Wednesday, April 30, 2008

ஃப்ளாஷ்பேக்...!

நேற் றுரை என்னுடனே நீ இருந்தாயே
சேற்றுத்தா மரை போலே சேர்ந்திருந்தாயே
காற்றனல் தனில் கற்பூரம் நீ கரைந்தாயே
தேற்றுவர் எனையாரோ தேமாவே!

- அழுகையுடன் இரா.வசந்த குமார்.

இப்பாடல் புதுமையான இரட்டுற மொழிதல் வகையைச் சேர்ந்தது.

1. சென்ற நாள் வரை என்னுடன் நீ இருந்தாயே; நெல்லும், துவரையும் (நெல் + துவரை = நேற்றுவரை; நெல் ஆதி நீடல் எனும் பண்பிற்கேற்ப நேற் என ஆனது) போன்ற உணவுப் பொருட்கள் ஒரு நாள் மட்டுமே உடலில் தங்கியிருக்கும் எனக் காட்டி எந்தவொரு பொருளும் ஒரு குறிப்பிட்ட காலம் வரையே இருக்கும் என்ற தத்துவத்தை உணர்த்திச் சென்றாயே.

2.சேற்றில் மலர்ந்த தாமரை சேற்றுடன் சேர்வது போலச் சேர்ந்திருந்தாயே. நீ என்னிடம்; சகதியான சேற்றில் தாவும் மான் சிக்கி, அங்கேயே மாண்டு மண்ணாவது போல் என்னிடம் நீ இருந்தாயே;

3.சிறிதளவு வெப்பம் கொண்ட காற்றிலேயே கற்பூரம் கரைந்து விடுமா? (விடாது). ஆனால் ஒரு மிகச்சிறு தட்டலுக்கே என்னாசை அட்டையே நீ உடைந்தது ஏனோ?

4.உன்னைப் பிரிந்து வருத்தத்தில் இருக்கும் என்னைத் தேற்றுபவர் யாரோ தேமாவே (அட்டை = அட் + டை = நேர் நேர் = தேமா);


தேனையும் மாவையும் கலந்து இனிப்புப் பண்டங்கள் செய்து, உண்பது போ டால் என்ன இனிப்பு இருக்குமோ, அத்தனை போன்ற சொற்சுவையுடைய, பொருட்க...


தேனையும் மாவையும் கலந்துப் பண்டம் செய்துண்டால் தரும் இனிப்புச் சுவை போன்று இனிமையுள்ள சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட தீந்தமிழ் வார்த்தைகள் தன் மேல் எழுதக்கண்டு பேருவகை கொண்ட உனைக் கண்டு மனமகிழ்வு உற்ற என்னை உனைப் பிரிந்ததனால் ஆறுதல் கூறித் தேற்றுவர் எவருமில்லையே?

(16.11.95 மதியம் நிகழ்ந்த கைகலப்பில் உடைந்த அட்டையைக் (Pade) குறித்துப் பாடிய இரங்கற்பா)

***

சென்ற வாரம் வீட்டுக்குச் சென்று பழைய புத்தகங்களைக் கிளறிக் கொண்டு இருந்த போது, '94-ம் வருட அறிவொளி இயக்க டைரி கிடைத்தது. தும்மல்களுக்கு இடையே புரட்டிப் பார்த்த போது, இந்தக் கவிதை(?) கிடைத்தது.

துளியும் சென்ஸார் செய்யாமல் மேலே கொடுத்துள்ளேன்.

பத்தாம் வகுப்பு ட்யூஷனில் நடந்த ஒரு சின்ன சண்டையில் L.K.G. முதல் எக்ஸாம்க்கு என்று வைத்திருந்த பரிட்சை அட்டை உடைந்தது. அதை அவ்வளவு ராசியாக கருதி இருந்தேன். மிகவும் மனம் வருந்திப் போனேன். அப்போது எழுதிய கவிதை இது.

அந்தத் துக்கத்திலும் சிலேடை (அதாங்க டபுள் மீனிங்) வகையில் எழுதி இருக்கிறேன் என்பதும், அதை டைரியில் எழுதி வைத்து, விளக்கம் வேறு கொடுத்து, கூட என்ன காரணத்திற்காக, என்று எழுதப்பட்டது என்றும் குறித்து வைத்திருப்பதை எண்ணிப் பார்க்கையில், மனித மூளையின் செயல்பாட்டைப் பற்றி வியப்பு தான் வருகிறது.

God doesn't play dice என்று தலைவர் சொன்னது உண்மையாக இருக்கலாமோ?

PS: (L.K.G.க்கு நீ ஸ்லேட்டு உபயோகப்படுத்தாமல், பேப்பர் வெச்சு எழுதினியா? என்ன கதை விடுற? என்று கேட்கும் டவுட் பேர்வழிகளுக்கு ஒரு கதை சொல்லப்படும் பின் ஒரு பதிவில். ஆமாங்க, அதுக்கும் ஒரு ஸ்டோரி இருக்கு.)

5 comments:

Anonymous said...

இதைப் படிப்பவர்கள் இதை எழுதியது ஒரு இலக்கண தமிழாசிரியர் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஒரு software engineer என்றால் மலைத்து நிற்பார்கள் . நீ LKG யில் பேப்பர் ல் தான் எக்ஸாம் எழுதினாய் அதில் உனக்கு சந்தேகமே வேண்டாம், சிலேட்டில் அல்ல .

இரா. வசந்த குமார். said...

இலக்கண தமிழாசிரியரா...? காமெடி பண்றீங்க அம்மா... L.K.G.ல பேப்பர்ல தான் எழுதினேன். அதுக்கு காரணம் உங்களுக்குத் தான் நல்லாத் தெரியுமே...? அந்த கதையும் 'காவிரிப் பையனின் கதை'ல வரும்.. வெய்ட் பண்ணுங்க...!

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
நான் கூற வேண்டியவற்றை அம்மாவே கூறிவிட்டார்கள்.
//தேமாவே (அட்டை = அட் + டை = நேர் நேர் = தேமா);//
இது சூப்பரப்பு...
எல்.கே.ஜி.யில பேப்பர்ல பரீட்சை எழுதுனீங்களா...? பொறுங்கள் மற்ற பதிவுகளைப் படித்துத் தெரிந்து கொள்கிறேன்(எழுதிவிட்டீர்கள்தானே...?)

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

இன்னும் அந்தக் கதையை எழுதவில்லை. விரைவில் எழுதுகிறேன்.

thamizhparavai said...

'கதையல்ல நிஜம்'...