Saturday, January 02, 2010

பிலிப்ஸ் இரவில் ஜனித்த சிம்பொனி!



முன்னொரு நாளின் இரவில் மின்சாரத்தைத் தின்று மின்னல் வெளியிட்ட மழை ஒன்று இரவின் ராகத்தில் பெய்து கொண்டிருந்தது. சாலைகளில் ஈரம் சறுக்கிக் கொண்டு போனது.

ஒரே ஒரு பேருந்து மட்டும் நனைந்து கொண்டிருந்த புறநகர் நிலையத்தில் சக்கரத் தொப்பியின் மேல் கால்கள் வைத்து கம்பிகளில் நடக்கும் துளிகளை எண்ணிக் கொண்டிருந்தேன்.

தூரத்துப் பச்சை வயல்கள், அடித்துப் பெய்த ஈரச் சிதறல்களுக்குத் தலையாட்டிக் கொண்டிருந்தன. கொண்டல் சரங்களின் இடைவிடாத மறைப்புகளுக்கு இடையில், குளிர்ந்து கொண்டிருந்த தனியான ஒரு வீட்டில் மெழுகுத் தலைகள் ஜன்னல் கண்ணாடிகளில் படர்ந்தன.

குட்டி விளக்குகள் மின்னிக் கொண்டிருந்த இந்த கடைசிப் பேருந்தைத் தவிர, பிரதேசத்தை கறுப்பாய் இருள் கரைத்த மழை கழுவிக் கொண்டிருந்தது. வாகனர்கள் பாதிக்கதவு அடைத்திருந்த தேநீர்க் கடையில் பேசிக் கொண்டிருந்தனர். கடையின் ஆதி வானொலி ஒன்றிலிருந்து 'என் வானிலே ஒரே வெண்ணிலா...' மண்ணெண்ணெய் விளக்கின் திரியிலிருந்து கசியும் புகையோடு நழுவிக் கொண்டிருந்தது.

என் கைகளில் பாலிதீன் காகித உறையில் பத்திரமாய்ப் பதுக்கி வைத்திருந்த சான்றிதழ்கள். சட்டைக்குள் ஒளித்து வைத்தேன். ஜன்னல் கம்பிகளில் மழைத்துளிகள் தெறித்த கொலுசு மணிகள் போல் தனித்தனியாக நகர்ந்து, ஒன்றாகிச் சொட்டின.

படிக்கட்டுகள் பதற்றமாகும் அதிர்வில் அவள் ஓடி உள் ஏறி வந்தாள். கூட்டத்தை எதிர்பார்த்தாளோ, தனிமைக்குத் தயாராய் இருந்தாளோ, ஒற்றையனாய் என்னைக் கண்டதும் ஓர் அதிர்ச்சி அவளது அழகிய முகத்தில்!

நெற்றியிலிருந்து இறங்கிச் சுருண்டிருந்த மெல்லிய கொத்து ஒரு கன்னத்தை வளைத்திருந்தது. மஞ்சளில் பூக்கள் வரைந்த உடையில் கைப்பை சுமந்திருந்தாள். கண்ணாடி வளையல்கள் சிணுங்க முகத்தில் வந்து விழுந்த அடர்ந்த கற்றையை பின்னே ஒதுக்கி விட்டாள். எதிர் வரிசையில் ஒரு ஜன்னலோரத்தில் அமர்ந்து சுருட்டி வைத்து, முனைகளில் ஒட்டியிருந்த பத்திரிக்கையைப் பிரித்துப் படிக்கத் திடங்கினாள். அவள் ஜன்னல் சாத்தியிருந்தது.

எங்கிருந்தோ பிறந்த ஒரு துளி, அவள் பின்னங்கழுத்தில் பூத்து, மெல்ல நகர்ந்து, சுற்றி, தங்கப் பாள முதுகு இறக்கத்தின் நுனியில் கால் வைத்துச் சரேலென சரிந்தது. கைகளோடு முத்தமிட்ட பிஞ்சு முடிகள் ஒரு நவீன ஓவியம் போல் கலைந்திருந்தன. மென் மஞ்சள் முதுகோடு ஒட்டி மிக வெள்ளையாய் ஒரு பட்டை, புகை போல் தெரிவதை உற்றுப் பார்ப்பதற்குள், திரும்பிப் பார்த்தாள்.

அவள் இரு புருவங்களுக்கும் இடையே மிக மிக இலேசான கருப்பாய் ஓர் இணைப்புப் பாலம் தோன்றியிருந்தது. மூக்கின் நுனியில் சிவப்பாய் ஒரு கோபம் கிளம்பத் தயாராய் இருக்க, செழித்த உதடுகள் சூரியனைப் பிளந்தாற்போல் ஜொலித்தன. இமைகளின் ஒவ்வொரு கேசக் குட்டிகளிலும் ஒவ்வொரு மழைத்துளி ஒய்யாரமாய் உட்கார்ந்திருந்தது. கீழே உயிர்த் துடிப்போடு உருண்டு கொண்டிருந்த கறுப்பு குலோப் ஜாமூன்களாய் இரு விழிகள், என் மேல் கேள்விகள் எறிந்தன.

'தனிமையிலே... வெறுமையிலே... எத்தனை நாளடி இளமையிலே..!'

விரல் நீட்டி தலை சாய்த்து எச்சரித்தாள். துளிக் கொஞ்சமாய்த் தெரிந்த பொன் மார் பின்புலத்தில், அந்த விரலில் மருதாணி பூசியிருந்தாள். கவிழ்ந்த அந்த செந்தொப்பி கவ்விய விரல் நுனி ஜில்லென்று சுருண்டிருந்தது.

கண்ணாடி முகமூடிகள் கழண்டிருந்த சின்ன வெளிச்சங்கள் மட்டும் நிறைந்திருந்த பேருந்தின் வலது கன்னம் வைப்பரால் தேய்த்துத் தேய்த்துக் துடைக்கப்பட்டுக் கொண்டேயிருக்க, தளர்வுறா மாமழை தன் ஆயிரம் ஆயிரம் அம்புகளால் மீண்டும் மீண்டும் சேதப்படித்திக் கொண்டேயிருந்தது. அத்தனை ஜன்னல்களும், அழுக்கு படிந்த பச்சைத் துணிகளால் மறைக்கப்பட்டிருக்க, ஓர் அன்றலர்ந்த மஞ்சள் ரோஜா போல் அவள் பார்த்தாள்.

(...)

4 comments:

உமா said...

உங்கள் தள வடிவமைப்பும் உங்கள் வரிகளைப் போலவே மிக அருமை. வாழ்த்துக்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு உமா...

நன்றிகள். தள வடிவமைப்புச் செய்தவர்களுக்கும் நன்றிகள். :)

Chan said...

ippadi moondru pulligal vaithu, yengalai niruthi vaiteergalae....aduthu yenna???

இரா. வசந்த குமார். said...

அன்பு Chan...

கொஞ்சம் அலுவலக வேலைகள் அமலாவுக்குப் போல், கண்கள் வரை வந்து விட்டதால், இந்தப்பக்கம் கொஞ்சம் வர முடியவில்லை. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்பதை வ.வுடன் தெ.கொள்கிறேன்.! :)