Thursday, December 31, 2009

வாழ்த்திய வாழ்த்தொலி போய்...



புத்தம் புதிய ஆயிரம் ஆண்டுகளின் முதல் பத்தின் கடைசிப் பெளர்ணமியில் என்னைச் சுற்றி இலேசான குளிர் பறக்கிறது. பின்புறத் தோட்டத்தில் விரிந்த வாழை இலைகளில் நிலவொளி வெள்ளம் பாய்ந்துச் சேகரமாகி, நடுப் பட்டையில் ஓடி நுனியில் சொட்டுகின்றன. செதுக்கிய இலைகளில் ஒளிக் குளங்கள் தேங்கிக் காற்றுக்குத் தத்தளிக்கின்றன. தென்னங் கீற்றுக்கள் சரிந்த வாட்களாகிக் கூர்மைகளில் வெள்ளி பூசியிருக்கின்றன. கொஞ்சம் சாய்ந்த ஒற்றைப் பலா மரத்தின் ஒரு 'சிறு காம்பில் தொங்கும் பலாக்கனியை' எறும்புகள் கீறியிருக்க, வெடித்ததில் மெல்லிய இனிப்பு மணம் காற்றில் சுகமாய்ப் பரவுகின்றது. வாசலொட்டிய சிற்றோடையில் குளிர்ந்த நீர் சலசலத்து ஓடுகையில், அசைந்தாடும் காதல் வடிவ இலைகளில் நீர்ச் சுட்டிகள் உள்ளங்கையில் பாதரசத் துளிகள் போல் மின்னுகின்றன. மதில் பக்கத்தில் பூத்திருக்கும் செம்பருத்திப் பூக்களுக்கும், பெயர் தெரியாத அந்த மஞ்சள் மலர்களுக்கும், இரவின் கரும் இடுக்குகளுக்குள் ஒளிந்து கொண்டு 'ட்ரூச்சு..ட்ரூச்சு..' எனச் சத்தமிடும் பூச்சிகளுக்கும், மழை வாசம் உணர்ந்தாலே 'கொர்ரக்...கொர்ரக்...'காய் உற்சாகக் கூச்சலிடும் சின்னத் தவளைகளுக்கும், கம்பி வேலி மேல் நின்று கொண்டு சின்னத் தலையை இப்படியும் அப்படியுமாகத் திருப்பித் துளிக் கண்களை இமைத்து, தன் துயர் நனைந்த இராக்காலக் கனவுகளைக் கூவும் வயலட் நிற வெல்வெட் சிறகு மைனாவுக்கும் நாளை புத்தாண்டு என்பது தெரியுமா?

ஆனால், நமக்குத் தெரியும்.



தன் கடைசி மணிகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கி.பி.2009 எனக்கு என்ன அர்த்தம் ஆகின்றது என்பதைக் கொஞ்சம் - கழுத்து வலித்தாலும் பரவாயில்லை என்று - திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்.

எழுதுவதைப் பொறுத்த வரை கொஞ்சம் வருத்தமும் நிறைய சந்தோஷங்களும் கலந்திருந்தன.

சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு பத்திக்குப் பாதி பதிவுகள் குறைந்து விட்டது என்பதில் வருத்தம் இருக்கின்றது. காரணமும் புரிகின்றது. கடந்த வருடத்தின் சந்தோஷ மனநிலை இந்த ஆண்டு முழுதுமே இல்லை. மென்பொருளாளனுகே ஆன பொருளாதாரப் பயங்கள், தனிக் கவலைகள் போன்றவை இருந்தன. எழுதுவதை முதன்மைப்படுத்தி, கவலைகளை நியூரான் குழப்பத்தின் இருளான பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தேன்.


மகிழ்ச்சி பல காரணங்களால்!

செறிவான சில சிறுகதைகள் எழுத முடிந்தது.

மனையியல்.
கோடானு கோடி!
கிளி முற்றம்.
பொன்னி.
ஓர் உரையாடல்.
Blackhole..!

பயணக் கட்டுரைகள் எனக்கே பிடித்த மாதிரி நன்றாக வந்தன.

காவிரிக் கரையோரத்திலேயே...
சுதந்திர நாளில்...மதுரையில்..!
ஏப்ரலில் இருந்து மேக்கு ஒரு பயணம்!
பண்ணாரிக்குப் போனேன்.

உரையாடல் அமைப்பினர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இருபதில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரு கதையை எழுதியதில் மற்றொரு மகிழ்ச்சி. பாஸ்டன் பாலா அதை முதல் மூன்றுக்குள் வைத்தது எதிர்பாராத இனிப்பு.

புதுக்கவிதை இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகள் ஆகியதைக் கொண்டாடிய 'நவீன விருட்சத்தின்' செப்டம்பர் மாதக் காலாண்டு இதழில், யோசிப்பவர் மற்றும் அனுஜன்யாவின் சிறுகதைகளுக்கு இடையே நெருக்கிக் கொண்டு 'மாமா எங்க' கதையும் அச்சில் வந்தது. யோசிப்பவரின் ஆலோசனையின் படி அனுப்பி வைத்ததால், 'யுகமாயினி'யில் 'முதல் அறிவியல் புனைகதை' வெளியானது.

மும்பையில் இருந்து 'எதைப் பற்றியும் பற்றாமலும்' நவீனக் கவிதை எழுதும் 'யூத்' அனுஜன்யா, 'சுவாரஸ்யப் பதிவர்களில்' ஒருவனாக என்னையும் டிக் செய்தது ஆச்சர்யக் களிப்பை அளித்தது.

வலைச்சரத்தில் அ.மு.செய்யது என்ற பதிவர் 'காலத்தை வென்றவர்கள்' என்று இந்தக் கதைகளை வைத்துச் சொல்லியிருந்தது கூச்சம் கொடுத்தது. இவர் படிக்கிறார் என்பதே இவர் சொல்லித் தான் தெரிந்தது. இது போன்று எத்தனை பேர் சைலண்டாகப் படிக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

பிறந்த நாளுக்கு முன்னாள், நீல.பத்மநாபன் அவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வந்ததையும், அடுத்த நாள் நாகர்கோயிலில் மீனாட்சிபுரத்திற்குப் போய் ஜெயமோகன் அவர்களைப் பார்த்து, ஒரு கிட்கேட் மட்டும் கொடுத்து, மதிய உணவுடன் ஆலோசனைகளையும் பெற்று வந்ததையும் மறக்க முடியாது.

தொழில்நுட்பக் கட்டுரைகள் எழுத வேண்டும் என்று மிக நாட்களாக விருப்பம் இருந்தது. இயற்பியல் கட்டுரைகள் எழுதி வந்தாலும், அவை அறிவியல் என்ற வகையின் கீழ் வரும். ஏற்றாற்போல் சிங்கைப் பதிவர்கள் அமைப்பு 'மணற்கேணி - 2009'ல் கட்டுரைகள் கேட்க, பணியாற்றும் துறையின் அடிப்படைகளை முடிந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்தி அனுப்பி வைத்தேன். முடிவுக்காகக் காத்திருக்கிறேன். தொடர்ந்து எழுத வேண்டும்.

இந்த ஆண்டின் மிகப் பெரிய சாதனையாக கருதுவது, நேனோரிமோ. முதன் முதலாக ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதும் சவாலை எனக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்டு, எழுத உட்கார்ந்தேன். செப்டம்பர் மத்தியில் இருந்து ஆரம்பித்து, அக்டோபர் மாதம் முழுக்கவே ஒன்றும் க்ரியேட்டிவாகத் தோன்றவேயில்லை. ஜெயமோகன் அவர்களிடம் கேட்ட போது, 'அவ்வளவு தான். சரக்கு காலி' என்றார். 'சரிதான்' என்று கொஞ்சம் துக்கத்தோடு இருந்தேன். 'அது ஒரு பனித்திரை' என்று காட்டி மீண்டும் அடைத்திருந்த பாட்டில்களை நுரைகள் பீய்ச்சியடிக்கத் திறந்து விட்டது, நேனோ. என்.சி.சி. கேம்ப் அனுபவங்களைக் களமாக்கிக் கொண்டு எழுதத் துவங்க காதல்களும், மோதல்களும், கிண்டல்களும், சாகசங்களுமாக அந்த நாவல் அருமையாக வந்து கொண்டிருக்கின்றது.

Na-No-Wri-Mo.
NaNoWriMo.Update.1
NaNoWriMo.Update.2
NaNoWriMo.Update.3
NaNoWriMo.Update.4
NaNoWriMo.Update.5
NaNoWriMo.Update.6.Final

சில முயற்சிகள் குறைப்பட்டும் போயின. 'ஆகாயக் கொன்றை' என ஒரு குறுநாவல் எழுதத் துவங்கி மூன்று சேப்டர்களில் நிற்கின்றது. முடிக்க வேண்டும்.

என்னமோ நிறைய எழுதிக் கிழித்தவன் போல் சிறுகதை எழுதுவது பற்றிச் சில பதிவுகள் எழுதினேன். பாறைகளில் பதுங்கிய விதை போல் சில மனங்களில் ஒளிந்திருக்கலாம். மழை நுனி தொட்டதும் முளைக்கலாம். முதல் துளி விழும் நொடி தான் ரகசியம்.

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.
புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.
நானும் எழுதுகிறேன் 10!

வருடக் கடைசியில் ஈரோடு பதிவர்கள் சங்கமம் மற்றுமொரு திருப்புமுனை. மேடையில் நூற்றுக்கும் மேலான இரட்டைக் கண்கள் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் உள்ளங்கை வேர்க்காமல் பேச முடிகின்றது என்பதை அறிந்து கொண்டேன். அதற்கு முழுக் காரணமும், பேசுவதை முன்பே எழுதிக் கொண்டு சென்றது தான். எனவே பேட்டை மாறாமல் ஓட முடிந்தது. பேசிய உரையைப் படித்துப் பார்த்தால் ஒன்று தெரியும். அப்பட்டமான வாத்தியார் ஸ்டைல். அதற்காகவும் வாத்தியாருக்கு மேலும் சில நன்றிகள்.

இந்த ஆண்டு முழுதும் படித்தது என்று பார்த்தால் மிகக் குறைவு தான். வலைப்பக்கங்களைப் படிப்பதைத் தவிர, புத்தகங்கள் நிறைய படிக்கவில்லை. நம் நாட்டு விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படைப்பு எழுதும் ஐடியா இருக்கின்றது. இது நம் எழுத்தாளர்கள் அனைவருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். பிரிவினை அத்தனை சம்பவங்கள் நிறைந்த உணர்ச்சிபூர்வமான வரலாறு. பதினெட்டாம் நுற்றாண்டின் மத்திய ஆண்டுகளில் பம்பாயின் எல்லைக் குடிசைகளில் வாழ்ந்த தமிழ்க் குடும்பத்தில் பிறக்கும் பையனின் வாழ்க்கையை, கூடவே பிறந்த இந்திய ரெயில்வேயுடன் பின்னிப் பிணைந்து 1947-ல் உச்சக் காட்சியுடன் நிறைவு செய்ய ஆசை.அதற்காக வாங்கிய புத்தகங்களை மட்டுமே படித்தேன். தோதாக, ஜெயமோகன் அவர்களும் காந்தியைப் பல கோணங்களில் எழுத, சேர்த்து வைத்து விட்டேன்.

வலை மற்றும் அலுவலகம் தாண்டிய ஒரு குடும்ப வாழ்க்கை என்ற ஒன்றுமிருக்கின்றது. அதில் இவ்வாண்டின் பெருமகிழ்வாக ஒரு சொந்த வீடு வாங்க முடிந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பு ஐ.சி.எஃப். செல்லும் 47-டியில் இரண்டு நாட்கள் சாப்பிடாததால் மயங்கி விழுந்தவனுக்கு இன்று ஒரு அடர்ப் பச்சைப் பெய்ண்ட் அடித்த வீடு சொந்தம் என்பதற்கு ஆச்சரியப்படுவது இயல்பே என்றான் சீனி. எஸ்.பி.ஐ. கட்டிய ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறோம் என்பதாகவே நான் உணர்கிறேன். என்ன, மாத வாடகை தான் கொஞ்சம் அதிகம்!

தமிழ்ப்பறவையுடன் ஏறத்தாழ வருடம் முழுக்க தினம் பேசினேன். யோசிப்பவர் அவர் முயற்சிகளில் என்னையும் இழுத்துக் கொள்கிறார். அதற்கு என்ன தவம் செய்தேன் என்று தெரியவில்லை.

அனலில் எரிந்த முத்துத் தமிழன் மறக்க முடியாமல் செய்து விட்டான். ஆஸ்கார்த் தமிழன் அன்பையும், அடக்கத்தையும் பறைசாற்றினான்.

மொத்தத்தில் 2009 கொஞ்சம் நடுக்கத்திலேயே வைத்திருந்தாகவும் எழுதுவதில் கொஞ்சம் தனித்த நடை வந்திருப்பதாக உணர்வதாகவும் கடந்து கொண்டிருக்கின்றது. வரும் ஆண்டிற்கென சில கனவுகள் வைத்திருக்கிறேன்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Cheeeeeerzzzzz and Rock U Buddiezzzzz.....!!!!!!

6 comments:

ஆயில்யன் said...

//தன் கடைசி மணிகளில் ஓடிக் கொண்டிருக்கும் இந்த கி.பி.2009 எனக்கு என்ன அர்த்தம் ஆகின்றது என்பதைக் கொஞ்சம் - கழுத்து வலித்தாலும் பரவாயில்லை என்று - திரும்பிப் பார்க்க விரும்புகிறேன்./

lol:)))

நலமும் வளமும் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும் 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்...

thamizhparavai said...

வாழ்த்துக்கள் வசந்த்... கொஞ்சம் தாமதமாத்தான் படிக்கிறேன்...
இன்னும் பல சாதனைகள், உயர...
இப்படி எல்லாம் சம்பிரதாயமாகச் சொல்ல விருப்பமில்லை...
உங்கள் நட்பின் அணைப்பில் முட்டி நிற்கும் மூச்சைக் கேட்டால் ஒரு வேளை சொல்லக் கூடும்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

பின்னோக்கி said...

//வாழை இலைகளில் நிலவொளி வெள்ளம் பாய்ந்துச் சேகரமாகி, நடுப் பட்டையில் ஓடி நுனியில் சொட்டுகின்றன


ம்..ம்..அருமை.. வர்ணனைகளில் உங்கள் எழுத்துக்கு ஈடாக நான் இதுவரை படித்ததில்லை. அற்புதம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Karthik said...

//Cheeeeeerzzzzz and Rock U Buddiezzzzz.....!!!!!!

Thankzzz!!! Lolzzz!!! :D :D

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

***

அன்பு தமிழ்ப்பறவை...

நீங்கள் ஒரு நவீனக் கவிஞர் என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள். :)

***

அன்பு ஸ்ரீ...

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

***

அன்பு பின்னோக்கி...

நன்றிகள். தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

***

அன்பு கார்த்திக்...

Tnx dudee..!! HNY Wishes 2 u 2..!! :P