Saturday, March 08, 2008

துரும்புப் பூ!



மெல்ல.. மெல்ல... தன் துடிப்பில் இருந்து விடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆயிரம் ஆயிரம் கரங்களின் மின்னல்கள் போல் பாய்ந்து வந்து கீறு இட்டு, கூறு போட்ட வார்த்தைகளின் வலி, ஏற்படுத்தும் வலி.. பிரம்மாண்டம்.

செதில் செதிலாய் சிதறத் தொடங்கியது. எத்திசையின் பக்கம் நகர்வது என்ற எண்ணங்கள் அற்ற நிலையில் துளித் துளியாய்ப் பொடிப் பொடியாய் நொறுங்கிக் கொண்டே இருக்கிறது.

கசக்கிப் பிசைந்து தூரத் தூக்கி வீசிய பின் கைகளில் ஒட்டியிருக்கும் பிசுபிசுப்பான சிவந்த இரத்தத் துளிகளை உதறிச் செல். காக்கைகளும், கழுகுகளும் காத்திருக்கின்றன், கூர் நுனி கொண்ட ஆயுதங்கள் கொண்டு கொத்திக் கொத்திச் சிதைத்து குதறித் தின்ன...!

பொல பொலவென உதிர்ந்து, தரையெங்கும் புள்ளிகளாய்ப் படம் போல் விரிகின்ற இதன் மேல் உனக்கு என்ன கோபம்? மிதித்துத் தேய்த்து, சிதறத் தெறிக்கும் சின்னச் சின்னத் துளிகளை அப்படியே விட்டுச் செல். ஈரம் வழிகின்ற நாக்கோடு காத்திருக்கின்றன வெறி மின்னும் கண்களோடு நாய்கள்.

வடிவமற்ற உருவை எடுத்துக் கொள்ளௌம் வகையில், கலைகின்ற இதன் துணுக்குகளை எப்படி கண் கொண்டு பார்ப்பாய்? நாக்கைச் சுழட்டிக் கொண்டு, கொடூரம் பூசிய கண்களோடு காத்திருக்கும் அந்தக் கரும்பூனை போன்றா?

மொழி அறியாத ஊமையாய் கதறுகிறதே கிழிந்து துண்டு துண்டாகும் போது, இதன் ரோமங்களை அள்ளி போர்வை செய்து கொள்ள பார்த்து வைத்திருக்கிறதே, இரத்த வெறி கொண்ட நரிகளும், ஓநாய்களும்... உன் செவி மடல்களில் பதியவேயில்லையா இதன் அலறல்?

நுரை கொண்ட வெள்ளமாய் தன் மேனியை எழுத்துக்கள் அடித்துச் செல்கையில் காற்றில் கரைந்து காணாமல் போகின்ற ஆவியைப் போல் இன்றி, சொத சொதவென கொழ கொழவென நுரைத்து, நிறைத்து, சொட்டுகின்றதே இதன் உயிர்த் துளிகளை, சேகரித்து வைத்துக் கொள்வாயா..?

மழை நின்ற பின், கொளுத்தும் வெயிலின் கொடூரத் தாக்கலுக்கு ஆளாகையில் குளிர் என சில துளிகளைத் தேடுகையில், உனக்கு உபயோகப் படலாம், இந்த இதயத்தின் ஈரம்....!

4 comments:

naan yaar said...

unga kaadhal padivugal elaam superr vasanth..and also unga payanathin pOdhu edutha padangal...:)

adutha murai ungalai paarkum pOdhu oru kelvi kenaum...:))

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை அவர்களுக்கு... மிக்க நன்றிகள்...

நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு புரிஞ்சிடுச்சு.... :-)

thamizhparavai said...

வரிகளைப் படித்து முடிக்கையில், மானிட்டர் ஓரம் வழிந்த துளிகளை நானென்ன செய்ய...?
இது நிகழ்வோ,புனைவோ...நன்றாக இருந்தது வசந்த்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

புனைவு என்று சொன்னாலும், நிகழ்வு என்று சொன்னாலும், உள்ளிருந்து 'கள்ளம் பறையண்டா மோனே..!' என்று ம.சா. சொல்கிறது.

என்ன சொல்ல நான்...?