Thursday, July 02, 2009

கதைகள் வந்த கதைகள்.



ரையாடல் போட்டிக்கு எழுதிய இரண்டு சிறுகதைகள் எங்கிருந்து உதித்தன என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

மனையியல்.

சென்ற ஆண்டு மத்திய மாதங்களில் ஏதோ ஒன்றில் அனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு அனந்தபுரி எக்ஸ்ப்ரஸில் சென்று கொண்டிருந்தேன். அது எழும்பூர் வரை செல்லும். நான் மதுரையில் இறங்கிக் கொண்டு, பின் பேருந்துப் பயணம் செய்வேன்.

அந்த பயணத்தில், நெல்லை தாண்டி, வள்ளியூர் அருகில் என்று நினைக்கிறேன். ஒரு குட்டி ஸ்டேஷனில் கதைப் பெரியவர் ஏறினார். அவர் எங்கள் கம்பார்ட்மெண்ட்டில் விற்கும் போது தான், அவரைக் கவனிக்க முடிந்தது. கதையில் சொல்லிய அதே வர்ணனை தான்.

இட்லி பாக்கெட்டும் நான் வாங்கியது தான்.

அப்போது எழுந்த கேள்வி தான் 'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

அந்த கேள்வி இத்தனை மாதங்களாக எங்கோ ஒரு மன மூலையில் உறுத்திக் கொண்டே இருந்திருக்கின்றது. எப்படியாவது இறக்கி வைக்க வேண்டிய தவிப்பு இருந்து கொண்டே வந்தது.

கதைக்கும் அந்த சூழலுக்கும் இருந்த ஒரே தொடர்பு, இந்த கேள்வி தான்.

'இவருக்கு ஏன் இந்த வயதில் இந்த நிலைமை?'

மற்றபடி அந்தக் கேள்வியைச் சுற்றி வரைந்த கதை வட்டம் முழுக்க முழுக்க தற்செயலானது. அதுவே படைப்பின் அந்தரங்க ரகசியம் எனலாம்.

கதை சொன்னாலும் லேசாக ஒரு மனித அருமையைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை அந்தக் கதையில் எட்டிப் பார்க்கின்றது. கிழவர் மனதிலிருந்து இறங்கிப் போய் இப்போது கதையில் உறைந்து போய் விட்டார்.


ஓர் உரையாடல்.

சிறுகதை எழுதத் துவங்கிய ஆரம்ப நாட்களில் வெறும் உரையாடலாகவே சில எழுதினேன். அது எனக்குப் பிடித்திருந்தது. காரணம் வர்ணிக்க வேண்டிய அவசியமில்லை; பாரா பாராவாக எழுதிக் கொண்டு கதை சொல்லும் உத்தி சவாலானது அல்ல என்பது என் அபி.

உரையாடல்கள் மூலமாகவே யார் பேசுகிறார்கள், என்ன சூழல் போன்றவற்றைப் படிப்பவர் மனதிலேயே அவரே உருவகித்துக் கொள்ள வைப்பது தான் உண்மையான சவால் என்று எனக்குப் பட்டது; படுகின்றது.

வெகு நாட்களுக்குப் பின் அந்த வகையில் எழுதிய ஒரு கதை இது.

கதை எழுதிய நாளுக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை ஊருக்குச் சென்றிருந்தேன். பாலாஜி காலையில் ஏழு மணிக்கு அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாடக் கூப்பிட்டான்.

அந்த ஞாயிறு அதிகாலையில் முகம் மட்டும் கழுவிக் கொண்டு போகையில், வழியில் அந்தக் காட்சி கண்பட்டது.

ஞாயிறின் பிஸியான கறிக்கடை. கறிக்கடைக்காரர் வெட்டிக் கொண்டிருக்கிறார். அவர் முன்னால், பத்திரமான தொலைவில் ஒரு நாய் வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. கொஞ்சம் தள்ளி ஓர் ஆடு கயிற்றால் ஒரு மரக் குச்சியில் கட்டப்பட்டு, தன் முறைக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.

நடக்கும் போது, கடக்கும் போது, சடாரென இந்த மூன்று பேரும் மனதில் பதிந்து போனார்கள். அந்த காட்சி அப்படியே பதிவாகி விட்டது.

பிறகு நான் பாட்டுக்கு போய், உடல் களைத்து விழும் வரை விளையாடி, வீட்டுக்குத் திரும்பி, குளித்து, உண்டு, ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாடிப்படியில் உட்கார்ந்த போது, அந்தக் காட்சி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது.

உடனே ஒரு பரபரப்பு; இதை எழுத வேண்டும். எழுதியேயாக வேண்டும். அந்த குறுகுறுப்பு வந்து விட்டால், படைப்பாளியால் சும்மா இருக்க முடியாது. கர்ப்ப வலி போல. வெளியே தள்ளியாக வேண்டும். இல்லாவிட்டால் சும்மா உட்கார முடியாது.

எப்படி எழுதலாம் என்று யோசிக்கும் போது சில கருத்துக்கள் தோன்றின.

நாய் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது; ஆடும் கறி வெட்டுபவரையே பார்க்கின்றது. இரண்டுமே அவரது கருணையையே எதிர்பார்க்கின்றன. ஆனால் இரண்டின் கோரிக்கைகளும் Mutually Exclusive.

அதாவது நாய்க்கு கருணை காட்ட வேண்டுமெனில், அந்த ஆட்டை வெட்டியாக வேண்டும். அப்போது தான் சிந்தும் சிதறல்களை அந்த நாய் கவ்விக் கொண்டு பசியாறும். ஆட்டுக்கு கருணை காட்ட வேண்டுமெனில், அதை வெட்டக் கூடாது. அப்போது நாயைப் பட்டினி போட்டாக வேண்டும். கறி வெட்டுபவர் என்ன செய்ய வேண்டும்? அவர் அவர் தொழிலைப் பார்க்கிறார்.

இந்த நிலைமையில் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்ட சூழலில் சிக்கிக் கொண்ட ஆடும், நாயும் பேசினால் என்ன பேசும் என்ற கேள்விக்குப் பதிலே, இந்த உரையாடல்.

அந்த உரையாடலில் கொஞ்சம் தத்துவம் கலந்தது முற்றிலும் தற்செயல். 'ரொம்ப வலிக்குமா?' என்ற முதல் வரி தான் நான் யோசித்தது. அதைத் தொடர்ந்து வந்து விழுந்த அத்தனை வரிகளும், நடையும் முழுக்க முழுக்க அந்த நேரத்து மன வரிகள்.

ப்போது இந்த விளக்கங்கள் எதற்காகவாம்?

கதைகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. கொஞ்சம் கவனித்தால் போதும். சுவாரஸ்யமான கதைகள் சொல்லலாம் என்பதைச் சொல்வதற்கே!

படம் நன்றி :: http://www.suzannesutton.com/_borders/boy_desk_thinking.jpg

Wednesday, July 01, 2009

இன்னுமொரு இருநூறு - உரையாடல் போட்டி பற்றி!

ரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன் துவங்கி, பல வகைகளில், பல பதிவுகளில் விளம்பரப்படுத்தப்பட்டு, ஏறத்தாழ ஜூஜூ லோகோ திரட்டிகளின் 'இந்த வார ...' போட்டோக்களுக்கு இணையாக காட்சியளிக்க, கிட்டத்தட்ட தொடர்பதிவுகளுக்கு சிக்கிய சீமான்களை இழுத்துப் போட்டு சங்கிலியில் கோர்க்கும் வழிகளுடன், கிடைத்தவர்களெல்லாம் எழுதிக் குவித்த இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகளில் முதலில் அடிபட்டது சிறுகதை.

பல ஆரம்ப ஆர்வங்கள் தெரிகின்றன.

நல்ல வாசிப்பனுபவம் இதுவரையில் கிடைத்திராத பலரும் சிறுகதை முயற்சியில் இறங்கியதில், பல படைப்புகள் தினம் எழுதும் பொதுவான பதிவுகள் போன்றே இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. காரணம், இது ஒரு துவக்கம் மட்டுமே! இப்படித்தான் எதுவும் துவங்கும். மெல்ல மெல்ல எழுதி எழுதிப் பழக, சூட்சுமங்களும், நுட்பங்களும் புரியப் புரிய நல்ல கதைகள் இவர்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. ஆனால், அதற்கு தொடர்ந்து எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது.

'சிறுகதைகளை விமர்சிப்பது எப்படி?' என்று இணையத்தில் தேடிப் பார்த்தால், மிக விளக்கமாகச் சொல்லித் தருகிறார்கள். ஆனால் அப்படி விமர்சனம் செய்ய ஆரம்பித்தால், 219 கதைகளுக்கும் இரண்டு வாரங்களுக்கும் மேல் ஆகி விடும் என்பதால், அந்தளவிற்கு நேரமும் இப்போது இல்லாததால், சுருக்கமாக ஒரு பொதுவாக எழுத விரும்புகிறேன்.

இத்தனை படைப்புகள் வந்ததற்கு வெட்டிப்பயல் சொன்ன காரணத்தை விட எனக்குத் தோன்றுகின்றன வேறு சில!

2006-ல் தேன்கூடு போட்டிகள் நடத்தப்பட்ட போதை விட, இப்போது பதிவர்கள் எண்ணிக்கை மிகக் கணிசமாக அதிகமாகி இருப்பது ஒரு காரணம். அப்போட்டிகளில் மீண்டும் மீண்டும் எழுதியவர்களே எழுதினார்கள்; எழுதினோம். புதியவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

சென்ற வருடம் 'சிறில் அலெக்ஸ்' சிறுகதைப் போட்டி நடத்திய சமயத்தில், ஒப்பீட்டளவில் இன்னும் கொஞ்சம் பதிவர்கள் அதிகமாயிருந்தாலும், அங்கே ஒரு பெரிய தடைக்கல்லாய் இருந்தது ஒரு நிபந்தனை. 'கதைகள் அறிவியல் பின்புலத்தில் இருக்க வேண்டும்'. நிறைய பேரை ஜகா வாங்க வைத்தது.

உரையாடல் போட்டியில் அத்தகைய நிபந்தனைகள் இல்லை. இதற்கே இத்தனை படைப்புகள் வந்திருக்கின்றன என்றால், 'தளத்திற்கு ஒரு கதை' என்ற முக்கிய இடர்ப்பாடு இல்லாமல் இருந்திருந்தால், இன்னுமொரு இருநூறு நிச்சயமாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. ஆனால் அவற்றில் எத்தனை சிறுகதைகளாக இருந்திருக்கும் என்பது ?-யே!

பதிவர்கள் அதிகமாகி, தமது இருப்பை அவசரமாகப் பதிவு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் எழுதியிருக்கிறார்கள் என்று தெரிகின்றது. பரவாயில்லை, மெருகேற்றிக் கொள்ளலாம்.

ரவி சொன்னது போல் போட்டி என்றதும், எல்லோரும் காவியம் படைக்கும் ஆசையில் சோகமும், விரக்தியும், மரணமும் சொல்ல முயலும் போது, ஒரு நகைச்சுவையோ, சரித்திரக் கதையோ, பேய்க் கதையோ வரவில்லை என்பது யோசிக்க வைக்கின்றது. ஒரு சம்பவத்தைச் சொல்வதா, ஒரு வாழ்க்கையையே சொல்வதா என்ற கேள்விகள் நிறைய பேருக்கு வந்திருக்கின்றன. பலர் கடைசி வரித் திருப்பத்தை முதலிலேயே வைத்துக் கொண்டு கதை கட்டியிருக்கிறார்கள் போல் உணர்கிறேன்.

மொத்தக் கதைகளில் பெரும்பாலும் தன்மை நிலையில் (First Person) எழுதப்பட்டிருப்பதன் மனக் காரணங்களைச் சிந்தித்துப் பார்க்க ஆசை.

கிட்டத்தட்ட பதினோரு கதைகளுக்கு, ஒன்றைத் தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடுவர் குழுவிற்கு என் வாழ்த்துக்கள் மற்றும் வருத்தங்கள்.

-- தொடரும்.

மேற்கூறிய அத்தனையும் போட்டியில் பங்கெடுத்தவன் (2) என்ற முறையில் எனக்கும் பொருந்தும்.

Friday, June 26, 2009

The Emperor Died. ;(



நேற்று ஜாக்ஸன் இறந்து விட்டதாகச் சொல்லிக் கொண்டார்கள். எப்படி அவரெல்லாம் இறக்க முடியும்?

உங்களைப் பற்றிய அத்தனை செய்திகளையும் காலம் அரித்துத் தின்று விடும். காற்றின் அணுக்களில் எல்லாம் உங்கள் கான ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.

You deserve a best place more than any popper, jack. I am so sad by hearing this. Thats y i cant speak in my lang.

Good Bye Jack. I kiss you for whatever u did for us in our teeny days and nights.

;(

http://www.arrahman.com/v2/news/news-165.html

http://www.michaeljackson.com/

http://kaalapayani.blogspot.com/2007/04/blog-post_11.html

v

நன்றி : http://www.topnews.in/light/files/michael-jackson.jpg

Thursday, June 25, 2009

32 கேள், 32 பதில்.

ண்பர் யோசிப்பவர் 32 கேள்வி-பதில் தொடரைத் தொடரச் சொல்லிக் கேட்ட போது உடனே 'ஓ.கே.' சொல்லி விட்டேன். எழுதும் போது யோசிக்க வேண்டியிருக்கின்றது. நம்மையும் மதித்துக் கூப்பிடுகிறார் என்று சந்தோஷம் இருக்கின்றது. கொஞ்சம் பெரிய பதில்கள் வந்தால், படித்துத் தொலைத்து விடுங்கள்.

இனி..!


1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
முதலில் உண்மைப் பெயர்க் காரணம். வாத்தியாரின் செயற்கைகோள் பற்றிய புத்தகம் படித்து விட்டு, அம்மா வாத்தியாரின் ரசிகை ஆனார். பின் அவரது மற்ற நாவல்களையும் படித்து விட்டு, எல்லா அக்காலப் பெண்கள் போல், 'வசந்த்' மேல் ஈர்ப்பு. எனவே 'சுஜாதாவின் வசந்த் போல் வர வேண்டும்' என்று சொல்லி பெயர் வைத்தார்களாம். உண்மையில் அப்படி இருக்கிறேனா? நிலவரம் அவ்வளவு சிலாக்கியம் அல்ல. ரோகிணி நட்சத்திரம் என்பதால், கிருஷ்ணன் பேர் வர வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பேர் சூட் ஆகின்றது என்பார். கடைசியில் ஜீன்களில் வாத்தியார் அமர்ந்து இப்போது எழுதும் எதிலும் அவர் அடையாளம் வந்து விடுகின்றது என்று எல்லோரும் சொல்கிறார்கள். கண்ணன் என் காதலன் ஆகியிருக்கிறான்.

'காலப்பயணி' - இது எப்படி வந்தது என்று எனக்கும் ஆச்சரியம். சடனாக வந்து விட்டது. ப்ளாக் பேர் வைக்கும் போதே சைன்ஸ் பிக்ஷன் எழுதுவேன் என்று ஏதோ ஒரு குட்டி தேவதை காதில் சொல்லியிருந்தால் 'சூ...சூ..' என்று சொல்லியிருப்பேன். ஒரு வேளை, ஐன்ஸ்டீன் மேல் இருக்கும் அடங்காத ஆர்வம் காரணமாக அடிமனதில் இந்தப் பேர் உதித்திருக்கலாம்.

ரெண்டு பேரும் பிடித்திருக்கின்றது. உண்மைப் பெயர் எந்த மத, இன, சாதி அடையாளமும் இல்லாமல் இயற்கையைக் காட்டுகின்றது. மற்றொன்று எனக்கு மிகப் பிடித்த இயற்பியலைச் சுட்டுகின்றது.

2) கடைசியா அழுதது எப்போது?
இப்போதெல்லாம் எதற்கும் நெகிழும் மனநிலை சட்டென வாய்த்து விடுகின்றது. கடைசியாக மனம் விட்டு அழுதது, 'தாய் தின்ற மண்ணே' கேட்டு! அருண்மொழித் தேவரும், ஆழ்வார்க்கடியானும், வந்தியத்தேவனும், பெரிய கொடும் வேளாரும், பல்லவேந்திரனும், ஊமச்சியும், சமுத்திரகுமாரியும், அநிருத்தப் பிரம்மராயரும், தாமரைப் பாத யானை விலகலில் ரகசிய பதவியேற்பு மறுப்பும், யானையிறவு வரை புயலாய் ஓடும் யானையும்....ஈழம் கனவாய்ப் போனது, பாடலைக் கேட்கும் போது நீராய்க் கசிகின்றது.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
இதற்கொரு குட்டிக் கதை இருக்கின்றது.

மெட்ரிக்கில் குட்டி வகுப்புகள் படிக்கும் போது கையெழுத்து மகா கேவலமாய் இருக்கும். ஹோம் வொர்க் எழுதுவதற்காக ஜே.எஸ். (இப்போது டெண்டிஸ்ட்!) இங்க்லீஷ் நோட்டை வாங்கி வரும் போது, அம்மா பார்த்து பார்த்து ஆற்றுவார்கள். 'இவன் கையெழுத்து பார். எவ்ளோ அழகா முத்து முத்தா இருக்கு. உன் கையெழுத்து பார். கோழிக் கிறுக்கலாய் இருக்கு!' கோழி எப்போது கிறுக்கியது? எதற்காக கிறுக்கியிருக்கும்? போன்ற அத்தியாவசியக் கேள்விகள், தோசைக் கரண்டி விரல் முட்டிகள் மேல் விழுந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விடும்.

மூன்றாம் வகுப்பில் ஒரு டீச்சர் தான் வேண்டிக் கொண்டு வந்தது போல், ஒவ்வொரு நாளும் காண்டு வைத்து அடிப்பார்கள். ஒருமுறை என் கண்ணாடி ஸ்கேலையே வைத்து முட்டி முட்டியாய் அடித்து உடைந்து விட, வீட்டிற்கு வந்து அப்பாவிடம் உடைந்த காரணம் சொல்லி அழ, அடுத்த நாள் மர ஸ்கேல் வாங்கிக் கொடுத்தார்கள்.

ஆனால் அத்தனை பட்ட பாடுகளுக்கும் பலன் அற்புதமாய் இருந்தது. கையெழுத்து மிக அழகாய்ச் சீரானது. எட்டாம் வகுப்பில் ட்யூஷனில் இளங்கோவன் சார் 'ஓவியம் வரைந்து பழகினால் விரல்கள் நன்கு வளையும். கையெழுத்தும் அழகாகும்' என்று ஒரு பிட்டை அள்ளிப் போட, அப்போது ஓவியக் கிறுக்கு ஆரம்பமாகி, வகுப்பிலேயே ரெண்டாவது அழகான கையெழுத்தானது. முதல் ஒரு பெண். எம்.எம்.ஸி.யில் படித்து வில்லிவாக்கத்தில் ஜெனரல் மெடிசின் ப்ராக்டிஸ் செய்கிறார். இப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் வாங்கிப் பார்க்க வேண்டும். ஹா..ஹா..!

இப்போதும் அவ்வப்போது மனதில் இருக்கும் எழுத்துப் படைப்புகளின் பெயர்களை எழுதிப் பார்ப்பது வழக்கம். பிடித்தவர்கள் பெயரையும் எழுதி, 'பார்ப்பேன்.' :)

4) பிடித்த மதிய உணவு?
அம்மா செய்யும் எதுவும் பிடிக்கும். முதல் பச்சைப்பயறு குழம்பு. அடுத்தது அரிசிம்பருப்புச் சாதம். கொங்கு வட்டாரத்து உணவு. அதுவும் குக்கரில் முழுக்க சவுண்ட் விட்டு விடக் கூடாது. ரெண்டேமுக்கால் சவுண்டிலேயே அடுப்பை நிறுத்தி விட்டு, கொஞ்சம் ஈரம் இருக்கும் போதே, ஆவி பறக்க எடுத்து தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்க்காளி, கறிவேப்பிலை, பூண்டு எல்லாம் பருப்புடன் கலந்து மஞ்சள் மகிமையில் மஞ்சழுப்பு நிறத்தில் மணக்கும். நடுவில் குழி செய்து, நல்லெண்ணெய் ஊற்றி, ஈரத்துடன் கலந்து பிசைந்து, நக்கின் அடியில் பரப்பினால்....ம்ம்ம்ம்... ராகு, கேதுவே அமிர்தத்திற்கு இங்கு வந்திருக்கலாம்.

அப்புறம் வழக்கமான தமிழனின் பருப்பு சாம்பார் மிகப் பிடிக்கும்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
கொஞ்சம் சீரியஸா யோசிச்சுப் பார்த்தா கஷ்டம் தான். என் கேரக்டர் அப்படி.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
என்னங்க இப்படிக் கேட்டுப்போட்டீங்க..? கடல்ல குளிச்சத்தில்லீங்க. தட்டுத் தடுமாறி விழுந்து, புரண்டு எந்திரிக்கறதெல்லாம் குளியல்ல சேர்த்தி இல்லீங்க. நமக்கு நெம்ப பிடிச்சது அருவி தாங்க. மூணாறு டூர் போயிருந்தப்ப, நான் மட்டும் அந்தக் குளிரிலேயும், துண்டைப் போர்த்திக் கொண்டு, தங்கியிருந்த ஃபாரஸ்ட் ரிசார்ட் பின்னாடியே கொஞ்சம் தள்ளிக் காட்டுக்குள் இருந்த வெள்ளை அருவியிலே, 'இயற்கை குளியல்' போட்டு, வாய்க்கு வந்த பாட்டை நடுங்கும் குளிரில் பாடி... என்ன டைமுங்க அது.!

இப்ப இருக்கற மலை நாட்டுல, கல்லார்ல மீன்முட்டி அருவின்னு ஒண்ணு இருக்கு. அந்த அனுபவத்த தான் கீழே கண்ணிகளை க்ளிக் பண்ணி படியுங்களேன். அப்புறம் கோவைக் குற்றாலம், பாபநாசம் அகத்தியர் அருவி இங்கெல்லாம் குளிச்சிருக்கேனுங்க. அருவியில குளிக்கறது கூட வேணாம், நனையுறதப் பத்தி ஒரு பதிவு அப்புறமா போடுறேங்க.

http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_18.html

http://kaalapayani.blogspot.com/2009/01/blog-post_27.html

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
கண் கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடி : எதையாவது பண்ணனும்ன்னு அப்பப்ப தோன்றி ஏதாவது விசித்திரமாக கத்துக்க ஆரம்பிப்பது.

!பிடி: அப்படி ஆரம்பித்த எதையுமே முழுதாக முடிப்பதற்குள், அடுத்து சம்பந்தமே இல்லாமல் வேறு ஏதாவது பிடித்துப் போவது.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
சரியாகத் தெரியவில்லை. எங்க இருக்காங்களோ..? (இந்த இடத்தில ஒரு கட் ஷாட் வெக்கறோம். மேடம், 'நான் இங்க இருக்கேன்பா!'னு காலையில் எட்டு மணிக்கு பெட்ஷீட்ல இருந்து எட்டிப் பார்க்கறாங்க!)

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
அப்பா.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
என்பு தோல் போர்த்த உடம்பு, பழுப்பு ஜ, கட்டம் போட்ட அழுக்கு லு, கை வைக்காத ப, கலைந்த கேசம், தொங்கும் மீசை, முள் தாடி.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
கேட்பது : 'ஸ்ரீ ரங்க ரங்க நாதனின்' லூப்பில் வின் ஏம்ப்பில் ஓடுகின்றது. பத்து வருட வயதான க்ராம்ப்டன் க்ரீவ்ஸ்ஸின் சலிப்பில்லாத வொய்ட் நாய்ஸ்.

பார்ப்பது : தோஷிபா மானிட்டர். ஜப்பானிய மொழியில் 'ட' இல்லை. எனவே இனி 'தோஷிபா', 'தோக்கியோ' என்போம்.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
எப்போதும் சிவப்பு. I love RED.

14) பிடித்த மணம்?
பெட்ரோல் புகை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
தமிழ்ப்பறவை : ஏனெனில் நான் எதை எழுதினாலும், கமெண்ட் போடுகின்றார். ஏனெனில் மதுரை வழியாக வருகின்றேன் என்பதற்காக எனக்காக இரண்டு மணி நேரம் மதுரையில் காத்து, சுற்றி சில நூல்கள் வாங்கிப் பரிசளித்தார். ஏனெனில் எனக்குத் 'துணைவி'யான ஓவியத்தில் இவர் பிஸ்தா. ஏனெனில் கேட்டவுடன் சரியென்றார்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
யோசிப்பவர் என் கதை ஒன்று முதல் பரிசுக்குத் தேர்வானது குறித்து காட்டமாய் எழுதியது எனக்குப் பிடித்திருக்கின்றது. அப்படி எழுதும் முன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டதால், கொஞ்சம் தயாராக இருந்தேன். உண்மையான விமர்சனவாதி. இவரது குறுக்கெழுத்துப் பதிவுகள் பக்கம் நான் எட்டிப் பார்ப்பதில்லை. வாரமலர் குறுக்கெழுத்தோடு என் தளம் ஓவர். மூளைக்கு வேலை கொடுக்கும் இவரது பதிவுகளைப் பார்த்தால், தலைகீழாக ஓடி விடுவேன். இவர் சொல்லிய முறையால், முதல் தடவையாக அச்சில் என் கதை ஒன்று உருவெடுத்தது.

பிடிவாதமாக அறிவியல் புனைகதை மட்டும் எழுதுகிறார். சகஜமான சமூகக் கதைகள் முயற்சி செய்யலாமே என்று சொன்னால், 'நிறைய பேர் இருக்கிறார்கள். தனித்திருக்கிறேன்'. சமீபத்தில் இருவரும் ஆளுக்கு ஒரு சவால் விட்டிருக்கிறோம்.

17) பிடித்த விளையாட்டு?
Batடும் Ballலும் இடம்பெறும் விளையாட்டுகள்.

18) கண்ணாடி அணிபவரா?
இதுவரை இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
'எல்லா' மாதிரியான படங்களும் பிடிக்கும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?
தியேட்டரில் கடைசியாக திருச்சி ஸ்டாரில் 'பசங்க'. நெட்டில், எஸ்டெல்லா வாரனின் சில வீடியோக்கள். (யூட்யூபிலேயே இருக்கின்றன.) எனக்கென்னவோ எஸ்டெல்லா பார்த்தால், கொஞ்சம் கொஞ்சம் ஸ்ரேயா ஜாடை இருக்கின்றது. முழுப்படம் என்றால் Sex and Zen II.

21) பிடித்த பருவ காலம் எது?
சந்தேகமே வேண்டாம். கொட்டும் மழைக் காலம் தான்.

மழை ரகளை.

மழை பெய்தலினால்...!

ஒரு மழை நாளின் இரவில்.

இவன்..!

தூறல் போடும் மேகங்கள்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
நரசய்யாவின் 'மதராசபட்டினம்', Dubliners by James Joyce, பைபிள் புதிய ஏற்பாடு, கமலாம்பாள் சரித்திரம், ஸ்ரீ ரங்க மகாத்மியம், குறிஞ்சி மலர் - நா.பா., பழைய இதழ்கள்.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
பிடித்து, காட்சிப்படமாக வைத்த படத்தை விட வேறொரு படம் பிடித்துப் போனால் அதன் மேலே இதை வைப்பேன். இப்போது இந்தக் குட்டி க்யூட் கண்ணன் இருக்கிறான். இவனின் மேனுஃபேக்சரர்களைக் காண ஆசை.



24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
எல்லா சத்தமும் பிடிக்கும். சத்தங்கள் அனைத்தும் மெளன விரதம் இருந்தால் எனக்கு புவ்வா கிடைக்காது. ஆடியோஃபைல் தொழில். எனவே சத்தங்களே என் சாப்பாடு. (ஹை!).

பிடிக்காத சத்தம் : பொய்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
கற்பனையில் எங்கெங்கோ. நிஜத்தில் ஹைதை.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
இருக்கிறது என்று தான் நினைக்கிறேன். அதைத் தேடித் தான் 8-வது கேள்விக்குப் பதில் படி நடந்து கொள்கிறேன். இன்னும் கண்டு கொண்ட பாடில்லை.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ரொம்ப நேரம் யோசிச்சேன். தெரியவில்லை.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
ஷ்.....!!

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
காடுகள்; அருவிகள் இருக்கும் இடங்களெல்லாம் என் தலங்கள்.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
கதைகளில் வருகின்ற கேரக்டர்கள் எல்லாம் பின்னே யாராம்?

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
ஒன்றைத் தவிர மற்ற அத்தனையையும்!

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
நூறு ஆண்டுகள், வெறும் 36525 நாட்கள்.

கூண்டினுள் பக்ஷி - ஒரு பதிவர்.



ரு பதிவர். வலைச்சரத்தில் நவீன கவிஞராக அடையாளப்பட்டவர். ஆதியில் பொழுது போகாத நேரங்களில், பெய்ண்ட் ப்ரஷ் வராத பொற்காலங்களில் வாட்டர் கலர் தெறித்த ஓவியங்களை அவ்வப்போது பதிவில் இட்டு ஆச்சர்யப்படுத்துவார். பழைய தாகம் தீராமல் தூரிகை தொட்டு காரிகைகள் வரைந்து ஜிலுஜிலுப்பூட்டுவார். சார், தற்போது தற்காலிக சிறையில்!

சார் பணியாற்றும் தொழிற்சாலையில் கடைகட்ட ஊழியர்கள் கல்யாணப் பந்தி லிஸ்ட் நீளத்தில் கோரிக்கைகளைப் பட்டியலிட்டு, மேலிடத்திற்கு அனுப்ப, அவர்கள் தலைகளை இடதும், வலதுமாக ஆட்டித் தொலைக்க, மோட்டார்கள் நிறுத்தப்பட்டன; ஃபேக்டரி சங்கொலி உச்சமாக ஒலிக்கப்பட்டு, கேட்டுகள் இழுத்துச் சாத்தப்பட்டன.

சார் இடை நிலை பதவியில் இருக்கிறார். ரெண்டாவது ஷிஃப்டில் உள்ளே போனவர் மூடப்பட்ட கதவுகளுக்குள் மாட்டிக் கொண்டுள்ளார். வெளியே விட மறுப்பதற்கு ரெண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, 'மெளன ராகம்' மோகன் போல் இவர்களுக்கு சராமரியாக அடி விழ அத்தனை சாத்தியங்கள் இருக்கின்றன; இரண்டாவது, இவர்களும் போய் விட்டால், ப்ரொடக்ஷன் முழுக்க நின்று போய் விடும் அபாயம் சூழ்ந்திருக்கின்றது. எனவே மேனேஜ்மெண்ட் இவர்களை உள்ளேயே உண்ண உணவூட்டி, படுக்க பாய் காட்டி, பத்து மணி நேரம் ஆபரேட்டர்கள் வேலையைச் செய்யச் சொல்லி விட்டது.

சாருக்கு முதலில் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கின்றது. அனலடிக்கும் வெயில் காலத்தில் ஃபுல் ஏ.ஸி.யில் இரவெல்லாம் படுத்துக் கொள்ள முடிகின்றது. அலுவலகமே சாப்பாடு போட்டு விடுகின்றது; தேடிப் போகும் அலைச்சல் இல்லை; இதுவரை செய்திராத கீழ்மட்ட அஸெம்ப்ளிங் வேலைகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு; கூட இருக்கும் அலுவலர்களுடன் இன்னும் நெருக்கம் ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பங்கள். ஆரம்பத்தில் திளைத்திருக்கிறார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு அலுக்கத் தொடங்கியிருக்கின்றது. தினம் இரவு மாமி மெஸ்ஸில், தோசை, இட்லி, சாப்பாடு சாப்பிட்டவர், இப்போது மூன்று வேளைகளும் பாவ் பாஜி, சப்பாத்தி என்று வெறுத்துப் போயுள்ளார். வெளியே பனியனோடு கூச்சல் போட்டுப் போராடும் ஒருவரிடம் ஓர் உதவி கேட்க, 'மென்னியைக் காட்டு; முறிக்கிறேன்!' பதில் கேட்டு பின்வாங்கியுள்ளார்.

குளியலறைகளில் கும்பல் கும்பலாக குளிக்க, கூச்சம் காணாமல் போக ஆரம்பித்திருக்கின்றது.. காலையில் நேரத்தில் எழுந்து, பத்து மணிகள் உடல் உழைப்பு கேட்கும் பணிகளில் ஈடுபட்டு, பத்து மணிக்கெல்லாம் படுத்தவுடன் கண்கள் செருகி, ஒரு வித என்.ஸி.ஸி. கேம்ப் அனுபவங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்.

நேற்று பேசும் போது, 'பதிவுலகம் எப்படி போய்க் கொண்டிருக்கின்றது?' என்று கேட்டார். 'உரையாடலுக்கு ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் நினைத்து வைத்திருந்தேன். எழுத முடியாது போலிருக்கிறது. நீ எழுதுகிறாயா?' என்று கேட்டார். 'ஆளை விடு..!' என்றிட்டேன்.

துவக்கத்தில் ஜிமெயில் கனெக்ட் இருந்தது. இப்போது அதையும் கட் செய்து விட, நகத்தைக் கடித்துக் கொள்கிறார். இடைவேளை நேரங்களை வீணாக்காமல், வான் பார்த்து, 'ஓ நிலாவே!' என்று கவிதை எழுதுகிறார். (வெளி வந்தவுடன் கண்டிப்பாக பதியப்படும் என்று உறுதியளித்துள்ளார்.) கொஞ்சம் சிவந்த இரத்தம் பாயும் நம் பதிவர், இப்போது முதலாளிகள் பக்கம் இழுத்துக் கொள்ளப்பட்டு, தொழிலாளர் போராட்டத்தில் பங்கு பெற முடியாமல் இருப்பதை நினைத்து மனம் அவ்வப்போது வெதும்புகிறார்.

திங்களில் ஆரம்பித்த ஸ்ட்ரைக் இன்று உச்சம் நோக்கி நகர்ந்து விட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் இப்போது யூனிஃபார்ம் போட்டு கோஷமிடுகிறார்களாம். துளியாய் அவர்களுக்குள் விரிசல்கள் ஏற்பட்டு, கொஞ்சம் பேர் வேலைக்குத் திரும்பலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். மேனேஜ்மெண்ட் சைடிலும் ரெண்டு அடி இறங்கி வந்திருக்கிறார்களாம். பொலிட்டீஷியன்கள் சிலர் வந்து சற்று சூடேற்றி விட்டுப் போயிருக்கிறார்களாம். கம்யூனிஸ்ட்கள் வலுவற்ற இப்பிரதேசத்தில் வேறெதோ இயக்கம் தீவிரமாக இந்த ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றது என்றார். அதிக கவலை ஏற்படுத்தும் மற்றொரு விஷயம், நாளை வெள்ளி.

நாளைக்குள் ஏதேனும் முடிவு தெரியாவிட்டால், அடுத்த இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க அலுவலகத்திலேயே கழிக்க வேண்டி வரும். தலையைப் பிய்த்துக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்.

சீக்கிரம் எல்லாம் நலமாக நிறைவுற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என்றேன்.

அவர் 'எந்தூர்' என்று மட்டும் கேட்காதீர்கள். சொல்ல மாட்டேன்.