Friday, January 15, 2010

'ஆயிரத்தில் ஒருவன்' கதையின் கொஞ்சம் ஒரிஜினல் எது?

பாண்டியர்களிடம் இருந்து தப்பித்த சோழ வம்சத்தினர் வியட்நாம் அருகே ஒரு தன்னந்தனித் தீவில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் நிகழும் ஆதாரத் தளம்.

இதற்கான மூலக்கருவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒருவர் ஒரு குறுநாவலாக எழுதி இருக்கிறார். யார் தெரியுமா..? கல்கி.

'மோகினித் தீவு' என்ற அந்த அற்புதமான படைப்பைப் படித்தால் ஆதாரம் அகப்படும்.

46 பக்கங்கள் கொண்ட அந்தச் சிறு நூலைச் சுருக்கமாகச் சொல்கிறேன். விரும்பாதவர்கள், இந்தக் கண்ணியைக் க்ளிக்கித் தாங்களே படித்துப் பார்க்கலாம். அரை மணி நேரம் தான் ஆகும்.

சுருக்கம் :

இரண்டாம் உலகப் போரின் போது, பர்மாவிலிருந்து தப்பிக்கும் தமிழர்களை ஏற்றிக் கொண்டு வரும் கப்பல், ஜப்பானிய க்ரூஸர் எதிர்வருகின்றது என்ற செய்தியை நம்பி, சென்னையை நோக்கி வரும் வழக்கமான பாதையை விட்டு, இலங்கைக்குத் தென்கிழக்கே மூன்று நாள் பயணத் தூரத்தில் இருக்கும் 'மோகினித் தீவில்' ஒதுங்குகின்றது.

பயணிகளில் சிலர், அந்தத் தீவைப் பற்றிக் கேப்டனிடம் கேட்டு, ஆர்வமாகித் தீவிற்குள் சென்று பார்க்கிறார்கள். சிறிது நேரம் கழித்து எல்லோரும் திரும்பி விட, ஒருவர் மட்டும் அங்கேயே தங்குகிறார்.

அப்போது ஓர் அழகான யுவதியும், யுவனும் அவரிடத்தில் வந்து ஒரு கதையைச் சொல்கிறார்கள்.

சோழ தேசம் சிறு அரசாக மாறிய காலத்தில், மதுரையில் பாண்டிய ராஜ்ஜியம் கோலோச்சுகின்றது. இருவருக்கும் இடையே முட்டிக் கொள்ள, பாண்டியர் சோழ அரசரைச் சிறைப்பிடித்துச் சென்று விடுகிறார். அவரிடமிருந்து தந்தையை மீட்க, சோழனின் மூத்த மகனாகிய சுகுமாரச் சோழர், ஒரு சிற்ப மாணாக்கன் போல் மதுரையில் ஊடுறுவித் தந்தையைச் சிறை மீட்கிறார். அதற்குப் பாண்டிய இளவரசி 'புவனமோகினி'யை ஏமாற்றுகிறார். ஆனால் அதற்குள்ளாகவே இருவருக்கும் இடையே காதல் அரும்பி விடுகின்றது. சோழ அரசரைத் தப்பிக்கச் செய்த சிற்ப மாணாக்கன் சோழ இளவரசனே என்றும் புவனமோகினிக்குத் தெரிந்து விடுகிறது.

தப்பித்த சோழன் படையைத் தயாரித்து, மதுரை மேல் படையெடுக்க, அச்சமயம் பாண்டியர் நோய்வாய்ப்பட்டிருக்க, ஏமாற்றியவனைப் பழி வாங்க, இளவரசியே போர்க்களத்திற்கு வருகிறாள். ஆனால், சிறைப்படுகிறாள். சுகுமாரச் சோழன் தந்தையிடம் தன் காதலைச் சொல்ல, அவர் 'பாண்டிய பெண்ணைச் சோழ சிம்மாசனத்தில் அமர விட மாட்டேன்' என்று மறுத்து விடுகிறார்.

'எங்கள் காதலை விடச் சோழம் எனக்கு முக்கியமில்லை' என்று சொல்லி விட, அவர் மனம் கனிகிறார். தனியாய் ஒரு சாம்ராஜ்யம் அமைத்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டு, சுகுமாரச் சோழனும், புவனமோகினியும் கப்பலேறி இந்தத் தீவுக்கு வந்து, எழுநூறு ஆண்டுகளாக அன்னியோனிய தம்பதியாக அழியாது, சிற்பக்கலையால் மோகினித் தீவையே கலைலோகமாக்கி, என்றும் குறையாத காதலோடு வாழ்கிறார்கள்.

'ஆயிரத்தில் ஒருவனை' உருவாக்க இந்த அளவுக்குக் கரு போதாது...?

17 comments:

thamizhparavai said...

ஜோதியில ஐக்கியம் ஆயிட்டீங்களா... வாழ்த்துக்கள்.. :-)
இன்னும் படிக்கலை... இன்னைக்கு மூடு இல்லை...

பின்னோக்கி said...

மிரட்டலா இருக்கு இந்த செய்தியும், உங்க புது டெம்ளேட்டும்.

குகன் said...

எதோ ஆங்கிலப்படத்தில் இருந்து பென்டஸி கதை கருவை திருடுவதை விட நாவலில் இருந்து எடுப்பது பலருக்கு தெரியாது. நல்ல தகவல்.

கல்கி கதை படித்துவிட்டு படம் பார்க்கிறேன்.

Thamiz Priyan said...

கல்கியின் மயில்விழி மான் படித்து இருக்கின்றீர்களா? இதே போன்ற ஒரு கதை தான்.. ஆனால் இன்னும் கொஞ்சம் இழுத்து ராவணன் காலத்துக்கு கொண்டு சென்று இருப்பார். இதை வைத்து நான் எழுதிய ஒரு சிறுகதை
http://majinnah.blogspot.com/2008/10/blog-post_31.html

Romeoboy said...

கல்கி கதை படித்தேன்.. அருமையாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி .

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மூடு இருக்கும் போது, நாவலைத் திறந்து படியுங்க..!!

***

அன்பு பின்னோக்கி...

நன்றிகள்.

***

அன்பு குகன்...

நீங்கள் சொல்வதும் உண்மை தான்.

***

அன்பு தமிழ்_பிரியன்...

இன்னும் மயில்விழிமான் படித்ததில்லை. உங்கள் கதையையும் படித்து விட்டுப் பின்னூட்டுகிறேன்.

***

அன்பு ரோமியோ...

நன்றிகள்.

பாலாஜி சங்கர் said...

பகிர்ந்தமைக்கு நன்றி 
நல்ல பதிவு

Thamizhan said...

indha edutha padathaye remake panradha vida, aangilathil/telungil vandhadhai vekkame illaama xerox adikkaradha vida.. endha vidhathil korachal oru novel inspiration vaithirundhaal?! idhuve namma bloggers kku pozhappaaga pogi vittadhu polum - mathavan senjadhil nolla sollikitte vaazhkaya ottaradhu. oruvar nallaa padam pudhusa thamizhla eduthaa rasikkaama rishimoolam thiraikadhaimoolam nu pakaradhu!! kashtam, ungalukkellam pathu ajith/vijay/vishal vandhaalum thirundha maateenga pola....

இரா. வசந்த குமார். said...

அன்பு Thamizhan...

தமிழ்ப் பதிவர்கள் திருந்த வேண்டும் என்ற தங்கள் அக்கறையை வரவேற்கிறேன். அதற்கு முன்பாகத் தாங்கள் தமிழில் எழுதினால் இன்னும் சிறப்பாகத் திட்டவும் முடியும்; தங்கள் பெயருக்கு ஒரு மரியாதை கொடுத்தது போன்றும் இருக்கும். அதற்கு இக் கண்ணியைக் க்ளிக்கவும்.

மற்றவர்கள் செய்வதில் இருக்கும் நல்லனவற்றைச் சொல்லிப் பாராட்டுவதும், அதில் தவறோ/குறையோ காணப்பட்டால் அதை மென்மையாகச் சொல்வதும் மானுடப் பண்பு என்று கருதுகிறேன்.

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றியத் தமிழ்ப் பதிவர்களின் பெரும்பாலான விமர்சனங்கள், 'இது ஒரு புதிய கதை', 'புத்தம் புது முயற்சி' என்றெல்லாம் சொல்லியிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால், அத்தகைய ஒரு கருத்தைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கல்கி சொல்லி இருக்கிறார் என்பது எந்த விதத்திலும் செல்வராகவனுக்கு இழுக்கைத் தந்திருக்காது, அவர் அதை ஒத்துக் கொண்டிருந்தால்!

நாளை இந்தக் கதையை, 'செல்வராகவனின் தனி மூளை சிந்தித்தது; என்ன ஒரு அற்புதம்' என்றெல்லாம் புகழப்படும் போது, ஒரு பொய்யான பிம்பம் கட்டமைக்கப்படும் போது, 'அது தவறு; ஏற்கனவே கல்கி சொன்னது தான்' என்று சொல்வது தமிழ் வாசகனாக என் கடமை என்று நினைக்கிறேன். ஒருவேளை நானும் அந்தக் குறுநாவலைப் படிக்காதிருந்தால், இயக்குநரை வியந்திருப்பேன்.

நன்றிகள்.

தேடுதல் said...

நீங்கள் இதை கல்கியின் கதை ஒட்டி எடுக்கப்பட்டது என்று சொல்வதை விட, இக்கதை இலங்கைப் பிரச்சனை என்று ஒப்பிட்டுப் பாருங்கள் சரியாக பொருந்தும்.

தாய் மண்ணிற்க்காக சோழ மன்னன் ஏங்குவதும், எதிரிகள் சுற்றி வளைத்து போரில் மன்னனை சிறை பிடிப்பதும், போர்க்கைதிகளிடம் இராணுவம் அத்து மீறுவதும், இறுதியில் மன்னன் இறப்பதும்.....

இரா. வசந்த குமார். said...

அன்பு ...

படம் மூன்றாண்டுகளாகத் தயாரிப்பில் இருக்கின்றது. தற்போதைய ஈழச் சம்பவங்கள் 2008 மத்தியில் தானே மிகவும் உக்கிரமாகத் தொடங்கியது..?

இரண்டாம் பகுதி முழுக்க ஈழ நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தி வந்திருக்கலாம்.

//'ஆயிரத்தில் ஒருவனை' உருவாக்க இந்த அளவுக்குக் கரு போதாது...?

என்று சொல்லி இருக்கிறேன். 'சோழர்கள் பாண்டியர்களின் துரத்தலுக்கு உட்பட்டு வேறு தீவுக்குச் சென்று அங்கு இன்னும் வாழ்கிறார்கள்' என்ற அடிப்படைக் கரு, கல்கியின் நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தான் சொல்ல நினைக்கிறேன்.

நன்றிகள்.

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி நண்பா.

Anonymous said...

This is the movie version of current and recent situation of Eelam war. As it's taken 3 yrs for the making, director kept on adjusting the story to match what happend on May 17th, 2009 and later.

Thamizhan said...

:) thittuvadhirkku thamizh il dhaan ezhudha vendumaa enna :-) thanglish ae podhumaanadhu... ezhudhum mozhi ennavaaga irundhaal enna, ezhudhuvadhu thamizh dhaane :-)
selvaraghavanin moolai sindhithadhu enbadhu thavaru enru solvadhaal ungalukkum moolai irukku enru solla thudikkum indha thani manidha veri dhaan thamizhanukku nigazhum sogam!! 1000 kodi selavil avatar eduthaal ellavattrayum moodi kondu paarkkum nam janakootam (ungalai mattum thanithu sollavillai). adhil manushanukku vaal irundhaal kooda adhu oru karpanai kadhai, avvalave!! aanal selva padam aarambikkum munnare 'idhu oru karpanai kadhai' enru pottu vittu padam pottaalum, pandian ivvaaru seyya maataan, en chozha magaraaja ivvalavu karupillai enra reedhiyil aayiram vimarsanangal!! neengal kuripitta pol idhu thamizh padhivargal kku mattum ulla 'nalla pazhakkam' alla... indhiyargalukke sondhamaana ariya pazhakkam :D

innum ezhudhungal ... vettri padamaana kutti/vettaikaran pattriyellam :)

இரா. வசந்த குமார். said...

அன்பு butterfly Surya...

நன்றிகள்.

***

அன்பு அனானி...

நன்றிகள். நீங்களே சொல்லி விட்டீர்கள்.

//As it's taken 3 yrs for the making, director kept on adjusting the story to match what happend on May 17th, 2009 and later.

நான் சொல்ல விழைவதும், படத்தின் இரண்டாம் பகுதி ஈழத்தை நினைவுறுத்தினாலும், படம் ஆரம்பித்த காலகட்டத்தில் 'சோழர்கள் தப்பிப் பிழைத்து இன்றும் வாழும்' ஐடியா, கல்கியின் நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்பது தான்.

போகப் போக, ஈழ நிலவரங்களைச் சேர்த்துக் கொண்டே வந்தார்கள் என்றால், அதைப் பற்றி எனக்கு வேண்டாம். அது ஒரு மிக மலிவான வியாபார யுக்தியாகவும் இருக்கலாம்.

***

அன்பு தமிழன்,

மன்னிக்கவும். தங்களை Thamizhan என்று சொல்லாமல் தமிழன் என்று சொல்வதில் வருந்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

இப்போது உங்கள் பார்வை இன்னும் விரிந்து, தமிழ்ப் பதிவர்கள் மேல் மட்டும் அல்லாமல், அனைத்திந்தியப் பதிவர்களையும் கூர்ந்து கவனித்து வருவது கண்டு பெரு மகிழ்வுறுகிறேன்.

நான் சொல்லும் கருத்தைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது தெள்ளெனத் தெரிகின்றது.

ஒரு தமிழ் வாசகனாக, ஒரு படைப்பாளியின் படைப்பை மற்றொரு படைப்பாளி எவ்வித அடையாளத்தையும் காட்டாமல் உருவிக் இருக்கலாம் என்பதே என் ஐயப்பாடு. அதற்கான ஆதாரத்தையும் இப்பதிவில் சமர்ப்பித்திருக்கிறேன். அப்படி செல்வராகவன் செய்திருக்காவிட்டால் எனக்கு மகிழ்ச்சியே! இல்லாவிடில், அதை அவர் ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். அதைத் தான் ஒரு வாசகனாக நான் எதிர்பார்ப்பேன்.

மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட வேறு சில படங்கள், இதுவரை நான் படித்த எந்த இலக்கியப் படைப்பிலிருந்தும் எடுக்கப்பட்டதாக எனக்குத் தெரிய வந்தால், அதையும் நான் - கவனிக்கவும், திரைப்பட ரசிகனாக அல்ல, இலக்கிய வாசகனாக - எதிர்த்துப் பேசுவேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், அதைப் பற்றி விவாதிக்காமல், 'அந்தப் படத்தைக் க்ண்டு கொண்டாயா... இந்தப் படத்தைப் பற்றி ஏன் பேசவில்லை' என்று மடை மாற்றிப் பேசுவதால், நீங்களும் ஓர் இந்தியப் பண்பாளிதான், தமிழனுக்கே உரிய 'நல்ல பழக்கம்' கொண்டவர் தான் என்பதை உறுதி செய்து கொள்கிறீர்கள்.

நன்றிகள்.

ARV Loshan said...

நேற்றுப் படம் பார்த்தபினர் இன்று தான் ஒவ்வொரு விமர்சனமாகப் படிக்கிறேன்.

ஆமாம் நீங்கள் சொன்ன கல்கி கதை முன்பே வாசித்துள்ளேன்.. ஆரம்ப கட்ட ஐடியாக்களுக்கான எண்ணம் இதனால் உருவாகி இருக்கலாம்.பல ஆங்கிலப் படங்களும் பாத்தித்திருக்கலாம்..
இரண்டாம் பகுதி முழுக்க முழுக்க ஈழத் தாக்கம் என்பதில் ஐயம் இல்லை.

இதை மலிவான வியாபரத் தந்திரம் என்று நான் எண்ணவில்லை.
அப்படி செல்வா நினைத்திருந்தால் முழுக்க மசாலாவாக்கி இருக்கலாம். இரண்டாம் பகுதியில் இவ்வளவு சீரியஸ் தனம் காட்டி இருக்கத் தேவையில்லை.

இரா. வசந்த குமார். said...

அன்பு லோஷன்...

நன்றிகள். 'சோழர்கள் பாண்டியர்களின் துரத்தலுக்கு உட்பட்டு வேறு தீவுக்குச் சென்று அங்கு இன்னும் வாழ்கிறார்கள்' என்ற அடிப்படைக் கரு, கல்கியின் நாவலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தான் சொல்ல நினைக்கிறேன்.

மற்றபடி எனக்குச் சொல்வதற்கு ஒரு வாசகனாக எதுவும் இல்லை.