Tuesday, September 05, 2006

அன்புத் தோழி, திவ்யா..!

திவ்யாவை எனக்கு கொஞ்ச நாளாய்ப் பிடிப்பதில்லை. கொஞ்ச நாளாய் என்றால், அரையாண்டுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டதிலிருந்து. எப்போதும் நான் முதல் ரேங்க்கும், திவ்யா இரண்டாம் ரேங்கும் வாங்குவது என்பது எழுதப்படாத ஒப்பந்தம். இந்த தடவை அது மாறி விட்டது. திவ்யா என்னை விட நான்கு மதிப்பெண்கள் அதிகம்.

வெறும் நான்கு..! அதற்கே அப்பா என்னை பிலுபிலுவென பிடித்து விட்டார்.

"ஏண்டா..! நாலு மார்க் கம்மி..? இப்ப நாலு மார்க் கம்மி. இது அடுத்த பரிட்சையில நாற்பதாகும். அப்புறம் நானூறாகும்..உனக்கு இந்த தடவை சைக்கிள் கிடையாது..."

இது என்ன டைப் progression என்றே புரியவில்லை. கணக்கு டீச்சராய் வர வேண்டியவர், பேங்கில் உட்கார்ந்து ஊரார் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார். சைக்கிள் வேற போச்சு...!!

கணக்கு டீச்சர்..! எல்லாம் அவரால் வந்தது தான். ஸ்டெப் மார்க் போடாம என்ன திருத்துகிறார்? ஒரு கணக்கிலே, - பார்க்காம விட்டுட்டேன். நியாயமா, அதுக்கு ஸ்டெப் மார்க் உண்டு. எனக்கு மட்டும் கிடையாதாம். ஏன்னா நான் நல்லா படிக்கிற பையனாம். இந்த careless mistake மறுபடியும் பண்ணக் கூடாதுனா, இந்த தண்டனை அனுபவிச்சே ஆகணுமாம்.

அவரால, இப்பொ ஈவ்னிங், ஸ்போர்ட்ஸ் கட்டு. சண்டே மூவி கட்டு. இப்பவே, ஸ்கூல்ல, பெரிய அவமானமா போச்சு. அவனவன் சிரிக்கிறான்.

அடுத்த பரீட்சையில, மட்டும் ரேங்க், எடுக்கலைனா, வீட்டை விட்டு ஓடிப் போயிட வேண்டியது தான். மெட்ராஸ் போயி, ஏதாவது ஒரு வேலை தேடி, அப்புறம் பெரிய பணக்காரனா ஆனப்புறம் தான் திரும்ப இங்க வரணும். போன தீபாவளிக்கு ரிலீஸான படத்துல தலைவர் அப்படித் தான் செய்வார். சூர்யாகிட்ட இதப் பத்திப் பேசணும். அவன் தான் ஆரம்பத்தில் இருந்து, இப்படி பண்ணலாம் என்று சொல்லிட்டு இருக்கிறான்.

ருணுக்கு என்ன ஆச்சு என்றே புரியவில்லை. நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தான். மேத்ஸ் டவுட் எல்லாம் சொல்லித் தருவான். எங்க வீட்டிலிருந்து, மூன்று தெரு தள்ளி தான் அவங்க வீடு. அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஆன்டி செய்கின்ற இனிப்பு ஊத்தப்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவனும் எங்க வீட்டுக்கு வந்தான்னா சும்மா இருக்க மாட்டான். எங்க அம்மாவே ப்ரிபேர் பண்ற, ஊறுகாய் ஒரு மூடி காலி பண்ணுவான். அப்புறம், ரெண்டு நாள் ஸ்கூலுக்கே வராம டாய்லெட்லயே இருப்பான்.

சுதாகிட்ட பேசும் போது தான் தெரிந்தது. வருணை விட, நான் அதிக மார்க் எடுத்ததால் என் மேல் வருத்தமாக இருக்கிறான் என்று. இது அன்புவிடம், சுதா பேசும் போது சொன்னானாம். டேய் முட்டாள், இதுக்கு நான் என்னடா பண்ண முடியும்னு கத்த வேண்டும் போல் இருந்தது.

னக்கு ஒரே பயமாயிருக்கு...! நான் சூர்யாகிட்ட ஊரை விட்டு ஓடிப் போகிறதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, திவ்யா வந்து விட்டாள். அவள் எதுவும் சரியாக கேட்கவில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவள் அதைப் பற்றி எதுவும் என்னைக் கேட்கவில்லை. ப்ரீ- Annualக்கு எப்படி ப்ரிபேர் பண்ணுகிறாய் என்று தான் கேட்டாள். இருந்தாலும் அவள் எதுவும் வீட்டில் போய் சொல்லி விடக் கூடாதே..!

பிள்ளையாரே, அவள் அப்படி எதுவும் வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டும். நான் தான் ப்ரீ- Annual -ல் first ரேங்க் வரணும். அப்படி நடந்தா, உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன். ஏன்னா, தலைவர் அப்படித் தான் ஒரு வருஷம் பொங்கலுக்கு வந்த படத்தில் வேண்டிக் கொள்வார். அவர் வேண்டின மாதிரியே நடக்கும்.

ன் இந்த மாதிரி எல்லாம் திங்க் பண்றான்? யார் இந்த மாதிரி எல்லாம் சொல்லித் தருகிறார்கள்? நல்ல வேளை நான் கேட்டதால், நல்லதாகப் போனது. வேறு யாராவது கேட்டிருந்தால், நேராக வீட்டிற்குப் போய் சொல்லியிருப்பார்கள். அங்கிள் பெல்ட் பிய்யப் பிய்ய அடித்திருப்பார். வருண் நல்ல பையன். இந்த ப்ரி- Annualல அவன் first ரேங்க் வாங்கட்டும். அப்புறம், நம்மிடம் மீண்டும் நன்றாகப் பழகுவான். அப்போது, அவனைப் பேசித் திருத்த வேண்டியது தான்.

க்ஸஸ்...! நான் தான் இப்ப first ரேங்க்..!

நாந்தான்...! நாந்தான்...!

அப்பா சைக்கிள் வாங்கித் தந்திட்டார்..! ஆனா இதில் நான் first யாரை வெச்சு ஓட்டப் போறேன் தெரியுமா..? திவ்யாவைத் தான். ஏன்னா, சுதா நேத்து சொன்னாள். நான் எப்படி first ரேங்க் வாங்கினேன் என்று. திவ்யா நாலு 1 மார்க் கேள்வி வேண்டுமென்றே, கணக்குப் பரிட்சையில் விட்டு விட்டாளாம். என் ப்ரெண்டு திவ்யாவை விட்டு ஓடப் பார்த்தேனே...! சே...!!

"கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா..?" திவ்யா தான் கேட்கிறாள்.

உனக்கில்லாத்தானு சொல்லி விட்டு, சைக்கிளைக் கொடுத்து ஓட்டச் சொல்லலாம் என்று நினைத்தேன். பிறகு, அவளை front-ல உட்கார வைத்து, சைக்கிளை ஓட்டினேன். ஏன்னா, ஒரு தமிழ்ப் புத்தாண்டுக்கு வந்த படத்தில், தலைவர் அப்படித்தான் கதா நாயகியை வைத்து சைக்கிள் ஓட்டுவார்.

"றெக்கை கட்டிப் பறக்குதடா..."

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

5 comments:

புதுமை விரும்பி said...

நன்றாக இருந்தது கதை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இரா. வசந்த குமார். said...

நன்றி..புதுமை விரும்பி...

ராம்குமார் அமுதன் said...

நல்ல கதை..... அப்ரோச் வித்தியாசமாக இருந்தது..... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

இரா. வசந்த குமார். said...

நன்றி...அமுதன்...

பழூர் கார்த்தி said...

உங்கள் வேகமும், ஆர்வமும் வியக்க வைக்கிறது. இது இம்மாத போட்டியில் நான்காவது படைப்பு. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !

***

"கணக்கு டீச்சராய் வர வேண்டியவர், பேங்கில் உட்கார்ந்து ஊரார் பணத்தை எண்ணிக் கொண்டிருக்கிறார்." - ரசித்த வரிகள்...

***

முடிவு, எதிர்பார்த்ததே.

***

போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை
இங்கே பாருங்கள் !!