாறு தம் பிரிவை இழுத்து மூடுவதிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதை ஒரு தெளிவான த்ரில்லர் நாவல் போன்று எழுதியுள்ளார்கள்.


இதனிடையே அவருடைய குடும்ப வாழ்வில் ஏற்படுகின்ற கணவன் -மனைவி உறவில் ஏற்படுகின்ற விரிசலையும் எப்படி சமாளிக்கிறார் என்பதும் கிளைக் கதை போல் கூறப்பட்டுள்ளதால், படிப்போர் மேலாண்மைக் கூறுகளில் இருந்து சற்று நிதானித்துக் கொள்ளவும் அவகாசம் கிடைக்கின்றது.


பிரிவுத் தலைவரது பள்ளி இயற்பியல் ஆசிரியரின் வழிகாட்டுதலால், அவர் புது பார்வை பெற்று, பிரிவை இலாபத்தின் பக்கம் திசை திருப்புகிறார்.


இன்னும் படித்து முடிக்கவில்லை. எனினும் படித்ததில் இருந்து அறிந்து கொண்ட விஷயங்கள்:


1. மேலாண்மை என்பது வேறு ஒன்றுமில்லை. இயற்பியல், வேதியியல் போன்று அதுவும் அறிவியலே.! மிகச் சிக்கலான அமைப்புகளுக்கு அடிப்படையாக எளிய அறிவியல் விதிகள் இருப்பது போல், மேலாண்மைச் சிக்கல்களுக்கும் எளிய விதிமுறைகளை உபயோகித்தாலே போதுமானது.

2. நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளில் இருந்தே நாம் பல பிரச்னைகளுக்கு தீர்வு பெறலாம்.

3. மூலக்கதையை மூல மொழியிலேயே படிப்பது தான் (மொழி தெரிந்திருக்கும் பட்சத்தில்) சிறந்தது. விகடனில் இப்புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். நன்றாகவே இல்லை.

முழுதும் படித்து விட்டு மேலும் கூறுகிறேன்.

No comments: