Tuesday, October 03, 2006

வாசம்.

வாங்க சார்..! இப்ப எங்க வீட்டுல நடந்த நிகழ்ச்சி ஒண்ணு சொல்வேன். நீங்க நம்பணும், என்ன..?

வாசனை நிந்திக்காது வாணாளெலாம் சிந்தி
யோசனை ஏதுமின்றி மும்முறை மொழிய - ராசனை
அடைந்த செல்வமெலாம் அழிந்து போம்
உடைந்த மண்பானை போல் உருப்படாமல்.

"டாடி..மம்மி. இதை வந்து பாருங்க.."

பழைய மஞ்சள் பை ஒன்றைக் குடைந்து கொண்டிருந்த நானும், என்னவளும் திரும்பினோம். அருணும், அனுவும் தாத்தாவின் பழைய ட்ரங்க் பெட்டியின் அருகில் அமர்ந்து, எங்களைக் கூப்பிட்டனர். நாங்கள் இருவரும் அவர்கள் அருகில் சென்று, அமர்ந்தோம்.

"என்னடா கையில வெச்சிருக்க..?" அனுவைத் தூக்கி மடியில் உட்கார வைத்தபடி கேட்டேன்.

"டாடி.. பெரிய தாத்தாவோட பெட்டியை எடுத்து சுத்தம் பண்ணச் சொன்னீங்கல்ல.. இந்த பெட்டியில இந்த ஓலைச்சுவடியெல்லம் இருக்கு..இதில என்னமோ எழுதியிருக்கு... நீங்களே பாருங்க.." என்றபடி அந்த உடைந்து நொறுங்கி விழும் நிலையில் இருந்த ஓலைச் சுவடியை என்னிடம் கொடுத்தான்.

ன் தாத்தா ஒரு பெரிய பக்திமான். யோகம், தியானம், உபாசகம் இப்படி நிறைய செய்வார். ஜோதிடம், ஜாதகம், கைரேகை இதிலெல்லாம் கூட அவருக்கு பெரிய ஆர்வமுண்டு. பழைய பஞ்சாங்கம், நாட்காட்டி இதையெல்லாம் வைத்துக் கொண்டு எப்போதும் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார் என்று, என் பாட்டி சொல்லியிருக்கிறார். பழைய ஓலைச் சுவடிகள், தமிழ் செய்யுள்கள், பழைய இலக்கியங்கள் என்று தேடித் தேடிப் படிப்பார்.

இப்படிப்பட்ட மகா பக்தருக்கு வந்து ஒரே பிள்ளையாக பிறந்தவர் தான் என் அப்பா. ஆரம்பத்தில் அவரும் தாத்தாவைப் போல் தான் இருந்திருக்கிறார். பின் வளரும் பருவத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் பால் அப்பா, பெரும் ஆர்வம் காட்ட, தாத்தாவின் கோபத்திற்கு ஆளானார்.

அப்புறம் பாட்டி இருந்தவரை, பாட்டியின் சமாளிப்புத் திறமையால், பெரிய அளவில் இருவருக்கும் மோதல்கள் இல்லாமல் நாட்கள் ஓடின. பாட்டி இறந்த பின்பு, தாத்தா அவரது மொட்டை மாடி அறையிலேயே, ஒடுங்கிக் கொண்டார். என் அம்மா தான் அவருடன் பேசுவது, பழகுவது எல்லாம். நானும் போவேன். ஆனால் அப்பாக்குத் தெரியாமல் தான். தெரிந்தால் சண்டை தான் வரும். தாத்தா என்ன படிக்கிறார் என்று அடிக்கடி போய்க் கேட்பேன். எதுவும் சொல்ல மாட்டார். பிறகு நானும் வளர்ந்து, மணமாகி ரெண்டு பிள்ளைகளையும் பெற்றாயிற்று.

போன வாரம் தாத்தா, காலமாகி விட்டார். இப்போது அப்பாவும் அம்மாவும் எங்கோ வெளியே சென்றிருப்பதால், நாங்கள் தாத்தாவின் அறையைச் சுத்தம் செய்யும் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு குடைந்து கொண்டிருக்கிறோம். அப்பத் தான் இந்த ஓலைச் சுவடி கிடைத்தது.

ஏதோ செய்யுள் மாதிரி தெரிந்தது. ஒன்றும் புரியவில்லை. அவளிடம் கொடுத்தேன்.

"உனக்கு ஏதாவது புரியுதானு பாரு.."

என்னை விட அவளுக்கு கொஞ்சம் அறிவு அதிகம் என்பதை, இவ்வளவாண்டு அனுபவத்தில் கண்டிருந்தேன். கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். நாங்கள் மூன்று பேரும் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

"கண்டுபிடிச்சிட்டேன். 'வாசனை'..வாசன்....சீனிவாசன்....பெருமாள். பெருமாளை திட்டாமல், எப்பவும் சிந்திக்கணும். அப்படி இல்லாம, அவரைப் பத்தி தப்பா பேசினா, மூணு தடவை மன்னிப்பார். அதுக்கு மேலயும் போச்சுன்னா, அவருக்கு கோபம் வந்து, அவர் கொடுத்த பணமெல்லாத்தையும் பறிச்சுக்குவார். இது தான் இந்தப் பாட்டுனு நெனைக்கிறேன்.ஏங்க.. உங்க அப்பா நாத்திகர் தான..? அவருக்கு புத்தி சொல்றதுக்காக உங்க தாத்தா எழுதி வெச்சிருப்பார்னு தோணுதுங்க" என்றாள்.

என் தங்கக் கட்டி..! எவ்ளோ அறிவாளி பாருங்க.

குழந்தைகள் இருவரும் ஆச்சரியமடைந்து, அவளைக் கட்டிக் கொண்டு, ஆளுக்கொரு கன்னத்தில் முத்தம் கொடுத்தனர். 'என் கோட்டாவை இரவு தருகிறேன்' என்று கண்களாலேயே சொல்லி விட்டு பெட்டியைப் பார்த்தேன்.

பெட்டியில் இன்னும் கொஞ்சம் ஓலைச் சுவடிகளும், பட்டுக் கயிறுகளும் இருந்தன. ஒரு மூலையில், பழைய காமாட்சி விளக்கு ஒன்று இருந்தது. அருண் அதை எடுத்துப் பார்த்தான். ரொம்ப காலத்து அழுக்கு. பழைய துணியெடுத்து, அதைத் துடைத்தான்.

பளீர்.....

மின்னல் வெட்டியது போல, விளக்கு பிரகாசித்தது. எல்லோரும் கண்களை மூடிக் கொண்டோம். கொஞ்ச நேரம் கழித்துக் கண்களைத் திறந்து பார்த்தோம். விளக்கின் திரி முனையில் இருந்து, குபுகுபுவென வெண்புகை வந்து கொண்டிருந்தது. எனக்கு 'பட்டணத்தில் பூதம்', 'அலாவுதீனும் அற்புதவிளக்கும்' ஞாபகங்கள் வர ஆரம்பித்தது. அருணும், அனுவும் என்னை இறுக்கிக் கட்டிக் கொண்டனர்.

திரி முனையில் இருந்து, மண்புழு போல் ஓர் உருவம் குதித்தது. மெல்ல, மெல்ல வளர்ந்து ஓர் ஆள் வடிவத்திற்கு வந்தது. என்னைப் பார்த்து வணங்கிக் கொண்டே பேச ஆரம்பித்தது.

"என் எஜமானரே..! வணக்கம். தாங்கள் எனக்கு விடுதலை கொடுத்துள்ளீர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே நான் கிடைப்பேன். பல்லாயிரம் ஆண்டுகளாக நான் இந்த விளக்கிலேயே சிறையிலிருந்தேன். நீங்கள் எது கேட்டாலும் நான் கொண்டு வந்து தருவேன். தாங்கள் அந்த ஓலைச் சுவடியில் இருந்ததைப் படித்துப் புரிந்து கொண்டீர்கள் அல்லவா..?"

ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த நான், சுய நினைவுக்குத் திரும்பினேன்.

"புரிந்தது.." என் செம்மொழி எனக்கே வியப்பளித்தது.

"நன்று ! ஓலைச்சுவடியில் இருப்பதை மீறாதது வரை, நான் உங்களுடன் இருப்பேன். மீறினால் நானும் மறைவேன். நான் உங்களுக்குக் கொடுத்தனவும் மறைந்து போகும்..! தங்களுக்கு என்ன வேண்டும்?" பணிவோடு கேட்டது.

இதற்குள் பயம் தெளிந்து போயிருந்த என் குழந்தைகள் என்னைக் கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

"அப்பா..! அப்பா..! வினோத்துக்கு அவங்கப்பா டர்போ சைக்கிள் வாங்கிக் குடுத்திருக்காருப்பா.. அதையே கேளுஙப்பா.." இது அருண்.

"போடா..! அதையெல்லாம் நீ சீக்கிரம் உடைச்சிடுவே.! அப்பா..! வர்ஷினி பிங்க் கலர்ல ஒரு பாவாடை, சட்டை எடுத்திருக்காப்பா..! அதே மாதிரி எனக்கும் கேளுங்கப்பா..!" இது அனு.

"ஏங்க..! தீபாவளிக்கு ஆலுக்காஸ்ல எடுக்கலாம்னு, ரெண்டு டிசைன் பார்த்து வெச்சிருந்தேங்க..! அதைக் கேளுங்க.." இது என் சகதர்மிணி.

ஆகா..! எல்லாரும் இவ்ளோ ப்ளான் போட்டு வெச்சிருக்காங்களா..?

அப்புறம் ஆளாளுக்கு அவர்கள் விரும்பிக் கேட்டது எல்லாம் அந்தப் பூதம் (பூதம்னே சொல்லலாம்) கொடுத்தது.

அருண் : ஐய்ய..! என்ன இந்தப் பூதம் ரொம்ப நாளா குளிக்கவே இல்ல பொல. இந்த நாற்றம் அடிக்குது.

அனு : இந்த பிங்க் பாவாடை, உங்க ராஜா, ராணி காலத்துல யூஸ் பண்ணினதா? இந்த நாற்றம் அடிக்குது.

இவள் : இந்த நெக்லஸ் கூட, ரொம்ப பழசு போல..

நான் : ஏன், அதுவும் நாற்றம் அடிக்குதா..?

பளீர்..

மற்படியும் வெண்புகை. பூதம் மறைந்தது. அது கொடுத்த எல்லா பொருட்களும் மறைந்தன. நாங்கள் திக்பிரமை அடைந்து போனோம்.

பிறகு, உட்கார்ந்து யோசித்து, ஓலையை மீண்டும் படித்துப் பார்க்கையில், தான் புரிந்தது. செம்மொழியில் ' நாற்றம்' என்றால் வாசனை என்று பொருள். வாசனை என்று தான் மும்முறை சொல்லக் கூடாது. சொன்னால், பூதத்திற்கு, அது வாசம் செய்யும் இடம் ஞாபகம் வந்து, மீண்டும் விளக்கிற்குள்ளேயே போய் விட்டது.


இப்ப சொல்லுங்க..? இந்த நிகழ்ச்சியை நம்பறீங்களா..? என்ன கதை விடறேனா..? தேன்கூடு போட்டிக்கு எழுதிப் போட்டா, பரிசாவது கிடைக்குமா..? அட, போங்க சார், நீங்க வேற..!

(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

7 comments:

murali said...

நல்லா இருக்குங்க கதை.வித்யாசமா இருந்தது.வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளிதரன்.

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி முரளி..! வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வரவும்.

ராசுக்குட்டி said...

ஹா ஹா... ரசித்தேன்!

உங்களுக்கு சரளமாக வருகிறது கதை நடை

//'என் கோட்டாவை இரவு தருகிறேன்' என்று கண்களாலேயே சொல்லி விட்டு பெட்டியைப் பார்த்தேன்//

ரசித்தேன்!

Maraboor J Chandrasekaran said...

வித்யாசமா இருந்தது. விடுதலை???

இரா. வசந்த குமார். said...

அண்ணன் இராசுக்குட்டிக்கு நன்றிங்க.

இரா. வசந்த குமார். said...

ஐயா சந்திரசேகர், அதுதான் பூதம் விடுதலை அடைஞ்சிடுச்சு இல்ல? அப்பால நாயகன் தப்பு பண்ணினா பூதம் என்ன பண்ணும்?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வித்தியாசமான சிந்தனை.