Wednesday, July 25, 2007

உள்ளே.. வெளியே..!


பெரிதாகத் துளிகள் விழத் தொடங்கின.

கதவை இறுக்கமாகச் சாத்தினேன்.

இதை எதுவும் அறியாமல், அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

"லுக் பாபு! காதல் உங்களுக்கு வேணா விளையாட்டுப் பொருளா இருக்கலாம். ஆனா, என்னை மாதிரி பொண்ணுங்களுக்கு இது வாழ்க்கை பற்றிய பிரச்னை. ப்ளீஸ்! என்னைக் கைவிட்டுடாதீங்க. திடீர்னு என்ன பிராப்ளம்? ஏன் என்னை உங்களுக்குப் பிடிக்காம போயிடுச்சு? ஐயோ...! உங்க மேல நம்பிக்கை வெச்சு, உங்க கூட கோவளம் வரைக்கும் வந்தேனே.. அது தான் நான் பண்ணின பெரிய தப்பு. அங்க தங்கின ரெண்டு நாள்ல இப்ப, உங்க வாரிசு என் வயித்துல..! என் வாழ்க்கையே உங்க கையில் தான்.." அவள் அழுவது நன்றாக கேட்டது.

வெளியே தூரப் பார்த்தேன். மழை வலுத்து விட்டிருந்தது. ஃபோன் கூண்டின் மேல் துளிகள் கற்கள் போல் விழுவது நன்றாக உணர முடிந்தது.

ஏதாவது சொல்ல வேண்டுமே என்று வாயைத் திறப்பதற்குள், அவள் மீண்டும் குறுக்கிட்டாள்.

"வேணாம். நீங்க எதுவும் சொல்ல வேணாம். நீங்க ஒரு சீட்டர். பொறுக்கி. பொண்ணுங்களோட வாழ்க்கையோட விளையாடறதே உங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேலையாப் போச்சு. உங்களை நான் சும்மா விடப் போறதில்ல. போலிஸ் வரைக்கும் போவேன். ஆனா... உங்களை நம்பி என் வயித்துல உருவாகி விட்ட கருவுக்காகப் பாக்கறேன். தயவு செஞ்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்க.. ப்ளீஸ்..." அவள் அழுவது கேட்டது.

இது போன்ற எத்தனை பெண்களைப் பார்த்திருப்பேன்..! முதலில் கோபப்படுவார்கள். பின் குழைவார்கள். பின் சமாதானப் படலம் வருவார்கள்.

மெளனமாய் இருப்பதை உணர்ந்து, "என்ன எதுவும் பேச மாட்டேங்கறீங்க? சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்.." என்றாள். ரிசீவர் டக்கென்று வைக்கப்பட்டது.

"எவ்வளவு சார் ஆச்சு..?" கேட்டபடி சில்லறைகளை அள்ளினான்.

"மூணு ரூபா குடுங்க ஸார்.." என்றேன் பில்லைச் சரிபார்த்தபடி. பூத்தின் கதவை இறுக்கிச் சாத்தியபடி, அடுத்த கஸ்டமர் எப்போது வருவாரோ என்ற எதிர்பார்ப்போடு..!

4 comments:

Anonymous said...

nice short story..:)

///மூணு ரூபா குடுங்க ஸார்.." //

phone-la pEsiyadhu oru ponnu thaaney??..apuram 'sir' nu pOtu irukeenga??

இரா. வசந்த குமார். said...

Trap-la விழுந்தீங்களா.... ஹா...ஹா... அங்க தான் ட்விஸ்டை வெக்கிறோம்..(அங்க போயா ட்விஸ்டை வெச்சீங்க..?)

/*
phone-la pEsiyadhu oru ponnu thaaney??..apuram 'sir' nu pOtu irukeenga??
*/

கரெக்ட் தான்.. போன்ல பேசியது ஒரு பொண்ணுதான்.. ஆனா எந்த எண்ட்ல...? அந்த எண்ட்ல.. ! பூத்ல பேசியது அந்தப் பொண்ணை ஏமாத்தின ஆண்... வெளியே உட்கார்ந்திருக்கிற பூத்காரருக்கு பொண்ணு பேசியது கேட்கிற அளவுக்குச் சத்தமாகப் பேசியிருக்காங்க....

PPattian said...

//பூத்காரருக்கு பொண்ணு பேசியது கேட்கிற அளவுக்குச் சத்தமாகப் பேசியிருக்காங்க.... //

பூத் காரர், பேரலல் போனில் ஒட்டு கேக்கறார்னு நினைச்சேன்.

இரா. வசந்த குமார். said...

PPattian ஸார்... ஹீ..ஹீ...