Monday, December 20, 2010

நாஞ்சில் நாடருக்கு வாழ்த்துக்கள்.



வ்வாண்டுக்கான சாகித்ய அகாதமி - தமிழ் விருது பெறுகின்ற எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

Pic Courtesy :: http://farm3.static.flickr.com/2208/2201252799_b7f192a265.jpg?v=0

Tuesday, December 07, 2010

நானே



தேடிய பெருங்கவிதை ஒன்று நெடுங்காலமாய் ஒரு கல்லிடுக்கில் ஒளிந்து கொண்டிருந்தது. தடுக்கிக் கொண்டு கீழே விழுந்ததும் ஒரு சாரையைப் போல மெல்ல எட்டிப் பார்த்தது. அதன் நா நுனியில் வார்த்தைகளின் நஞ்சு தடவப்பட்டிருந்தது. மேனிமேல் ஒரு பளபளப்பான தோல் நிலவொளியில் மினுங்கியது. நாசி வழி வெங்காற்று வெளியே வந்து சுற்றுப்புறத்தைச் சூடாக்கியது. நீல விழிகள் பாரித்த ஒளி, உமிழ்ந்த வேகத்தில் சிறு கற்கள் பொசுங்கின. கைகள் அற்றுக் கால்களும் அற்று மெல்லத் தன்னை அசைத்து வெளியே வந்து நின்றது.

அள்ளி விழுங்கிக் கொள்ளும் யத்தனத்தில் மெல்ல அணுகினேன். செவ்வாய் மேல் காமம் பூசியிருக்க, முத்தமிட்டேன். தீ தீண்டும் சுகம். வழுவழு உடல் தரித்து ஈரம் பதித்த நல் வரிகளால் எழுதப்பட்டிருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கினேன்.

நானே கவிதையானேன்.!!

Pic courtesy :: http://www.allarminda.com/wp-content/uploads/2010/10/poetry2.jpg

மணற்கேணி - 2010 - அழைப்பு.



மிழ் வலைப்பதிவுகளில் பலதரப்பான தளங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றியும் அவற்றின் மேலான தங்கள் எண்ணங்களையும் அப்பதிவுகளைப் பார்வையிடுவோர் தங்கள் பின்னூட்டங்களில் பதிலிடுகின்றனர். எளிதாகக் கண்ணுக்குப் படும்வகையில் அமைவன திரைப்படம், திரை நிகழ்வுகள் மற்றும் அவற்றை ஒட்டி வாழும் துணை உறுப்புக்களான விமர்சனங்கள், ஒப்புமை கண்டறிதல்கள் போன்றன. அவற்றைத் தவிர்த்துப் பார்க்கையில் அரிதாகவே வேறு பல துறைகளைப் பேசும் பதிவுகள் கிடைக்கின்றன.

அச்சிறுபான்மைப் பதிவுகளை இன்னும் கொஞ்சம் வலுப்பெறச் செய்ய எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி 'மணற்கேணி'.

சிங்கப்பூர் வாழ்த் தமிழ்ப்பதிவர்கள் தமக்குள் அமைத்துள்ள ஒரு குழுமம், இத்தலைப்பில் நம்மைச் சிந்தையால் துழாவச் செய்யும் சில கருதுகோள்களைக் கொடுத்துக் கட்டுரைகளைக் கேட்கின்றது. எளிதில்லாத ஒரு பணி என்பதால் இவ்வாண்டு இறுதிநாள் வரை நேரம் கொடுத்துக் காத்திருக்கிறார்கள்.

நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்படும் கட்டுரையின் ஆசிரியர்களை சிங்கைக்கே அழைத்து ஒரு வாரம் முழுதும் உபசரித்துப் பற்பல நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்து, அவர்கள் தம் வாழ்நாளில் மறந்திட இயலாவண்ணம் அன்பால் தழுவி அனுப்பி வைக்கிறார்கள்.

மேலதிக விவரங்களுக்கு ::

மணற்கேணி- 2010

சென்ற ஆண்டில் கலந்து கொண்டு எழுதிய அறிவியல் கட்டுரை : ஒலிதச் சமிக்ஞைப் பகுப்பாய்தல்.

ஈரோடு தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2010 - அழைப்பு.



சென்ற ஆண்டைப் போலவே இந்த வருடமும் 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்' சங்கமம் நிகழ்வை நடத்த முடிவு செய்திருக்கின்றது.

தேவகுமாரனின் பிறந்தநாளுக்கு அடுத்து டிசம்பர் 26-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் என நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலதிகத் தகவல்கள் விரைவில்.

விவரங்களுக்கு ::

கதிர் - 99653-90054
பாலாசி - 90037-05598
கார்த்திக் - 97881-33555
ஆரூரன் - 9894717185
வால்பையன் - 9994500540
ராஜாஜெய்சிங் - 9578588925
சங்கமேஸ் - 9842910707
ஜாபர் - 9865839393
நண்டு நொரண்டு - 9486135426

ஈரோடு கதிர்

***

சங்கமம் - 2009 தொடர்பாக எழுதிய பதிவுகள் ::

தமிழ்ப்பதிவர்ச் சங்கமம் - 2009 - ஈரோடு - அழைப்பு.

ஈரோடு சங்கமம் - 2K9 - Cooooool!

ஈரோடு சங்கமத்தில் பேசிய உரை.

ஈரோடு சந்திப்பு - 2009 - கடைசியாய்க் கொஞ்சம்!

Monday, November 22, 2010

குஜிலி!



பெருநிலக்கிழார்களையும், குறுநில மன்னர்களையும், பிரபுக்களையும் பாடிக் கொண்டிருந்த தமிழ்ப்புலவர்களின் வரிசையில் கடைசிக் கண்ணியாய் வந்தமைந்த பாரதியார், 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்க் கவிதைகளை பொது மக்களின் புறம் திருப்பினார். மரபார்ந்த வடிவங்களில் கவிதைகள் தத்தம் பாடுபொருட்களை அரசவைகளில் இருந்து அரச மரத்தடிக்கு மாற்றிக் கொண்டன. சுதந்திரம் கிடைத்த பின் பெருகிய கல்விப் பரப்பின் அடியில் துளிர்த்த சமூகத்தின் பசியைத் தணிக்க 'தினத்தந்தி' முனைந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையே ஒரு தொடர்புச் சங்கிலி போல் அமைந்தவை தாம், படிக்கவும், எழுதவும் கற்றிராத ஆனால் மெல்ல மெல்லத் தம்மைப் பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கிய தமிழ்ச் சமுதாயத்தின் சந்து முனைகளில் வழங்கப்பட்ட முச்சந்தி இலக்கியம், பெரிய எழுத்துப் புத்தகம், காலணா அரையணா பாட்டுப் புத்தகங்கள், தெருப் பாடல்கள் என்றெல்லாம் வழங்கப்பட்ட 'குஜிலி இலக்கியம்'.

பேராசிரியர் டாக்டர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் வெகுசிரமம் மேற்கொண்டு பற்பல பழைய நூல்களையும், பத்திரிக்கைகளையும் தெருப் புத்தகங்களையும் படித்து அநேக மேற்கோள்கள் இட்டு இந்நூலை எழுதியிருக்கிறார் என்பது ஸ்பஷ்டம்.

பொதுவாக சிந்து என்ற வகையிலேயே எளிதாகப் பாடும் வகையில் தெரு முனையில் நின்று இச்சிறு நூல்களை விற்போர் பாடுவதால், பாரதியாரும் 'காவடிச் சிந்து' வகையில் பாடல்கள் பாடியிருக்கிறார். அதனாலேயே 'சந்திலே சிந்து' என்ற இன்றைக்கும் ஜனப்பிரயோக வார்த்தை வந்திருக்கும் என்பது ஊகம்.

குஜிலி என்ற பெயர் தோன்றிய முறையிலிருந்து இவ்வகைப் பாடல்கள் வளர்ந்த விதம், பாடுபொருட்கள், பாடியோர், விற்பனை முறைகள், வாசகர்கள், தேய்வும் வீழ்ச்சியும் என்று அனைத்தையும் குறைவின்றி ஆய்ந்து சுவாரஸ்யமாகவும் விளக்கமாகவும் சொல்லியிருக்கின்றார்.

அக்காலத்தில் நடந்த ஜனங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக் கூடிய அத்தனை விஷயங்களையும் இந்த தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். அம்ஸவல்லிகேஸு, மடராஸ் ரெயில் கலகம், கள்ளப்புருஷன் ஆசையால் பிள்ளையைக் கொன்ற கனகம்மாள் துயரம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து, விளக்கெண்ணைக்கும் கிருஸ்னாயிலென்ற மண்ணெண்ணைக்கும் சண்டையின் கும்மி நல்லெண்ணெய் சமாதானப்படுத்துதல் போன்று பல விஷயங்களிலும் பாட்டுக்கள் எழுதியிருக்கிறார்கள். கோர்ட்டில் ஏதேனும் பிரபலமான கேஸ் நடந்து கொண்டிருக்கும் போது அன்றைன்றைக்குச் சாயந்திரமே தெருக் கவிஞர்கள் அன்றைய விபரத்தைப் பாடலாக்கி விற்றிருக்கிறார்கள்.

வழக்கம் போல் மேல்தட்டு ஜீவிகளால் 'துர்பாட்டுகள்' என்று ஒதுக்கப்பட்ட இவ்விலக்கிய வகைப் பாடல்கள் தேசியம் நோக்கித் திரும்பியதும் தேசநலன் விரும்பிகளால் வியந்தோதப்பட்டன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து என்று பாடுகிறார்கள். வந்தது வினை. ஆங்கில அரசின் கவனம் இவற்றின் மேல் திரும்ப, பல்லாயிரம் குஜிலி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எரிக்கப்பட்டதில் கணிசமானவை அழிந்தன.

மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வந்து இப்போது மிக மிக அரிதாக மாறி விட்ட குஜிலி இலக்கியத்தைப் பற்றி ஒரு வரலாற்றுப் பார்வைக்கு இந்நூல் மிக உபயோகமான பதிவு.

உதாரணத்திற்கு ஒரு பாடல்.

ஸ்ரீ வேணுகோபாலன் திருவடிகளே சரணம்

30 - 7 - 22க்கு ஆடி மீ 15உ பாளையங்கோட்டை பெரிய ஜெயிலிலிருந்து செம்புலிங்க நாடார் ஓடிப்போன பாட்டு

இஃது பாளையங்கோட்டை மில்டெரி லயன் புஸ்தக வியாபாரம் S.A.அளகிரிசாமி பாகவதர் பாடியது
பாளையங்கோட்டை செளராஷ்ட சபையார் பொருளுதவி செய்தது
திருநெல்வேலிப்பாலம் ஸ்ரீ காந்திமதி விலாஸம் பிரஸில், அச்சிடப்பட்டது
காப்பி முதற்பதிப்பு 2000
இதன்விலை 1922 அணா1
விருத்தம்

செம்புலிங்க நாடார்மேல் ஜெகமதில் பாட்டுரைக்க அம்புவியோர் இதைக் கேட்டு ஆனந்தமாய் மகிழ நம்பி எனும் வேலனுக்குத் தமையனாம் கணபதியை தும்பிக்கயுடையோனைத் துரிதமுடன் நமஸ்கரித்தேன்.
ஆல்ரெடி சொவுசுக்காரி - என்ற மெட்டு

செம்புலிங்கம் ஓடினசங்கதி சொல்லவேண்டாமா
அதைப்பாட வேண்டாமா
ஊரில்கேள்க வேண்டாமா
மனங்கொள்ள வேண்டாமா

அணாக்கொடுத்து புஸ்தகம்வாங்கிப் பார்க்க வேண்டாமா
பார்த்துநல்ல குற்றங்குரை தெரிய வேண்டாமா

புஸ்தகத்தை வாங்கிப்பார்த்தால் புலன்வெளியாகும்
கவலைகள் தோணும்
யோஜனை உண்டாகும்
புத்தி தடுமாடும்

செம்புலிங்கம் செய்த விஷயம் செவ்வையாய்த் தோணும்
வம்புவந்த வகையதுவும் தென்புடன் காணும்

பாளையங்கோட்டை பட்டாளம் லயன் அளகிரிசாமி
பாடினேன் இதை
தேடியும் நீங்கள்
நாடியுங் கேட்டு

பாடிப்பாடி நாடுகளில் கூடிப்பேசிடுவீர்
ஆடி ஓடிய செம்புலிங்கத்தைத் தேடிக்கண்டிடுவீர்
நொண்டிச் சிந்து

கொள்ளை செய்த குற்றத்துக்காக- மெத்த சள்ளையில்லாமலிருக்க செம்புலிங்கத்தை- சரியான தென்டனை செய்து- சர்க்கார் அடிதண்டாவைக் காலில்மாட்டி- பக்குவமாய்ப் பாளையங்கோட்டை- புது ஜெயில் தன்னிலல்லோ அடைத்து வைத்து- பந்தோபஸ்துகள் செய்து- அவரைப் பகலும் இரவுமல்லோ பாறாவில் வைத்து- சிலகாலம் பார்த்து வந்து அண்ணே- இந்த விதம் நாள்களித்து வரும்போது- எவ்வித காரணத்தாலோ- அங்கு ஜூலை மீ முப்பதாந்தெய்தி யன்று- ஞாயிற்றுக் கிழமை இரவில்- இந்த செம்புலிங்க நாடாரும் காசிநாடாரும்- தேவமார் ரெண்டு பேரும்- அந்த ஜெயிலுக்குள்ளேயிருந்து வெளியேரி- தந்திரமாய் ஓட்டிவிட்டார்- இந்த நல்ல விவரத்தை முன்பக்கத்தில்-அனைவோர்களும் தெரிய யான் செப்பியிருக்கிறேன் அளகர்சாமி தந்திதை தந்தினனா.

***

புத்தகம் : முச்சந்தி இலக்கியம்

புத்தக வகை : கட்டுரைத் தொகுப்பு.

ஆசிரியர் : ஆ.இரா.வேங்கடாசலபதி

கிடைக்குமிடம் : நூற்கடைகள்.

பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்.

விலை : 140 ரூ.

***

Pic Courtesy :: http://upload.wikimedia.org/wikipedia/commons/3/36/Indra_deva.jpg