Sunday, April 26, 2009

பள்ளிகொண்டபுரம்,தமிழ்ச்சங்கம்,நீலபத்மம்,தலைமுறைகள்.

ன்று எழுபத்தோராவது பிறந்ததினம் காணும் தமிழ் எழுத்தாளரான திரு.நீல.பத்மநாபன் அவர்கள் தமது அறக்கட்டளை மூலமாக வருடம் தோறும் கொடுக்கின்ற சிறந்த கவிதைக்கான நீலபத்மம் மற்றும் சிறந்த சிறுகதைக்கான தலைமுறைகள் விருதுகள் கொடுக்கும் விழா, இன்று திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் பி.ஆர்.எஸ். அரங்கில் மாலை 5.30-ல் இருந்து 8.30 வரை நடைபெற்றது.

இந்த முறை தனியாகப் போகக் கூடாது என்று தீர்மானித்து, சுந்தரையும் கூப்பிட, தனது அலுவலக மற்றும் தனி வேலை இறுக்கங்கள் இடையிலும் இன்று மாலை 4.30க்கு செல் செய்து, 'போகலாமா' என்று கேட்டார். நான் அப்போது தான் குளித்து விட்டு, எத்துணி குறைவான அழுக்கோடு இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தேன்.

அவரை நேரடியாக கிள்ளிப்பாலம் நிறுத்தத்திற்கு வரச் சொல்லி விட்டு, நான் தம்பானூர் பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். வழியில் நேரம் வீணாகப் போகின்றதே என்று, கால்வாசியில் தொங்கலில் விட்டிருந்த, 'சாயத்திரை'யை (சுப்ரபாரதிமணியன்) விரித்தேன். ஐந்தாம் அத்தியாயத்திற்கு மேல் படிக்க முடியாமல் திணறி, மூடி வைத்து விட்டு, ரோட்டில் நிற்கும் மரங்களைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

கண்டிப்பாக அது நாவலின் குறையாக இருக்க முடியாது. பின்னட்டையில், 'கையெழுத்துப் பிரதியிலேயே திருப்பூர் கலை இலக்கியப்பேரவையின் பரிசினைப் பெற்றுள்ளது' என்று சொல்கிறார்கள். எனது அப்போதைய மனநிலை நாவலோடு ரெசனன்ஸில் இல்லாமல் இருந்திருக்கலாம். நீல.பத்மனாபன் அவர்களின் 'பள்ளிகொண்டபுரம்' நாவலையும் முதலில் படிக்கும் போது, ஆரம்பத்திலேயே உற்சாகம் சரிந்து மூடி வைத்து விட்டு, பின் சில மாதங்கள் கழித்து இரண்டு மணியில் முடித்து, அவரிடமும் சொல்லி பாராட்டினேன்.

தம்பானூர் போய், பத்திரிக்கைகள் வாங்கி விட்டு, தோசை, சப்பாத்தி முடித்து, ஆட்டோவில் சங்கம் சொல்லிச் செல்ல, வழியில் சுந்தர் மசாலா கடலை வாங்கிக் கொண்டிருந்தார். அங்கேயே கையும் கடலையுமாய் அவரை மடக்கி, ஆட்டோவிற்குள் திணித்து, அவர் ரெண்டு ஸ்பூன் சாப்பிடுவதற்குள் சங்கம் வந்து விட, அவசரமாக இறங்கியவுடன் கீழே கொட்டிவிட்டார்.

கூர்மையாக மாலை 5.30க்கு நிகழ்ச்சி துவங்கும் என்று சொல்லி இருந்தபடியால், 5.40க்கு அரங்கில் நுழைந்தால், இசை விருந்து நடந்து கொண்டிருந்தது. டாக்டர் வேலாயுதன் வாய்ப்பாட்டில் மிருதங்கம், வயலின் குழுவுடன் பாடிக் கொண்டிருந்தார். உண்மையான மருத்துவரான இவர், வலிமையான குரலில் தியாகராஜர் கீர்த்தனைகள், 'பாட்டும் நானே பாவமும் நானே', கெளரி மனோகரி ராகம், காம்போதி ராகங்கள் விரிவு செய்தல் என்று அசத்தினார். அவ்வப்போது குரல் விரிசல் விட, ஈரமாய் குடித்தார். டாக்டரிடம் கேட்க வேண்டும், அது என்ன?

6.30க்கு இசை விருந்து மங்களம் (நாளென் செய்யும்?கோளென் செய்யும்?) பாடி முடித்தார். முடிந்ததும் எல்லோரும் சென்று பாராட்டினார்கள். 'கடவுள் எனக்குத் தர வேண்டும் ஆயுஸ்; நான் தர வேண்டும் வாய்ஸ்; நீங்கள் தர வேண்டும் எனக்கு சான்ஸ்;' என்றெல்லாம் டி.ஆரினார்.

பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது. எல்லோரும் எழுந்து நின்று 'செயல் மறந்து வாழ்த்தும்' போது, ஒரு குட்டிப் பையன் குறுக்கே ஓடினான். சங்கத்தலைவரான கா.பாலசுப்ரமனியன் வரவேற்புரை நிகழ்த்தி, நெல்லை தூய சவரியார் கல்லூரி தமிழியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர்.சிவசுப்ரமணியம் விருதுகள் பெற்ற்வர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 2008-ம் ஆண்டிற்கான நீலபத்மம் விருது திருமதி.சூரியகுமாரி இராதாகிருஷ்ணன் மற்றும் தலைமுறைகள் விருது திரு.மு.இரவீந்திரனுக்கு கொடுக்கப்பட்டது.

சிவசு அவர்கள் பதம்னாபன் அவர்களைப் பற்றியும், பொதுவாகத் தற்போதைய தமிழ் நிலவரம், கலவரங்கள் (ஏழைகள் நண்பன்; உங்கள் தொண்டன்; என் சொத்து வெறும் பத்து கோடி தான், எனக்கே ஓட்டு!), இலங்கை கவலைகள் என்று பேசினார். அவர் லயன்ஸ் ஷேர் எடுத்துக் கொள்ள, பிற்பாடு வந்தவர்கள் திண்டாட வேண்டியதாயிற்று. பள்ளிகொண்டபுரம் பற்றியும், புதிய சிறுகதைத் தொகுதியான 'பிறவிப்பெருங்கடல்' பற்றியும் தனது கருத்துக்களைச் சொன்னார்.

பிரபலமான மலையாள எழுத்தாளர் ஜி.என்.பணிக்கர், பதமநாபன் அவர்களின் மலையாள நாவலான 'குருஷேத்ரம்' மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவலான 'Birds in the Cage' (தமிழில் கூண்டினுள் பக்ஷிகள்) பற்றி பேசிவிட்டு, வாழ்த்தி, தமிழன் நிலை மட்டும் அல்ல, மலையாளத்தான் நிலையும் கூட அதே கேவலமானது தான் என்று சொல்லி ஆறுதல்படுத்தினார். மேடையில் அவ்வப்போது கண்கள் செருகினாலும், பேசும் போது சிரித்தவாறே பேசினார். இவர் என்ன எழுதி இருக்கிறார் என்று தேடிப் பார்க்க முடிவு செய்திருக்கிறேன். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறார், மல்லு சூப்பர் ஸ்டார் சாரு!

காலச்சுவட்டின் க்ளாஸிக் வரிசையில் பள்ளிகொண்டபுரம், அம்ருதா வெளியீடான திலகவதி தொகுத்த பத்து சிறுகதைகள் கொண்ட 'முத்துக்கள் பத்து', புதிய சிறுகதைத் தொகுப்பான 'பிறவிப்பெருங்கடல்', ஆகியவற்றை பேராசிரியர் சிவசு வெளியிட, சாகிதய அகாடமி வெளியீடான 'Neela Padmanabhan - A Reader', Birds in the Cage மற்றும் குருஷேத்ரம் (Malayalam) ஆகியவற்றை பணிக்கர் வெளியிட்டார்.

முதல் பிரதிகளைச் சங்கத் தலைவர் பெற்றுக் கொண்டார். வெளியிடுவது என்றால் இங்கே, அந்நூல்களை சங்க நூலகத்தில் சேர்க்கச் செய்தல் என்று பொருள் படும்.

கவிதை விருது நடுவர் முனைவர் ராஜேந்திரன் மற்றும் கதை விருது நடுவர் முனைவர் சரிகா தேவி தாம் தேர்ந்தெடுத்த காரணத்தை விளக்கினார்கள். ராஜேந்திரன் கடல் தாண்டி இருக்கும் தலைவனைக் குறிப்பிடாமல் குறிப்பிட்டு ஓர் உணர்ச்சிக் கவிதை வாசித்து விட, எல்லோரையும் எழுந்து நின்று கைதட்டச் சொன்னார்கள். செய்தோம். விருது பெற்ற சூரியகுமாரி மற்றும் இரவீந்திரனும் இரண்டு நிமிடங்கள் பேசி நன்றி சொன்னார்கள். பேராசிரியர் பாலசுப்ரமணியம் (இவர் வேறு பா.), பத்மனாபன் அவர்கள் சிபாரிசில் சாகித்ய அகாடமி சார்பில் கவிஞர் கண்ணதாசனின் மோனோகிராஃப் எழுத முடிந்து, முதல் பதிப்பு நெருப்பாய் விற்றுத்தீர்ந்து, அடுத்த பதிப்பிற்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகத் தகவல் சொல்லி விழா நாயகருக்கு நன்றி கூறி, இறங்கினார்.

நன்றியுரை சொல்ல செயலாளர் மு.முத்துராமன் வந்து, அவர் பங்கிற்கு ஒரு கவிதையை எடுத்துப் போட்டார். அவர் நன்றி என்று சொல்வதற்குள், இன்னோர் அம்மா (பெயர் தெரியவில்லை!), மைக்கைக் கைப்பற்றி தானும் ஒரு கவிதையைச் சோகமாய்ச் சொல்லி விட்டு, நகர்ந்து விட, செயலாளர் உஷாராகி இனி வேறு யாரும் கவிதை என்று முழங்கக் கூடாது என்று அடுத்த செயற்குழுவில் தீர்மானம் போட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டே நன்றி சொல்லி விட, தலைவர், 'கூட்டம் முடிந்தது' என்று சொல்வதற்குள் கலைந்தோம்.

*தமிழ்த்தாய் வாழ்த்து பாடித் துவங்கிய கூட்டம், ஜனகனமன இல்லாமல் முடிந்தது.

*டீ எனக்கு கிடைத்தது. ஸ்நாக்ஸ் என்ன என்று எனக்குத் தெரியவில்லை.

* சிவசு அவர்கள் பேசி முடித்தவுடனே, சுந்தர் எஸ்கேப் ஆனார்.

* நல்ல கூட்டம். நிறைய பேர் குடும்பத்துடன் வந்திருக்க, சின்னப் பசங்கள், பெண்கள் அங்கே இங்கே ரேண்டமாய் குதித்து விளையாட ஏதோ கல்யாணத்திற்கு வந்தாற் போல் இருந்தது. பந்தி எங்கே என்று கேட்காத குறை!

* யோசித்துப் பார்த்தால், எல்லோர்க்கும் கவிதை எழுதும் இச்சை இருக்கின்றது என்பது தெரிந்தது. இலங்கை கொடுமைகள் கிடைத்திரா விட்டால், உருளைக்கிழங்கு விலை ஏற்றத்தைப் பற்றியும் இன்று கொதித்து முழங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பிரபாகரன் வாழ்க என்றும், நாங்கள் இருக்கின்றோம் என்று லாங் சைஸ் நோட் பேப்பர் இரண்டு பக்கத்திற்கு உணர்ச்சியாய்க் கவிதை ஒன்று எழுதி வந்து கிடைத்த மைக்கில் முழங்கி விட்டுப் போகும் போது, 'ரிட்டர்ன் டிக்கெட்டிற்கு பெர்த் கன்ஃபார்ம் ஆகியிருக்குமா?' என்ற கவலையில் போவது, எந்த வகையில், ஈழத் தமிழர்களின் பிரச்னை தீர உதவும் என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கின்றது. நாம் செய்ய வேண்டியது, வேறு வகைப் பணிகள். மற்றபடி அறைக்குள் கவிதை படித்துக் கொண்டிருப்பதால், விளைவில்லை என்பது என் எண்ணம்.

* சென்ற வருடம் ஒரே ஒரு முறை மட்டும், கவியரங்கு ஒன்றுக்கு கலந்து விட்டு, 'நிலவொளி நிழல்' கவிதை கொடுத்தேன். காட்டில் பெய்த மழையாய்க் கவனிப்பாரற்று போய் விட்டது. :(

* நன்றியுரை சொல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே வெள்ளை நிறத்தொரு பூனை, மீட்டிங் கேட்டுக் கொண்டிருந்தது, சுவாரஸ்யமாக இருந்தது. உளவுத்துறை பூனைப்படையில் இருந்து ஆள் அனுப்பி இருப்பார்களோ என்றோர் எண்ணம் வந்தது.

* சில செல் நிழல்கள் :


























3 comments:

Veera said...

அவரு பேரு சிவசுவா.. ரொம்ப நல்லா பேசுனாரு!! அதுக்குப் பின்னாடி வந்த மலையாளப் பேச்சாளர், சம்சாரிக்க ஆரம்பிச்சதும்தான், எனக்கு லைட்டா கண்ண கட்டுறது மாதிரி இருந்துச்சு.. :D

நானும் பதிவு எழுதிட்டேன் (ஒருவழியா!)..ஆனா, அலுவலக வலைபதிவுல போட்டிருக்கேன். நாளைக்கு, என்னோட பிளாக்கர்ல போட்டுடறேன்!

Unknown said...

நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்" கதை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் படித்த போது படித்தேன்.மிக அருமையான நாவல்.அதில் கோழி இறகை வைத்து காது குடைந்து கொண்டு வரும் பாட்டியை என்றும் மறக்க முடியாது."பள்ளிகொண்டபுரம் படித்ததில்லை".வாங்கிப் படிக்க வேண்டும்.உங்கள் பதிவு பழைய நினைவுகளை தொட்டுப் பார்த்து விட்டது.
நன்றியுடன்
பாஸ்கர்.

இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

உங்க பதிவையும் படிச்சாச்சு..!!!

***

அன்பு பாஸ்கர்...

அவர்கள் திரவியின் பாட்டி. பள்ளிகொண்டபுரம் படியுங்கள். நன்றாக இருக்கும். நன்றிகள்.